தினமலர் 05.02.2010
மாநகராட்சி பணியாளர்களுக்கு யோகா பயிற்சி
சென்னை:இந்தியாவில் முதன் முறையாக, சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு, 18 லட்ச ரூபாய் செலவில், யோகா பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.மாநகராட்சி அலுவலக வளாகத்தில், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான மருத்துவப் பரிசோதனை மற்றும் யோகா பயிற்சியை, மேயர் சுப்ரமணியன் நேற்று துவக்கி வைத்தார். அவர் பேசியதாவது:
மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்தபடி, மாநகராட்சி அலுவலர்கள் , பணியாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் யோகா பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் முதன் முறையாக, சென்னை மாநகராட்சி சார்பில், 18 ஆயிரம் பணியாளர்களுக்கு, 18 லட்ச ரூபாய் செலவில், யோகா பயிற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக, மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் பணிபுரியும் மன்றத்துறை, பொது, மின்சாரம், கல்வி, இயந்திரப் பொறியியல், திடக்கழிவு என ஆறு துறைகளைச் சார்ந்த 250 பணியாளர்களுக்கு யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டன.அதைத் தொடர்ந்து, மற்ற துறைகளைச் சார்ந்த அலுவலர்களுக்கும் படிப்படியாக பயிற்சிகள் வழங்கப்படும். இப்பயிற்சிகள் மனவளக்கலை மன்றம் மூலம் வழங்கப்படுகிறது.
முதலில் 15 பயிற்சியாளர்கள் மூலம் யோகா பயிற்சி வழங்கப்பட்டது. தினமும் 2 மணி நேரம் என ஆறு நாட்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.பணியாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை அட்டையும் வழங்கப்படுகிறது. அதில், அவர்கள் பற்றிய மருத்துவக் குறிப்புகள் இடம்பெறும். இதில், ரத்தப் பரிசோதனை, வாய், மூக்கு, சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு மேயர் பேசினார்.