தினமலர் 07.10.2010
தெருவோரத்தில் வசிப்போர் மாநகராட்சி கணக்கெடுப்பு
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தெருவோரங்கள் மற்றும் ரோட்டோரங்களில் வசிக்கும் குடும்பங்கள் பற்றிய கணக்கெடுப்பில், மாநகராட்சி சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சுகாதாரத்துறை பிரிவில் உள்ள 13 டிவிஷன்களிலும், சுகாதார ஆய்வாளர்கள் இக்கணக்கெடுப்பில் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டு வருகின்றனர். புகைப்படங்களுடன், புள்ளிவிபரங்களை அவர்கள் சேகரிக்கின்றனர். இதில், ரோட்டோரத்தில் அல்லது தெருவோரத்தில் வசிக்கும் குடும்பங்களை கண்டறிந்த இடம், வார்டு எண், அடையாள இடம், தங்கியுள்ள இடம் குறித்தும், ஆணா, பெண்ணா, அவர்களது வயது, குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் வயது, என்ன நிலையில் உள்ளனர்? மனநோயாளி, மாற்றுத்திறனாளி, முதியவர், சிறார் அல்லது மற்றவை என குறிப்பிட வேண்டும். செய்யும் தொழில், பிச்சை எடுத்தல், கூலி வேலை, சுயதொழில், மற்றவை அல்லது ஏதுமில்லை என குறிப்பிட வேண்டும். இத்தகவல்களை புகைப்படங்களுடன், அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.