தினமலர் 19.02.2010
சிதம்பரத்தில் போக்குவரத்து இடையூறு 15 மாடுகள் மீண்டும் சிறை பிடிப்பு
சிதம்பரம் : சிதம்பரம் நகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றி திரிந்த மாடுகள் நேற்று மீண்டும் சிறை பிடிக்கப் பட்டன.சிதம்பரம் நகராட்சி பகுதியில் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித் திரிந்துகொண்டிருந்தன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்தது. சிதம்பரம் நகராட்சிக்கு தொடர்ந்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை நகராட்சி பணியாளர்கள் சிறை பிடித்தனர்.
கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் நகர சாலைகளில் மாடுகள் வலம் வரத் துவங்கின. நகராட்சி ஆணையர் ஜான்சன் உத்தரவுப்படி நேற்று சிதம்பரம் நகர முக்கிய வீதிகளான கீழ வீதி, எஸ்.பி கோவில் தெரு, தெற்கு வீதி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து இடையூறாக சுற்றி திரிந்த 15 மாடுகள் சிறை பிடிக்கப் பட்டன. துப்புரவு ஆய்வாளர் சுப்ரமணியன் தலைமையில் ராஜாராமன், சுகுமாறன் மாடுகளை சிறை பிடித்து நகராட்சிக்கு கொண்டு வந்தனர். மேலும் மாடுகளுக்கு அபராதம் விதிப்பது மட்டுமில்லாமல் காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர.