தினமலர் 12.10.2010
பாதாள சாக்கடைக்கு 20 செ.மீ., விட்டம் குழாய் போதுமா?
ஈரோடு:ஈரோடு மாநகராட்சி பாதாள சாக்கடை திட்டத்தில் 20 செ.மீ., விட்டமுள்ள குறுகிய குழாய்கள் அமைக்கப்படுகின்றன. மழைக்காலத்திலும், எதிர்காலத்தில் குடியிருப்புகள் பெருகும் போதும், இக்குழாய் வழியே அதிகளவில் தண்ணீர் செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.மாநகராட்சியாக ஈரோடு தரம் உயர்த்தப்பட்ட பின், வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி, காசிபாளையம், பெரியசேமூர் ஆகிய நான்கு நகராட்சிகள், பி.பி.அக்ரஹாரம், சூரியம்பாளையம் ஆகிய டவுன் பஞ்சாயத்துக்கள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. எட்டு சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள ஈரோடு நகராட்சி, 56 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மாநகராட்சியாக விரிவடைந்தது. ஈரோடு மாநகராட்சியில் 209.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடக்கிறது.
ஈரோடு பகுதியில் உள்ள ஐந்து மண்டலங்களில் 192.876 கி.மீ., நீளம், வீரப்பன்சத்திரத்தில் உள்ள ஒரு மண்டலத்தில் 12.971, சூரம்பட்டியில் உள்ள ஒரு மண்டலத்தில் 61.363, காசிபாளையத்தில் உள்ள மூன்று மண்டலத்தில் 135.065, பெரியசேமூரில் உள்ள இரண்டு மண்டலத்தில் 101.765, என மொத்தம் 504.04 கி.மீ., நீளத்துக்கு பாதாள சாக்கடை அமைக்கப்படுகிறது.ஈரோடு பகுதியில் ஐந்து கழிவு நீரேற்று நிலையம், ஐந்து கழிவுநீர் உந்து நிலையம், 13.195 கி.மீ., நீளத்துக்கு உந்து குழாய்கள் அமைக்கப்படுகிறது. வீரப்பன்சத்திரத்தில் தலா ஒரு கழிவு நீரேற்று நிலையம், கழிவு நீர் உந்து நிலையம், 1.833 கி.மீ., நீளத்துக்கு உந்து குழாய்கள், சூரம்பட்டியில் தலா ஒரு கழிவு நீரேற்று நிலையம், கழிவு நீர் உந்து நிலையம், 2.222 கி.மீ., நீள உந்து குழாய்கள், காசிபாளையத்தில் தலா மூன்று கழிவு நீரேற்று நிலையம், கழிவு நீர் உந்து நிலையம், 10.640 கி.மீ.., நீள உந்து குழாய்கள், பெரிய சேமூரில் இரண்டு கழிவு நீரேற்று நிலையம், ஒரு கழிவு நீர் உந்து நிலையம், 8.830 கி.மீ., நீள உந்து குழாய்கள் அமைக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் அனைத்து மண்டலங்களிலும் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்கும் தீவிரமாக நடக்கிறது. பாதாள சாக்கடையில் 20 செ.மீ., விட்டமுள்ள குழாய்கள் பதிக்கப்படுகின்றன.
இக்குழாயில் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மட்டும் இணைக்கப்படுவதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மழைக்காலங்களில் வீட்டில் இருந்து வெளியேறும் தண்ணீர் பாதாள சாக்கடையில் கலக்க வாய்ப்புள்ளது. மிக வேகமாக வளரும் ஈரோடு நகரில், அடுத்த பத்தாண்டுகளில் குடியிருப்புகள் எண்ணிக்கை இரட்டிப்பாக வாய்ப்புள்ளது.அப்போதைய நிலைமைக்கு ஏற்ப, தண்ணீர் செல்வதற்கு 20 செ.மீ., விட்டமுள்ள குழாய்கள் போதுமானதாக இருக்குமா? என்ற, சந்தேகம் ஏற்படுகிறது. காந்திஜி ரோட்டின் அடியில் செல்லும் பாதாள சாக்கடையில், சில மாதங்களுக்கு முன் மழை நீர் சென்றபோது குழாய் வெடித்தது. ரோடு முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அக்காலத்தில், மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்ட குழாயே வெடித்து விட்ட நிலையில், 20 செ.மீ., அளவுள்ள சிறிய குழாய்கள் வெடிக்காமல் இருக்க வாய்ப்பில்லை. பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் திட்டத்தில், பிற்காலத் தேவையையும் கருத்தில் கொண்டு, இதை விட விட்டம் அதிகமுள்ள குழாய்களை பதிக்கலாமே? இதுகுறித்து மாநகராட்சி இன்ஜினியர் வடிவேல் கூறியதாவது: பாதாள சாக்கடையில் 20 செ.மீ., அளவு குழாய் அமைக்கப்படுகிறது. சாக்கடையில் வீட்டு கழிவு நீர், பாத்ரூம் கழிவு நீர் மட்டுமே செல்லும். மழை நீர் செல்லாது. இப்போதுள்ள சாக்கடையில்தான் மழை நீர் செல்லும். எனவே, இந்தளவு குழாய்களே போதுமானதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.