தினகரன் 05.02.2010
18,000 பேருக்கு யோகா பயிற்சி
சென்னை : சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில், மாநகராட்சி ஊழியர்களுக்கு முழு உடல் பரிசோதனை, யோகா பயிற்சிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ரிப்பன் மாளிகை வளாகத்தில் யோகா பயிற்சி, மருத்துவ பரிசோதனை நேற்று அளிக்கப்பட்டது.
இவற்றை மேயர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்து பேசியதாவது:
மாநகராட்சி உறுப்பினர்கள், பள்ளி மாணவ & மாணவிகள், ஆசிரியர்கள், லாரி ஓட்டுநர்களுக்கு ஏற்கனவே யோகா பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மாநகராட்சியில் பணிபுரியும் 18 ஆயிரம் ஊழியர்களுக்கு யோகா பயிற்சியுடன் மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படுகிறது.
பொதுத்துறை, மின்சாரத்துறை, கல்வித்துறை, இயந்திர பொறியியல் துறை, திடக்கழிவு மேலாண்மைத்துறை, மன்றத்துறை என 6 துறைகளை சார்ந்த 250 ஆண், பெண் ஊழியர்களுக்கு மனவளக்கலை மன்றம் மூலம் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. தொடர்ந்து 6 நாட்களுக்கு 2 மணி நேரம் இந்த பயிற்சி வழங்கப்படும். இதைத்தொடர்ந்து மண்டல அலுவலங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்காக மாநகராட்சி ரூ.18 லட்சம் செலவு செய்கிறது.
இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியம் கூறினார். மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி, ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி, துணை ஆணையர் ஜோதி நிர்மலா, உதவி ஆணையர் திவ்யா மற்றும் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.