தினமலர் 12.02.2010
செங்கல்பட்டு நகராட்சியில் ஓராண்டிற்கு பின் வளர்ச்சிப் பணிகள் துவக்கம்
செங்கல்பட்டு : செங்கல்பட்டு நகராட்சியில், கடந்த ஓராண்டிற்கு பின் மீண்டும் வளர்ச்சிப் பணிகள் துவங்கியது.செங்கல்பட்டு நகராட்சித் தலைவராக அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஜெயா உள்ளார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் நகராட்சித் தலைவர் பதவி ஆதிதிராவிடர் பெண் பிரிவிற்கு ஒதுக்கப்பட்டது. மொத்தமுள்ள 33 வார்டுகளில் தி.மு.க., கூட்டணி பெரும்பான்மையான இடங்களைப் பிடித்தும் ஜெயா தலைவர் பதவியை கைப்பற்றினார். மூன்று ஆண்டுகளாக மன்றக் கூட்டம் சுமூகமாக நடந்து வந்தது.இந்நிலையில், தலைவர் ஜெயா கிறிஸ்தவ மதத் தைச் சேர்ந்தவர், அவரது பெயர் அலோடின்மேரி என ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் சுப்பிரமணி அரசுக்கு புகார் அனுப்பினார்.அவரை பின்பற்றி தி.மு.க., கவுன்சிலர்களும் புகார் அனுப்பினர்.
புகார் அனுப்பியபின் மன்றக் கூட்டங்களை தி.மு.க.,வைச் சேர்ந்த 18 கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.இதனால், கடந்தாண்டு மார்ச் மாதத்திற்கு பின் எவ்வித தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை.நகராட்சி நிர்வாகம் முடங்கியது. அரசு மன்றத்தை ஏன் கலைக்கக் கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப் பியது.பதவி பறிபோய்விடுமோ என பயந்த கவுன்சிலர்கள் கூட்டம் நடத்த ஒத்துழைப்பு கொடுத்தனர்.கடந்த மாதம் கூட்டம் நடந்த போது, கடந்த 11 மாதங்களாக நிலுவையிலிருந்த பணிகளுக்கு ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, கிடப்பிலிருந்த பணிகளுக்கு வேலை உத்தரவு வழங்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ளன. கடந்தாண்டு மழையின்போது ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் செய்ய நகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட 22 லட்ச ரூபாயில் முதல் கட்டமாக ஜே.சி.கே., குறுக்கு தெருவில் தார்ச் சாலை அமைக்கப்பட்டது. தற்போது பழுதடைந்த வரதனார் தெருவில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. சாலை அமைக்கும் பணியை நகராட்சி கமிஷனர் திருநாவுக்கரசு, பொறியாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.