மாநகராட்சி தெரு மின் விளக்கு தனியார் பராமரிக்க நடவடிக்கை
Friday, 05 March 2010 08:27
administrator
நாளிதழ்௧ள் -
ந௧ரம் மற்றும் மாந௧ரம்
தினமலர் 05.03.2010 மாநகராட்சி தெரு மின் விளக்கு தனியார் பராமரிக்க நடவடிக்கை
திருச்சி: "திருச்சி மாநகராட்சிப் பகுதியிலுள்ள தெரு மின்விளக்குகளை நடப்பாண்டிலிருந்து தனியார் நிறுவனம் மூலம் பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது' என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் மொத்தம் 31 ஆயிரத்து 153 தெரு மின் விளக்குகள் உள்ளன. இந்த மின் விளக்குகள் மாநகராட்சி நிர்வாகம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மின்சக்தி சேமித்தல் போன்ற காரணங்களுக்காக, மின் விளக்குகளை தனியார் நிறுவனம் மூலம் பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மின்சக்தி சேமிப்புக் கருவி தேவைப்படும் இடங்களில் பொருத்தி, அதை கணினி மூலம் கண்காணித்து, பராமரிப்பு பணி மேற்கொள்வது. இதன்மூலம் மின் பயனீட்டு அளவு குறைக்கப்படுவதோடு, மின் விளக்கு எரியும் நேரத்தில், ஏற்படும் வெப்பம் காரணமாக உமிழப்படும் கார்பன் அளவு குறைவதற்கான வாய்ப்புள்ளதால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. தற்போது மாநகராட்சியால் செலுத்தப்படும் மின் கட்டணத் தொகை, தனியார்மயமாக்கும் போது குறைய வாய்ப்புள்ளது. இந்த குறைவு தொகையில் ஒரு குறிப்பிட்டத் தொகையை ஊக்கத்தொகையாக தனியார் நிறுவனத்திடமிருந்து மாநகராட்சி பெறுவதற்கான வாய்ப்பும் ஏற்படும். இதன்காரணமாக நடப்பாண்டிலிருந்து மின் விளக்கு பராமரிப்பு பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக 2010-11ம் நிதியாண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Last Updated on Friday, 05 March 2010 08:29
|
ஸ்காட் ரோடு வாகன நிறுத்துமிடம் ஏலம் மாநகராட்சிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
Friday, 05 March 2010 07:43
administrator
நாளிதழ்௧ள் -
ந௧ரம் மற்றும் மாந௧ரம்
தினமலர் 05.03.2010 ஸ்காட் ரோடு வாகன நிறுத்துமிடம் ஏலம் மாநகராட்சிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை:"மதுரை ஸ்காட் ரோட்டில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிப்பதற்காக, மாநகராட்சி ஏலம் நடத்தலாம். ஆனால் அதை உறுதி செய்ய கூடாது' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.ஸ்காட்ரோடு மீனாட்சி பஜார் சிறுதொழில், வியாபாரிகள் சங்க தலைவர் ராமையா தாக்கல் செய்த ரிட் மனு: மதுரையில் ஸ்காட் ரோடு உட்பட பல இடங்களில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கும் உரிமையை ஏலம் விட, மாநகராட்சி முடிவு செய்து, பிப்ரவரி 17ம் தேதி ஏல அறிவிப்பு வெளியிட்டது. ஸ்காட் ரோடு ஏற்கனவே குறுகிய இடத்தில் அமைந்துள்ளது. சிறிய கடைகள் மட்டுமே இயங்குகின்றன. ஐந்து ரூபாய் முதல் நடுத்தர மக்களுக்காக குறைந்த விலையில் வியாபாரம் செய்கிறோம். அந்த ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்தால் வியாபாரம் பாதிக்கப்படும். பெரியளவில் வியாபாரம் நடக்கும் பாண்டிபஜார், வடக்கு வெளி வீதி, வக்கீல் புது தெரு, வெங்கல கடைதெரு போன்றவற்றில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க ஏலம் விடப்படவில்லை. மாநகராட்சியின் ஏல அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை இடைக்கால தடை விதிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் நடராஜன், முருகன் ஆஜராயினர்.நீதிபதி கே.வெங்கட்ராமன், மாநகராட்சி ஏலம் நடத்தலாம். ஆனால் அதை உறுதி செய்ய கூடாது,'' என்றார்.
Last Updated on Friday, 05 March 2010 08:07
இடம் மாறுது உழவர் சந்தை: நகராட்சி தலைவர் தகவல்
Friday, 05 March 2010 07:10
administrator
நாளிதழ்௧ள் -
ந௧ரம் மற்றும் மாந௧ரம்
தினமலர் 05.03.2010 இடம் மாறுது உழவர் சந்தை: நகராட்சி தலைவர் தகவல்
குறிச்சி : குறிச்சி காந்திஜி ரோட்டில் செயல்பட்டு வரும் உழவர் சந்தை, விரைவில் மதுக்கரை மார்க்கெட் ரோட்டிற்கு மாற்றம் செய்யப் படுகிறது. குறிச்சி காந்திஜி ரோட்டில், தி.மு.க., ஆட்சியிலிருந்தபோது உழவர் சந்தை துவக்கப்பட்டது. மதுக்கரை, நாச்சிபாளையம், கிணத்துக்கடவு மற்றும் சுற்றுப் பகுதியை சேர்ந்த விவசாயிகள், விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். ஒதுக்குப்புறமான பகுதியில் உழவர் சந்தை அமைந்துள்ளதால், பஸ் போக்குவரத்து வசதியின்றி விவசாயிகள் சிரமப்படுகின்றனர். பொதுமக்களும் குறைந்தளவே வருகின்றனர். எனவே, உழவர் சந்தையை வேறிடத்திற்கு மாற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. சுந்தராபுரத்திலிருந்து மதுக்கரை மார்க்கெட் செல்லும் வழியில் கஸ்தூரி நகர் பகுதியிலுள்ள "ரிசர்வ் சைட்' தேர்வு செய்யப்பட்டுள்ளது. நகராட்சித்தலைவர் பிரபாகரன் கூறியதாவது: மதுக்கரை மார்க்கெட் ரோடு, கஸ்தூரி நகரிலுள்ள "ரிசர்வ் சைட்'டில், 50 சென்ட் பரப்பில் உழவர் சந்தை அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. அரசு அனுமதி கிடைத்தவுடன் பணிகள் துவங்கும். மீதமுள்ள 43 சென்ட் இடத்தில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் பூங்கா அமைக்க பணிகள் மேற்கொள்ளப்படும். நகராட்சிக்குட்பட்ட "ரிசர்வ் சைட்'களில் காணப்படும் ஆக்ரமிப்புகள் அனைத்தும், அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்தந்த பகுதியில் வசிப்போரின் தேவைக்கு ஏற்ப, விளையாட்டு மைதானம், பூங்கா, நூலகம் போன்றவை அமைக்கப்படும். இவ்வாறு பிரபாகரன் தெரிவித்தார்.
Last Updated on Friday, 05 March 2010 07:14
|
|
|
|
Page 642 of 841 |