தினமலர் 02.02.2010
துணை முதல்வருக்கு வரவேற்பு நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
அரியலூர்: அரியலூர் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், நகராட்சி தலைவர் விஜயலெக்ஷ்மி செல்வராஜ் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சுப்ரமணியன் வரவேற்றார். நிர்வாக அலுவலர் சமயச்சந்திரன், தலைமை எழுத்தர் குமரன் முன்னிலை வகித்தனர். கோமதி தீர்மானங்களை படித்தார். நகராட்சி கவுன்சிலர்கள் பலரும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், அரியலூர் நகராட்சி பகுதியை அழகு படுத்தி, மேம்படுத்தும் பணிகளை தனியார் நிறுவனத்துக்கு விடுவது பற்றிய தீர்மானம் பெரும்பாலான கவுன்சிலர்களால் நிராகரிக்கப்பட்டது. ஃபிப்., 4ம் தேதி அரியலூர் மாவட்டத்தில் நடக்கும் சமத்துவபுர திறப்பு விழா, அரசு கட்டிடங்களை திறந்து வைத்து, புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும், தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் வரவேற்புக்கான முன்னேற்பாடுகளை நகராட்சி சார்பில் சிறப்பாக செய்வது.
தமிழககத்திலுள்ள ஏழை, எளிய மக்களின் நலன் கருதி, தமிழகம் முழுவதும் கான்கிரீட் வீடுகளை கட்டித்தரும் நோக்கத்துடன், தமிழகம் முழுவதும் 21 லட்சம் குடிசை வீடுகளை, கான்கிரீட் வீடுகளாக மாற்றி கட்டி தரும், இந்தியாவின் முன்னோடி திட்டத்தை சட்டசபையில் அறிவித்துள்ள தமிழக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு நகராட்சி சார்பில் நன்றி தெரிவிப்பது. அரியலூர் நகராட்சி பகுதியில் வைக்கப்படவுள்ள விளம்பர பலகைகளுக்கான கட்டணத்தை உயர்த்த மன்றம் அங்கீகரிப்பது, அரியலூர் நகராட்சியில் எஸ்.ஜே.எஸ்.ஆர்.ஒய்., திட்டத்தின்கீழ், 2008-09 ம் ஆண்டுக்கு சமுதாய கட்டமைப்பு தலைப்பின்கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 51 ஆயிரம் ரூபாய் மற்றும் 2009-10 ம் ஆண்டுக்கு 40 ஆயிரத்து 937 ரூபாய் மற்றும் ஏ.அண்டு ஒ.இ., திட்டத்தின்கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 22 ஆயிரத்து 248 ரூபாய்க்கு, ஸ்கில் ட்ரெயினிங் புரொகிராம் வழங்க பயனாளிகளை தேர்வு செய்வது உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.