தினமலர் 05.02.2010
மாநகராட்சி மரத்தடியில் படித்து அரசு வேலை பெற்ற இளைஞர்கள்
மதுரை:மதுரை மாநகராட்சி மத்திய அலுவலக வளாகத்தில், மரத்தடியில் படித்து சாதித்த 38 பேர் குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.நகரின் மையத்தில் பரந்து விரிந்து அமைந்துள்ள மாநகராட்சி மத்திய அலுவலக வளாகத்தில் ஏராளமான மரங்கள் இருக்கின்றன. அலுவலகத்தின் பில்லர் ஹால், டூ வீலர் ஸ்டாண்ட், ஈகோ பார்க் போன்ற இடங்களில், போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை பார்க்கலாம்.
வெளி உலக சந்தடியின்றி, நிசப்தமாக இருக்கும் இந்த சூழ்நிலை, புத்தகமும் கையுமாக இருக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.சமீபத்தில் நடந்த டி.என். பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வுக்காக பலர் இங்கு வந்து படித்தனர். இவர்களுக்காகவே மாநகராட்சி நிர்வாகமும், இரவு நீண்ட நேரத்திற்கு மின் விளக்குகளை எரிய விட்டது.
இவர்களில் 38 பேர், உள்ளூர் நிதி தணிக்கை, கூட்டுறவு மூத்த ஆய்வாளர், கருவூல கணக்குப் பிரிவு, வருவாய் துறை, சென்னை தலைமை செயலகம் ஆகிய துறைகளுக்கு தேர்வாகி உள்ளனர். இவர்களை மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின், மக்கள் தொடர்பு அலுவலர் பாஸ்கரன் பாராட்டினர்.