தினகரன் 06.10.2010
தாம்பரம் நகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் குப்பை லாரிகள் ஆக்கிரமிப்பு
தாம்பரம், அக். 6: அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் பயன்படுத்தும் வகையில் அரசு சார்பில் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக சமுதாய கூடங்கள் (திருமண மண்டபங்கள்) கட்டப்பட்டன. மிக குறைந்த வாடகையில் சகல வசதிகளுடன் இந்த மண்டபங்கள் கிடைப்பது ஏழை, நடுத்தர மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
தாம்பரம் நகராட்சி சார்பில் அம்பேத்கர் பெயரில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. தாம்பரம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சார்ந்த கிராம மக்கள் திருமணம், மஞ்சள் நீராட்டு விழா, காதுகுத்து, பிறந்தநாள் விழா மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு இந்த மண்டபத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.
மண்டபத்தின் ஒரு நாள் வாடகை ரூ4ஆயிரத்து 200தான். இது ஏழை, நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகவும் வசதியாக உள்ளது. தனியார் மண்டபங்கள் குறைந்த பட்ச வாடகையே ரூ35ஆயிரம்தான். பல லட்சத்துக்கும் மண்டபங்கள் உள்ளன. குறைந்த வாடகைக்கு சிறப்பான பார்க்கிங் வசதியுடன் நகராட்சி மண்டபம் கிடைக்கிறது. ஆனால் இப்போது இந்த மண்டபத்தில் துர்நாற்றம் வீசுவது ஒரு பெரும் குறையாக உள்ளது.
தாம்பரம் நகராட்சியில் மொத்தம் 39வார்டுகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்து 60ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள்.
தினமும் தாம்பரத்திற்கு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கிறார்கள். தினமும் 100க்கும் மேற்பட்ட மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இவற்றை சேகரிக்க லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன. 10க்கும் மேற்பட்ட குப்பை லாரிகள், அம்பேத்கர் மண்டபத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மீன், இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பையை தினமும் சேகரித்து விட்டு பின்னர் லாரிகளை சுத்தம் செய்யாமால் மண்டபத்தில் நிறுத்திவிடுகின்றனர், நகராட்சி ஊழியர்கள். இதன்காரணமாக மண்டப பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. நிகழ்ச்சிகளுக்கு வந்திருப்பவர்கள் நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை கைக்குட்டையால் மூடிக் கொண்டே அவதிப்படுகின்றனர்.
சுவையான உணவு உட்கொள்ளும் போது துர்நாற்றம் வீசுவதால் சாப்பிட முடியாமல் பலர் பாதியில் எழுந்து விடுகின்றனர். இதனால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் குப்பை லாரிகளை மண்டபத்தில் நிறுத்துவதால் நிகழ்ச்சிக்கு வரும் வாகனங்களை நிறுத்த இடமின்றி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துகின்றனர்.
முன்பு நகராட்சி அலுவலகம் பின்புறம் நிறுத்தப்பட்டிருந்தது இந்த லாரிகள், இப்போது மண்டபத்தில் நிறுத்தப்படுகிறது. இந்த லாரிகளை உடனடியாக அப்புறப்படுத்தவேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என அறிவுருத்தும் நகராட்சியே இது போன்று திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடக்கும் இடத்தில் குப்பை லாரிகளை நிறுத்த அனுமதிக்கலாமா? தாம்பரம் நகராட்சியில் உள்ள அம்பேத்கர் திருமண மண்டப கட்டிடம். அடுத்தபடம்: மண்டப வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குப்பை லாரிகள்.