Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாமன்ற உறுப்பினர் நிதி சரிவர பயன்படுத்தப்படுவதில்லை

Print PDF

தினமணி 29.01.2010

மாமன்ற உறுப்பினர் நிதி சரிவர பயன்படுத்தப்படுவதில்லை

சென்னை, ஜன. 28: மாமன்ற உறுப்பினர் நிதி சரவர பயன்படுத்தப்படுவதில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு குறைகளை மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

கவுன்சில் எதிர்க் கட்சித் தலைவர் சைதை ரவி, கவுன்சிலர் ஆம்ஸ்டிராங் ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியது:

சைதை ரவி: மாநகராட்சிக்கு வருவாயை அதிகப்படுத்தும் வகையில் தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி விதிக்கவேண்டும். சென்னையில் செயல்பட்டு வரும் பொழுதுபோக்கு கிளப்புகளுக்கும் வரி விதிக்கவேண்டும்

கவுன்சிலர்களின் மேம்பாட்டு நிதி சரிவர செயல்படுத்தப்படுவதில்லை. ஒவ்வொரு மண்டலத்திலும் ஆய்வு மேற்கொண்டு, நிதியை சரிவர பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்பேசி கோபுரங்களுக்கு வரி விதிக்கப்படும் என்று ஏற்கெனவே கூறப்பட்டது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றார் சைதை ரவி.

இதுபோல் கவுன்சிலர் நிதி சரிவர பயன்படுத்தாதது குறித்து கவுன்சிலர் ஆம்ஸ்டிராங்கும் கூறினார்.

கவுன்சிலர் கிருபாகரன்: என்னுடைய வார்டில் (11) 15}வது வட்டத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் 600 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் போதிய அளவில் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.

போர்க்கால அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவேண்டும் என்றார்.

கவுன்சிலர் கலாவதி: மாநகராட்சி பள்ளிகள் பலவற்றில் கழிவறைகள் சரிவர சுத்தம் செய்யப்படுவதில்லை. இதனால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஒப்பந்ததாரர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த பணியை, இனி மாநகராட்சியே எடுத்துக் கொண்டு நேரடியாக பராமரிக்க வேண்டும் என்றார்.

கவுன்சிலர் மீனா: மூலக்கொத்தளம் மயான பூமி மதில் சுவரை, உடைத்து அப்பகுதி மக்கள் ஆக்கிரமித்து வருகின்றனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மேயர் அளித்த பதில்கள்:

தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி விலக்கு அளித்து தமிழக அரசு கடந்த 2003}ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையை திரும்பப்பெற தமிழக அரசுதான் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கான கோரிக்கை தமிழக அரசிடம் வைக்கப்பட்டு, தனியார் பள்ளிகளுக்கு வரி விதிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் அமைக்கப்பட்டிருக்கும் செல்பேசி கோபுரங்களுக்கு வரி விதிப்பதற்கான நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னையில் 2,217 செல்பேசி கோபுரங்கள் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுக்கு மார்ச் மாத இறுதிக்குள், முதல் அரையாண்டு வரி வசூலிக்கப்படும்.

மாமன்ற உறுப்பினர்கள் நிதி சரிவர செயல்படுத்தப்படவில்லை என்று குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதற்காக மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, நிதியை சரிவர பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

ரூ.2.5 கோடி மதிப்பில் பூங்கா அமைக்கும் பணி நிறுத்தம்! கோவில் நிலத்தை ஒதுக்க எதிர்ப்பு

Print PDF

தினமலர் 29.01.2010

ரூ.2.5 கோடி மதிப்பில் பூங்கா அமைக்கும் பணி நிறுத்தம்! கோவில் நிலத்தை ஒதுக்க எதிர்ப்பு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் நகரில் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பில் பூங்கா அமைக்கும் பணி துவக்கப் பட்ட வேகத்தில் நிறுத்தப் பட்டது. கோவில் நிலத்தை நகராட்சிக்கு ஒதுக்குவதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால், பணி நிறுத்தப் பட்டுள்ளது.அண்ணாதுரை நூற்றாண்டு விழாவையொட்டி, காஞ்சிபுரத்தில் பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார். இந்நிதியில், நகராட்சி சார்பில் காஞ்சிபுரம் குரு கோவில் அருகே அமைந்துள்ள கச்சபேஸ்வரர் நகர் பகுதியில், 5 ஏக்கர் பரப்பளவில் மூன்று கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில், நவீன பூங்கா அமைக்கப்பட உள்ளது.பூங்கா அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடம் கச்சபேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானது. அவ்விடத்தில் எவ்வித கட்டுமானப் பணிகளும் மேற் கொள்ளக் கூடாது. நிலத்திற்கு பட்டா வாங்கக் கூடாது. எப்போதும் நிலத்திற்கு உரிமை கோரக்கூடாது.கோவில் நிர்வாகம் எப்போது கேட்டாலும் நிலத்தை ஒப்படைத்து விட வேண்டும் உட்பட பல்வேறு நிபந்தனைகளுடன் கோவில் நிலத்தில் பூங்கா அமைத்து பராமரிக்க இந்து சமய அறநிலையத்துறை நகராட்சிக்கு அனுமதி அளித்தது.அதைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் சார்பில் பூங்கா அமைய உள்ள இடத்தை சுத்தம் செய்யும் பணி துவக்கப்பட்டது. இயந்திரங்கள் உதவியுடன் 5 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்திலிருந்த முட்செடிகள் அகற்றப் பட்டன. தரை சமன்படுத்தப் பட்டது.இந்நிலையில், காஞ்சிபுரம் நகர செங்குந்த மகாஜன சங்கம் நிர்வாகிகள் கோவில் நிலத்தை எவ்வித வாடகையும் வசூலிக்காமல் இலவசமாக நகராட்சிக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்து அறநிலையத்துறை நிலத்தை வழங்குவதை தடுக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

கோவில் செயல் அலுவலர் ரமணி, இடம் தொடர்பாக வழக்கு உள்ளதால் மேற்கொண்டு பூங்காப் பணிகளை தற்போது செய்ய வேண்டாம் என நகராட்சிக்கு கடிதம் அனுப்பினார். அதன்பேரில் தற்போது பூங்கா பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து, தி.மு.., கவுன்சிலர் ஆறுமுகம் நகராட்சிக் கூட்டத்தில் கேள்வி எழுப்பினார். ஆனால், கமிஷனர் முறையாக பதில் அளிக்கவில்லை.இது குறித்து, சங்க நிர்வாகிகள் கூறும்போது, பூங்கா அமைக்க நிலத்தை நகராட்சிக்கு கொடுக்க வேண்டாம் எனக் கூறவில்லை.சம்மந்தப்பட்ட 5 ஏக்கர் நிலத்தின் தற்போதைய மதிப்பு 20 கோடி ரூபாய். 2001ம் ஆண்டு அப்போதைய கலெக்டர் சமூக நலத்துறைக்கு அவ்விடத்தை ஏழு கோடி ரூபாய்க்கு கேட்டுள்ளார். எனவே, இடத்தை இலவசமாக நகராட்சிக்கு கொடுக்காமல் குறிப்பிட்ட வாடகை நிர்ணயித்து விட்டு, கொடுக்கலாம். இதன் மூலம் கோவிலுக்கும் வருவாய் கிடைக்கும்.இது தொடர்பாக, அதிகாரிகள் தகுந்த பதில் அளிக்காததால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம் என்றனர்.நகராட்சி கமிஷனர் மகாலட்சுமிதேவி கூறும்போது, நிலம் தொடர்பான வழக்கிற் கும், நகராட்சிக்கும் தொடர் பில்லை.கோவில் நிர்வாகம் வழக்கை சந்திக்கும். நிலம் நகராட்சிக்கு வழங்கப்பட்டால் நகராட்சி சார்பில் பணி துவக்கப்படும். தற்போது வழக்கு உள்ளதால் பூங்கா பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, என்றார்.

 

வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் நாகை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

Print PDF

தினமலர் 29.01.2010

வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் நாகை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

நாகை: கொசு மருந்து அடிக்க வேண்டும், வேகத்தடை அமைக்க வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.நாகை நகராட்சிக்கூட்டம் தலைவர் சந்திரமோகன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மாரிமுத்து, ஆணையர் சிவக்குமார் மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் நடந்த விவாதம்:சாகுல்ஹமீது ராஜா: நகராட்சி சார்பில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கடற்கரையில் பூங்கா மற்றும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு பராமரிப்பு இல்லாமல் வீணாகிவிட்டது. நகராட்சிப்பணியாளர்கள் ஏன் பூங்காவை பராமரிக்கவில்லை. பல மாதமாக கொசுக்களை ஒழிக்க தெரிவித்தும் பயனில்லை. சமீபகாலமாக டவுனில் நடந்து சென்றால் கூட கொசுக்கள் கடிக்கிறது. கொசு மருந்து அடிக்கிறீர்களா? இல்லையா?

ஆணையர்: நகராட்சியில் 4 கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் தான் உள்ளது. கூடுலாக கொசு மருந்து அடிக்க இயந்திரம் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரப்பணியாளர்களும் பற்றாக்குறையாக உள்ளதால் வார்டு வாரியாக கொசு மருந்து அடிக்க தெரிவித்துள்ளோம்.தலைவர்: சுகாதாரப்பணிகள் மற்றும் கொசுக்களை கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.ஜோதிராமன்: நகரில் அதிவேகமாக செல்லும் ஆட்டோக்களை கட்டுப்படுத்தவும், முக்கியமாக 13 இடங்களில் வேகத்தடை அமைக்கவும் பல கூட்டங்களில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். கவுதமன்: சமீபத்தில் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங்சவ்கான் வந்தபோது நகரில் இருந்து ஒரு சில வேகத்தடைகளையும் அதிகாரிகள் அகற்றிவிட்டனர்.

இதனால் ஆட்டோக்களும், பைக்குகளும் அதிவேகமாக செல்கின்றன.தலைவர்: நகராட்சி அதிகாரிகளின் செயல்பாடு எனக்கே வருத்தமாகத்தான் உள்ளது. குடியரசு தினவிழாவிற்கு நான் வந்தும் பல அதிகாரிகள் வரவில்லை.துணைத்தலைவர்: நகராட்சி பணிகளை முறையாக செயல்படுத்தாத அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது தலைவர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒப்பந்தக்காரர்களின் பில்லை விரைவில் அதிகாரிகள் பாஸ் செய்தால் தான் நகராட்சி பணிகளை ஒப்பந்தக்காரர்களும் விரைந்து முடிக்க வசதியாக இருக்கும்.தலைவர்: நானும், ஆணையரும் சேர்ந்து தவறு செய்யும் பணியாளரை கண்டித்தால் அவருக்கு ஆதரவாக கவுன்சிலர்கள் வருகின்றனர். இப்படி இருந்தால் எப்படி பணியாளர்களை கண்டிக்க முடியும். பரணிக்குமார்: எனது வார்டில் 100க்கும் அதிகமான மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க சர்வே எடுக்கப்பட்டு பல ஆண்டுகளாகிறது.

எப்போது இலவச பட்டா வழங்குவீர்கள். கோடைக்காலம் தொடங்குவதால் நகரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அவசர நடவடிக்கை எடுக்கவேண்டும்.ஜோதிராமன்: நகராட்சி சார்பில் ரூபாய் பல லட்சம் மதிப்பீட்டில் மின்சார சுடுகாடு கட்டப்பட்டு வீணாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் எங்களை திட்டுகின்றனர். மின்சார சுடுகாட்டின் நிலை என்ன?.சசிக்குமார்: எனது வார்டில் வாக்காளர் கணக்கெடுப்பு பணி நடப்பது பற்றி நகராட்சி அலுவலகத்தில் விசாரித்தபோது பணியாளர் ஒருவர் கவுன்சிலருக்கு தெரிவிக்கவேண்டியதில்லை என்று பொறுப்பற்ற முறையில் பதில் கூறுகிறார். ஆணையர்: கவுன்சிலர்களின் கேள்விக்கு பணியாளர்கள் முறையாக பதில் கூறவேண்டும். இனிமேல் பணியாளர்கள் தவறு செய்யமாட்டார்கள். பணியாளரின் தவறுக்கு நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

 


Page 687 of 841