தினமலர் 01.03.2010
ஆனைமலை பேரூராட்சிக்கு ஏல வருவாய் ரூ. 15 லட்சம்
பொள்ளாச்சி : ஆனைமலை பேரூராட்சிக்கு பல்வேறு இனங்களின் உரிமத்திற்கான ஏலத்தின் மூலம், நடப்பாண்டில் 15 லட்ச ரூபாய் வருமாய் கிடைத்துள்ளது.
ஆனைமலையில் பேரூராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்கள் உட்பட பல்வேறு இனங்களின் உரிமத்திற்காக ஏலம் நேற்று நடந்தது. செயல் அலுவலர் செல்வராஜ் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் அசோக் சண்முகசுந்தரம், துணைத்தலைவர் ஜாபர்அலி முன்னிலை வகித்தனர். மாசாணியம்மன் கோவில் நுழைவு வாசலில் வாகன கட்டணம் வசூலிக்கும் உரிமம் 10 .78 லட்சம் ரூபாயுக்கும், வாரச்சந்தையில் நுழைவு வாசல் கட்டணம் வசூலிக்கும் உரிமம் 1.84 லட்சம் ரூபாயக்கும் ஏலம் போயின. கோவிலுக்கு அருகில் பொதுக்கழிப்பிட வளாகத்திற்கான உரிமம், குளியலறை உரிமம், தென்னை மரங்கள் அனுபவிக்கும் உரிமம் உட்பட பல்வேறு இனங்கள் ஏலம் விட்டத்தில் என மொத்தம் 15 லட்சம் ரூபாய் கிடைத்தது. புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகத்தில் ஒரேயொரு கடைக்கான உரிமம் மட்டும் இரண்டு லட்சத்திற்கு ஏலம் போனது. பிற கடைகள் குறைவான தொகைக்கு ஏலம் கோரப்பட்டன; போதிய விலை கிடைக்காததால் கடைகளுக்கான ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.
பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகத்தில் மொத்தம் 10 கடைகள் உள்ளன. குறைந்தபட்சமாக ஒவ்வொரு கடைக்கும் மூன்று லட்ச ரூபாய் ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், ஏலதாரர்கள் குறைந்த தொகைக்கு உரிமம் கேட்டனர். தொகையை உயர்த்தாமல் தொடர்ந்து குறைந்த விலைக்கே கேட்டதால் ஏலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒரு கடை மட்டும் உரிய தொகை வந்தாதால் ஏலம் விடப்பட்டுள்ளது. மறுஏலத்திற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றனர்.