தினமணி 07.10.2010
காய்கறி தரைக்கடைக்கான ஏலம் நடத்தும் மாநகராட்சி மண்டபம் திடீர் முற்றுகை
மதுரை, அக்.6: மதுரையில் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் உள்ள தரைக்கடைகளை ஏலம் நடத்தும் மண்டபத்தை வியாபாரிகள் புதன்கிழமை காலை திடீரென முற்றுகையிட்டனர்.
மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் 524 கட்டடக் கடைகளுக்கு ஏலம் விடப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அங்கு சுமார் 1500-க்கும் மேற்பட்ட தரைக் கடைகளுக்கு ஏலம் விட முடிவுசெய்யப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி கல்தூண் மண்டபத்தில் புதன்கிழமை ஏலம் விடும் கூட்டம் நடைபெற்றது. இதில், ரூ 50 ஆயிரம் டெபாசிட் செலுத்தியவர்கள் ஏலம் நடைபெறும் மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மாநகராட்சி தலைமை நகரமைப்பு அலுவலர் முருகேசன், உதவி ஆணையர்கள் தேவதாஸ், ரவீந்திரன் உள்ளிட்டோர் இந்த ஏலப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த மேட்டுப்பகுதி காய்கறி மார்க்கெட் சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் கல்தூண் மண்டபம் பகுதிக்கு வந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி திடீரென முற்றுகையிட்டனர்.
இதையடுத்து, போலீஸôர் அவர்களிடம் பேச்சு நடத்தினர். அப்போது, மேட்டுப்பகுதியைச் சேர்ந்த அனைவருக்கும் ஒரே இடத்தில் தரைக்கடைகளை ஒதுக்க வேண்டும்; வேறு பிளாக்கில் தனியாக பிரித்து வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்தினர். சங்கத்தின் தலைவர் சிவனேசன், செயலர் கோபாலாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இக்கோரிக்கையை வலியுறுத்தி பேச்சு நடத்தினர்.
இதையடுத்து, போலீஸôர் ஏலம் நடத்தும் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டனர். மண்டபத்தின் கதவு அடைக்கப்பட்டு ஏலம் நடத்தப்பட்டது. இச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.