தினமணி 04.02.2010
லாரி, ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் மாநகராட்சி கமிஷனர் ஆலோசனை
மதுரை, பிப். 3: தனியார் லாரி மற்றும் ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.
மதுரை நகருக்குள் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் வந்துசெல்கின்றன. வடமாநிலங்களைச் சேர்ந்த 300}க்கும் மேற்பட்ட லாரிகள் நகருக்குள் வருவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
இதையடுத்து, பார்சல் லாரி மற்றும் ஆம்னி பஸ் நிறுத்தங்களை நகருக்கு வெளியே கொண்டு செல்வதற்காக, மத்திய அமைச்சர் மு.க. அழகிரி முயற்சியால் ரூ.2 கோடி மதிப்பில் மாட்டுத்தாவணி, கோச்சடை, அவனியாபுரம் பகுதிகளில் லாரி நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டன. இங்கு சில வசதிகள் இல்லாததால், லாரிகள் அங்கு நிறுத்தப்படாமல் இருந்து வந்தது.
இதுதொடர்பாக தனியார் லாரி மற்றும் ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் மாநகராட்சி கமிஷனர் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.
இதன் முடிவில், நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக தனியார் லாரி மற்றும் ஆம்னி பஸ் நிறுத்தங்களை மாட்டுத்தாவணி பகுதிக்கு மாற்றம் செய்ய சங்க உரிமையாளர்கள் ஒப்புதல் அளித்தனர்.
தனியார் லாரி சங்க நிர்வாகிகள், லாரி பார்சல் வாகனங்களை மாட்டுத்தாவணி மற்றும் கோச்சடை பகுதிகளில் நிறுத்துவதற்கு ஒத்துழைப்புத் தருவதாக கமிஷனரிடம் உறுதியளித்தனர். மேலும், அப்பகுதியில் லாரி புக்கிங் ஆபீஸ் அமைப்பதற்கு தரை வாடகை குறைந்த அளவில் நிர்ணயம் செய்யுமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
அதேபோல் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மாட்டுத்தாவணியில் இட ஒதுக்கீடு செய்து தந்தால் மாற்றம் செய்வதற்கு தயாராக உள்ளதாகவும், தரை வாடகை குறித்து சங்க நிர்வாகிகளுடன் கலந்துபேசி முடிவு செய்வதாகவும் தெரிவித்தனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், உதவி கமிஷனர் (வருவாய்) ரா.பாஸ்கரன், போலீஸ் உதவி கமிஷனர் (போக்குவரத்து) மகுடபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.