தினமணி 04.03.2010
மாநகராட்சி வார்டு இட ஒதுக்கீடு பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் அளிப்பு
பெங்களூர், மார்ச் 3: பெங்களூர் மாநகராட்சி வார்டு இட ஒதுக்கீடு பட்டியலை மாநில தேர்தல் ஆணையத்திடம் அரசு அளித்தது. இதன் மூலம் மாநகராட்சிக்கு தேர்தல் நடப்பது உறுதியாகிவிட்டது.
பெங்களூர் மாநகராட்சி மன்றத் தேர்தலை மே 15-ம் தேதி வரை ஒத்திவைக்க அவகாசம் கோரி அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. மேலும் ஏற்கெனவே பிப்ரவரி 11-ம் தேதி உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுப்படி மார்ச் 30-ம் தேதிக்குள் பெங்களூர் மாநகராட்சி மன்றத்துக்குத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என கண்டிப்பாகக் கூறிவிட்டது.
இதையடுத்து மாநகராட்சியின் 198 வார்டுகளுக்கும் இட ஒதுக்கீடு செய்து பட்டியலை கடந்த வாரம் அரசு அறிவித்தது. மேலும் இதில் ஆட்சேபனை தெரிவிக்க பொதுமக்களுக்கு அரசு ஒரு வாரகால அவகாசம் அளித்தது. அதன்படி ஒரு வார காலம் முடிவடைந்தது. இதனால் 198 வார்டுகளுக்கும் இட ஒதுக்கீடு செய்த பட்டியலை அரசு புதன்கிழமை மாநில தேர்தல் ஆணையத்திடம் அளித்தது.
இனி தேர்தல் ஆணையம் மாநகராட்சித் தேர்தலுக்கான தேதியை அறிவிக்கும். பெங்களூர் மாநகராட்சி மன்றத்தின் பதவிக்காலம் 2006-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. அதன்பிறகு இதுவரை தேர்தல் நடத்தப்படவில்லை. தேர்தலை நடத்தக் கோரி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மேயர்கள் பி.ஆர்.ரமேஷ், ராமச்சந்திரப்பா ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். உயர் நீதிமன்றமும் தேர்தலை நடத்தும்படி அரசுக்கு 8 முறை உத்தரவிட்டது. ஒவ்வொரு முறையும் தேர்தலை ஒத்திவைக்க கால அவகாசம் கேட்டு வந்தது. இறுதியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாநகராட்சி தேர்தலுக்கான கால அட்டவணையை மாநில தேர்தல் அதிகாரி சிக்கமத் அறிவித்தார்.
அதன்படி 2010-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலை எதிர்த்தும், இட ஒதுக்கீடு பட்டியலை எதிர்த்தும் உயர்நீதிமன்றம், பிறகு உச்ச நீதிமன்றம் என இரு நீதிமன்றங்களிலும் மாறி மாறி மாநிலஅரசும், பொதுநலன் வழக்கும் தொடரப்பட்டது. இறுதியில் தேர்தல் நடத்தியே தீர வேண்டும் என உச்ச நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டது. இதையடுத்து இட ஒதுக்கீடு பட்டிலை அரசு வெளியிட்டுள்ளது.