தினமலர் 01.11.2010
நகர வளர்ச்சி திட்டத்தில், மக்கள் எதிர்பார்ப்பு என்ன?படிவத்தில் விபரம் கேட்குது மாநகராட்சி
திருப்பூர்:ஒருங்கிணைக்கப்பட உள்ள திருப்பூர் மாநகராட்சியில் செய்ய வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, பொதுமக்களிடம் கலந்தாய்வு படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன; மக்களின் எதிர்பார்ப்புகளைஅறியும் வகையில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.அவை வருமாறு:திருப்பூர் மாநகராட்சி பகுதியில் எத்தனை ஆண்டுகளாக வசிக்கிறீர்கள்; திருப்பூரில் குடியேறியதற்கான காரணம்; தொழில் நகரமான திருப்பூர் குறித்த மதிப்பீடு; நகரின் மூன்று முக்கிய பிரச்னை; குடிநீர், போக்குவரத்து, மழைநீர் வடிகால் அமைப்பு, உள்ளாட்சி பணிகள், நீர்நிலை பராமரிப்பு, மாசுபடுதல், தொழிற்சாலை கழிவு, கல்வி வசதி, மருத்துவ வசதி, குடிசை பகுதி, பொழுதுபோக்கு வசதி உள்ளிட்ட விபரங்கள் குறித்த வினாக்கள், படிவத்தில் உள்ளன.இதுதவிர, வீட்டு வசதியில் உள்ள பிரச்னை; நகரில், புறநகரில் வசிப்பதற்கான முக்கிய காரணம்; குடிசை பகுதிகளில் உள்ள பிரச்னை; பிரச்னைகளை தீர்க்க வழிமுறை குறித்தும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கல் பிரிவில் உள்ள பிரச்னை;
மாநகராட்சி வழங்கும் குடிநீர் அளவு, வழங்கும் நேரம்; குடிநீர் வசதியற்ற தெருக்கள், பகுதிகள், குடிநீர் வினியோகிக்கும் நேரம், இதை மேம்படுத்த மக்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தில், கழிவுநீர் வெளியேற்றப்படும் விதம்; இதில் உள்ள பிரச்னை, இதை மேம்படுத்த கூறப்படும் ஆலோசனை குறித்து கேட்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால், பேரிடர் மேலாண்மை வசதி. போக்குவரத்து வசதிகளில், போக்குவரத்தில் உள்ள பிரச்னை; தனியார் வாகன போக்குவரத்து, ஆக்கிரமிப்பு, குறுகலான சாலை, வாகன நிறுத்துமிட வசதி, பிரச்னையான சாலை சந்திப்புகள், நடைபாதைகளின் பாதுகாப்பு குறித்த தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன. திடக்கழிவு மேலாண்மையில் உள்ள பிரச்னை; இதை மேம்படுத்த ஆலோசனை; பூங்கா, விளையாட்டு திடல்களின் விபரங்கள்; அதன் பராமரிப்பு, சுற்றுலா வசதிகளற்ற நிலை பற்றிய கருத்துகளை மக்கள், படிவத்தில் தெரிவிக்கலாம்.இத்துடன், திருப்பூர் மாநகரம், புறநகர் பகுதிகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த மக்களின் கருத்துகள்; 25 ஆண்டுகளுக்குபின், திருப்பூர் இருக்க வேண்டிய நிலை, வரும் முதலாண்டில் செய்ய வேண்டிய முன்னுரிமை திட்டம், ஐந்தாண்டுகளில் செய்ய வேண்டிய திட்டங்கள் என 42 வினாக்களாக, அதில் உட்பிரிவு கேள்விகளுடன் படிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படிவங்களில் பெறப்படும் மக்களின் கருத்துகள், தேவையான ஆலோசனைகளை கொண்டு உத்தேச மதிப்பீடுகளில் மாற்றம் செய்வதும், மாநகர வளர்ச்சிக்கேற்ப புதிய முறைகளை மேற்கொள்ளவும் மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.