Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மரங்களை வெட்டி சாய்க்கும் மாநகராட்சி

Print PDF

தினமலர் 12.02.2010

மரங்களை வெட்டி சாய்க்கும் மாநகராட்சி

கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் பூங்கா அமைப்பதற்காக, ஏழு மரங்கள் வேரோடு வீழ்த்தப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோவை மாநகராட்சி 10வது வார்டுக்கு உட்பட்ட தனலட்சுமி நகரில் "ரிசர்வ் சைட்' உள்ளது. இங்கு வேம்பு, மே பிளவர் உட்பட பல வகை மரங்கள் இருந்தன. நன்கு வளர்ந்த பழமையான இந்த மரங்கள், அப்பகுதிக்கு நுரையீரல் போல அமைந்திருந்தன.

சுற்றிலும் கட்டடங்கள் அதிகரித்து வந்த நிலையில், இந்த மரங்கள் மட்டுமே அப்பகுதிக்கு பார்வையாகவும் இருந்தன. நேற்று காலையில், அந்த "ரிசர்வ் சைட்'டில் இருந்த மே பிளவர், புங்கன் உட்பட 7 மரங்கள் வேரோடு வீழ்த்தப்பட்டு, ஜே.சி.பி., இயந்திரத்தால் அந்த இடமே மண்ணால் நிரப்பப்பட்டிருந்தது. இதுபற்றி தகவலறிந்து, "ஓசை' அமைப்பாளர் யுகநாத் மற்றும் பலர் அங்கு சென்றனர். அவர்கள் விசாரித்ததற்கு, பூங்கா அமைப்பதற்காக காம்பவுண்ட் கட்ட அந்த மரங்களை வெட்டியிருப்பதாக அங்கிருந்தவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். மரங்களை வெட்டுவதற்கு வருவாய்த்துறையிடம் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதும் தெரியவந்தது.

இதுபற்றி, மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ராவிடமும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பூங்கா அமைக்கப்பட்ட பின், அங்கு மீண்டும் புதிதாக மரக்கன்றுகள் வைக்கப்படும் என்று அவர் பதில் கூறியதாகத் தெரிகிறது. அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்டிருந்தால், அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி கூறியுள்ளார்.தற்போது அங்கு நான்கு மரங்கள் மட்டுமே மிச்சமாகவுள்ளன. அவையும், "ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பினர் தலையிட்டதால் தப்பியுள்ளன.

சமீபத்தில் கோவை வந்த எம்.பி.கனிமொழி, "சங்கமம்' கலை நிகழ்ச்சிக்காக இடம் தேர்வு செய்ய சென்றபோது, "காந்தி பார்க்'கில் இருந்த ஒரு மரத்தை வெட்டலாம் என்று அமைச்சர்கள் சொன்ன ஆலோசனையையே புறக்கணித்தார் என்பதை அதிகாரிகளும், ஆளும்கட்சியினரும் அறிவர்.

மரங்கள் வெட்டப்பட்ட பகுதி அருகே மாநகராட்சி துணை மேயர் வீடும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செம்மொழி மாநாட்டின் நினைவாக, கோவையில் "செம்மொழி மாநாட்டுப் பூங்கா' அமைக்க அரசு முயற்சி எடுக்கிறது. ஆனால், அதிகாரிகளும், ஆளும்கட்சியினரும் கூட்டணி சேர்ந்து மரங்களை வெட்டி வீழ்த்துகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு அவசர நடவடிக்கை எடுப்பது அவசியம்.

மீண்டும் மரம் வளர்ப்பேன் : மரங்கள் வெட்டப்பட்டது குறித்து மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி நிர்வாகப் பொறியாளர் பார்வதியிடம் கேட்டபோது, ""அங்கு பூங்கா மேம்படுத்தும் பணி நடக்கிறது. அங்கு மரங்களை வெட்ட எந்த அனுமதியும் தரவில்லை. நேரில் சென்று ஆய்வு செய்கிறேன்,'' என்றார். வார்டு கவுன்சிலர் தன்ராஜ் கூறுகையில், ""முதன் முதலாக எனது வார்டில் 30 லட்ச ரூபாய்க்கு பூங்கா வேலை நடக்கிறது. காம்பவுண்டு சுவர் கட்டுவதற்கு அந்த மரங்களை அகற்றியே ஆக வேண்டிய கட்டாயம் இருந்தது. காம்பவுண்டு கட்டிய பின், நிச்சயமாக அங்கு மரங்களை வளர்த்துக் காட்டுவேன்,'' என்றார்.

Last Updated on Friday, 12 February 2010 06:22