Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மார்ச் 30-க்குள் பெங்களூர் மாநகராட்சிக்கு தேர்தல்: உயர் நீதிமன்றம்

Print PDF

தினமணி 12.02.2010

மார்ச் 30-க்குள் பெங்களூர் மாநகராட்சிக்கு தேர்தல்: உயர் நீதிமன்றம்

பெங்களூர், பிப்.11: பெருநகர பெங்களூர் மாநகராட்சி மன்றத்துக்கு மார்ச் 30-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையத்துக்கும் கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

÷முன்னதாக தேர்தலை நடத்த 6 மாத காலம் அவகாசம் கோரிய அரசின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

÷
பெங்களூர் மாநகராட்சிக்கு பிப்ரவரி 21-ம் தேதி தேர்தல் நடத்தப்படுமென மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் வார்டு வாரியாக இட ஒதுக்கீடு செய்து மாநகராட்சிக்குத் தேர்தல் நடத்த வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, ஏற்கெனவே அறிவித்த தேர்தல் கால அட்டவணையை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் திடீரென ரத்து செய்தது.

÷இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மேயர்கள் பி.ஆர்.ரமேஷ், ராமச்சந்திரப்பா, உச்சப்பா, சிம்மா உள்ளிட்டோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த அரசு, தேர்தலை நடத்த 6 மாத காலம் அவகாசம் வேண்டுமென கேட்டிருந்தது.

÷தேர்வுகள், கிராமப் பஞ்சாயத்துத் தேர்தல், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆகியவை அடுத்தடுத்து நடக்க உள்ளதால், அந்தப் பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுவார்கள் என்பதால் ஜூன் வரை தேர்தலை நடத்த இயலாது என மாநிலத் தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்திருந்தது. இவ்வாறு பல்வேறு காரணங்களைக் கூறி தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பதாக அரசை, நீதிபதிகள் இருமுறை கடிந்துகொண்டனர்.

÷இந்நிலையில் இந்த வழக்கில் வியாழக்கிழமை இறுதித் தீர்ப்புக் கூறப்பட்டது.

÷நீதிபதிகள் வி. கோபால கெüடா மற்றும் ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. அரசுத் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் நடராஜ் ஆஜராகி வாதாடினார். அப்போது, மாநகராட்சித் தேர்தலை நடத்த 6 மாத கால அவகாசம் தேவைப்படுகிறது என்றார்.

÷ஆனால் அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள் கூறிய தீர்ப்பின் விவரம்: ÷பெங்களூர் மாநகராட்சி மன்றத்துக்கு மூன்றாண்டுகளாகத் தேர்தல் நடத்தப்படவில்லை. இதுதொடர்பான வழக்கு கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்தபோது ஏற்கெனவே அரசுக்கு 6 மாதம் கால அவகாசம் வழங்கியது நீதிமன்றம். ஆனால் திரும்பத்திரும்ப பல்வேறு காரணங்களைக் கூறி தேர்தலை நடத்தாமல் ஒத்தி வைத்துக்கொண்டே செல்வதை இனிமேலும் நீதிமன்றம் ஏற்காது.

÷
எனவே, அரசு ஏற்கெனவே தயார் செய்த சாதி வாரியான இட ஒதுக்கீட்டு பட்டியலில் திருத்தங்கள் செய்து வரும் பிப்ரவரி 20-ம் தேதிக்குள் புதிய பட்டியலை தயார் செய்து மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். அதன்படி தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த வேண்டும்.

÷அதைத் தொடர்ந்து பிப்ரவரி 22-ம் தேதிக்குள் தேர்தல் கால அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும். மார்ச் 30-ம் தேதிக்குள் மாநகராட்சிக்குத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.

÷மார்ச் 30-ம் தேதிக்கு மேல் ஒரு நாள் கூட தாமதமாக தேர்தலை நடத்த முயற்சிக்கக்கூடாது. தேர்தலை நடத்த இயலவில்லை என மீண்டும் பல நொண்டி சாக்கு போக்குகளை நீதிமன்றத்திடம் தெரிவிக்கக்கூடாது. தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையத்திற்கு அரசு செய்துதர வேண்டும் என்று நீதிபதிகள் கண்டிப்புடன் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர். பெங்களூர் மாநகராட்சி மன்றத்தின் பதவிக்காலம் 2006-ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. அதன்பிறகு தேர்தல் நடத்தப்படவில்லை. இப்போதுதான் நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் நடைபெறவுள்ளது.

Last Updated on Friday, 12 February 2010 10:50