தினமணி 17.02.2010
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: ரூ.66 கோடியில் பணிகள்
கோவை, பிப்.16: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடையொட்டி கோவையில் ரூ.66.17 கோடியில் பணிகள் மேற்கொள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.
கோவை மாநகராட்சியில் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கூட்டம் மேயர் ஆர்.வெங்கடாசலம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா முன்னிலை வகித்தார்.
அரசு நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் சாலைகளை புதுப்பித்தல், பள்ளிகளில் கழிவறைகளை அபிவிருத்தி செய்தல், செம்மொழி மாநாடு நடைபெறும் மாநாடு திடலை சுற்றிலும் தொடர் குடிநீர் விநியோகம் செய்தல், நவீன வசதியுடன் கூடிய நடமாடும் கழிவறைகள் அமைத்தல், தாற்காலிக துப்புரவாளர்கள் நியமித்தல், மாநகராட்சி திருமண மண்டபங்களை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன.
இதைதவிர மாநகராட்சி பொதுநிதியில் இருந்து ரூ.24.82 கோடியில் செயல்படுத்தப்படும் பணிகளுக்கும், தனியார் பங்களிப்புடன் ரூ.8 கோடியில் செயல்படுத்தப்படும் பூங்கா அமைக்கும் பணிகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் துணை மேயர் நா.கார்த்திக், எதிர்கட்சித் தலைவர் வெ.ந.உதயக்குமார், ஆளும்கட்சித் தலைவர் ஆர்.எஸ்.திருமுகம், பிற கட்சி குழுத் தலைவர்கள் ராஜ்குமார் (அதிமுக), கே.புருசோத்தமன் (இந்திய கம்யூனிஸ்ட்), சி.பத்மநாபன் (மார்க்சிஸ்ட்), மண்டல தலைவர்கள் பைந்தமிழ் பாரி, வி.பி.செல்வராஜ், எஸ்.எம்.சாமி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.