தினமணி 09.02.2010
மாநகராட்சித் தேர்தல்: 6 மாதகால அவகாசம் கோரி உயர்நீதிமன்றத்தில் அரசு மனு
பெங்களூர், பிப்.8: பெங்களூர் மாநகராட்சி மன்றத் தேர்தலை நடத்த 6 மாதகால அவகாசம் கோரி உயர்நீதிமன்றத்தில் அரசு மனு தாக்கல் செய்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மாநகராட்சிக்கு பிப்ரவரி 21-ம் தேதி தேர்தல் நடக்குமென கடந்த டிசம்பரில் மாநிலத் தேர்தல் ஆணையம் கால அட்டவணையை வெளியிட்டது. இந்நிலையில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக இடஒதுக்கீடு செய்தது தவறு; வார்டு வாரியாக இடஒதுக்கீடு செய்ய வேண்டுமென உயர்நீதிமன்றம் கூறிய தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை அடுத்து ஜனவரி 29-ம் தேதி மாநகராட்சித் தேர்தலை திடீரென ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி முன்னாள் மேயர்கள் பி.ஆர். ரமேஷ், ராமச்சந்திரப்பா உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக உயர்நீதிமன்றத்தை மாநில அரசோ, தேர்தல் ஆணையமோ அணுகாமலேயே ஒருதலைப்பட்சமாக தேர்தலை திடீரென ரத்து செய்துள்ளது சரியல்ல என்று அவர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவில்கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரிக்க 2 டிவிஷன் பெஞ்ச்கள் மறுத்தது. தலைமை நீதிபதி பி.டி. தினகரன் தலையிட்டதன்பேரில் நீதிபதிகள் மஞ்சுளா செல்லூர், அப்துல் நசீர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் கடந்த 5-ம் தேதி அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது, தேர்தல் ஆணைய தரப்பில் ஆஜரான பனீந்திராவும், அரசுத் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் அசோக் ஹாரனஹள்ளியும் தேர்தலை ரத்து செய்ததற்கான காரணம் குறித்து 8-ம் தேதி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்து விளக்கம் அளிப்பதாக தெரிவித்தனர். இதை அடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.எம். நாகராஜ், பொதுநல மனுவுக்கு ஆட்சேபம் தெரிவித்தார்.
மாநகராட்சி வார்டு இட ஒதுக்கீட்டை மாற்றியமைக்க அதிக காலம் தேவைப்படுவதாக தேர்தல் ஆணையத்திடம் அரசு தெரிவித்ததால்தான் தேர்தலை மாநிலத் தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. கடந்த மாதம் 28-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்தலை நடத்த கால அவகாசம் தேவைப்பட்டால் கர்நாடக உயர்நீதிமன்றத்தை தேர்தல் ஆணையமும் அரசும் அணுகலாமென நீதிமன்றம் முழு சுதந்திரம் வழங்கியது.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய யோசனை குறித்து அரசு தற்போது ஆலோசனை செய்து வருகிறது. ஒரு தலைப்பட்சமாக அரசும், தேர்தல் ஆணையமும் முடிவெடுக்கவில்லை. எனவே, முன்னாள் மேயர்கள் தாக்கல் செய்துள்ள இந்த பொது நல வழக்கு சரியல்ல என்று வாதாடினார். ஆனாலும் தேர்தலை ரத்து செய்ததற்கான காரணத்தை அரசு தெரிவிக்காததால் வழக்கறிஞரை நீதிபதிகள் கடிந்துகொண்டனர்.ஜ்ஜ் இதைத் தொடர்ந்து பிற்பகலுக்கு மேல் அரசுத் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. வரும் மாதங்களில் பியூசி, எஸ்எஸ்எல்சி தேர்வுகள், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்க உள்ளதால் மாநகராட்சித் தேர்தலை நடத்த இயலாது. எனவே, தேர்தலை நடத்த 6 மாத கால அவகாசம் தேவைப்படுகிறது என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதை அடுத்து மேற்கொண்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்தனர்.