தினகரன் 12.12.2013
கோவை மாநகராட்சி பள்ளி மாணவிகளின் ஆய்வு கட்டுரை குழந்தைகள் மாநாட்டிற்கு தேர்வு
கோவை, : கோவை மாநகராட்சி பள்ளி மாணவிகளின் ஆய்வு கட்டுரை ஈரோட்டில் நடக்கவுள்ள மாநில அளவிலான தேசிய குழந்தைகள் மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மாநில அளவிலான தேசிய குழந்தைகள் மாநாடு வரும் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை ஈரோடு மாவட்டத்தில் நடக்கவுள்ளது. இதற்கான மாவட்ட அளவிலான போட்டி கோவை எஸ்.என்.எஸ் கல்லூரியில் கடந்த மாதம் 9ம் தேதி நடந்தது. இதில் கோவை ரங்கநாதபுரம் மாநகராட்சி பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் வித்யபிரியா, தீபா ஸ்ரீ, கஸ்தூரி, பாத்திமா, வித்யா ஆகி யோரின் ஆய்வு கட்டுரை தேர்வு செய்யப்பட்டது.
தற்போது இந்த மாணவிகளின் மனித ஆற்றல் என்ற தலைப்பின் கீழ் ‘மனித சமுதாயம் நோய்களை நோக்கி செல்கிறது’ என்ற ஆய்வு கட்டுரை மாநில அளவிலான தேசிய குழந்தைகள் மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டுரையில் துரித உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து கருத்துகள் உள்ளது.
மேலும், இம்மாணவிகள் ரத்தினபுரி பகுதியில் துரித உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து துண்டு பிரசுரங்களையும் தற்போது வினியோகித்து வருகின்றனர். இந்த மாநில அளவிலான மாநாட்டில் வெற்றி பெறும் பட்சத்தில் மாணவிகளின் ஆய்வு கட்டுரை 21வது தேசிய அளவிலான குழந்தைகள் மாநாட்டிற்கு தேர்வு செய்யப்படும்.