தினமலர் 19.02.2010
பிறபணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் மாநகராட்சி பணிகளில் பாதிப்பு:மாற்று ஏற்பாட்டிற்கு சங்கம் வேண்டுகோள்
தூத்துக்குடி:மாநகராட்சி பணிக்கு சம்பந்தம் இல்லாத பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுவதால் மாநகராட்சி பணிகள் பாதிக்கப்படுவதாகவும் அதற்கு மாற்று ஏற்பாடு செய்யமாறு நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் மற்றும் தொடங்க விழா நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் சுடலைமுத்து தலைமை வகித்தார். செயலாளர் பெரியசாமி வரவேற்றார். கூட்டமைப்பு துணைத் தலைவர் சரவணன், அமைப்புப்பணியாளர் சங்கத் தலைவர் ராமலிங்கம், மாநில அமைப்பு செயலாளர் சந்தனராஜ், சுகாதார ஆய்வாளர் சங்கத்தை சேர்ந்த முருகேசன், நகரமைப்பு ஆய்வாளர்கள் சங்க காந்திமதி, பணி ஆய்வாளர் சங்க மணிகண்டகுமார், பொறியியல் சங்க சேகர், வாகன ஓட்டுநர் சங்க தலைவர் அன்பழகன், துணைத்தலைவர் ராஜசேகர், போத்திராஜ், கனகரத்தினசெல்வி, சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் கஸ்தூரி தங்கம், துணை மேயர் தொம்மை சேசுவடியான், திமுக., மாவட்ட செயலாளர் பெரியசாமி, சட்ட ஆலோசகர் சுபேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில், நகராட்சி, மாநகராட்சி அலுவலர்களை அரசு அலுவலர்கள் என அறிவிக்கவேண்டும். ஓய்வுபெற்ற மற்றும் மரணம் அடைந்த அலுவலர்கள் காரணமாக மாநகராட்சியில் ஏற்பட்டுள்ள பணியிடங்களை நிரப்ப 49 சதவிகித செலவின நிபந்தனையை தளர்வு செய்ய வேண்டும்.
மாநகராட்சி கண்காணிப்பாளர்களுக்கு அரசுத்துறை கண்காணிப்பாளர்கள் போன்று அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். மாநகராட்சி உதவி ஆணையாளர் பணியிடங்களில் அமைச்சுப் பணிசார்ந்த அலுவலரை நியமனம் செய்ய வேண்டும். சுகாதார ஆய்வாளர்களுக்கு உணவு ஆய்வாளர் பயிற்சி வழங்க வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சியில் உணவு ஆய்வாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டும்.
மாநகராட்சி பணிக்கு சம்பந்தம் இல்லாத தேர்தல், காப்பீட்டு திட்டம், குடும்ப அட்டை சரிபார்த்தல் போன்ற இதர பணிகளில் மாநகராட்சி அலுவலர்களை பயன்படுத்துவதால் மாநகராட்சியின் வரிவசூல் உள்ளிட்ட அன்றாட பணிகள் பாதிக்கப்படுகிறது. இதற்கு நகராட்சி நிர்வாக இயக்குநர் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.