தினமணி 18.02.2010
மாநகராட்சி தேர்தல்:முதல்வர் கருத்து
பெங்களூர், பிப்.17: பள்ளித் தேர்வு அல்லது பெங்களூர் மாநகராட்சி தேர்தல் இரண்டில் ஒன்று நடக்கலாம், இரண்டையும் ஒன்றாக நடத்துவது சாத்தியமில்லை என்று முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.
பெங்களூர் மாநகராட்சி தேர்தலை மார்ச் 30-ம் தேதிக்குள் நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் பல்வேறு காரணங்களால் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபடி தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சிறப்பு அப்பீல் மனுவை அரசு தாக்கல் செய்துள்ளது.
மாநகராட்சித் தேர்தலை அரசு தொடர்ந்து ஒத்திவைத்து வருவது குறித்து முதல்வர் எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்குப் பதில் அளித்து அவர் கூறியதாவது:
பெங்களூர் மாநகராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அது சாத்தியமில்லை. மார்ச் மாதத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பியூசி தேர்வுகள் நடைபெறும்.
இந்த சமயத்தில் மாநகராட்சி தேர்தலை நடத்த போதிய வகுப்பறைகள் கிடைக்காது, ஊழியர்கள் கிடைக்க மாட்டார்கள். எனவே, தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை குறித்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம். இறுதியாக உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புப்படி செயல்படுவோம் என்றார்.