Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

ரூ.பல லட்சம் வாடகை பாக்கி மாட்டுத்தாவணி கடைகளுக்கு பூட்டு : மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

தினமலர் 21.01.2010

ரூ.பல லட்சம் வாடகை பாக்கி மாட்டுத்தாவணி கடைகளுக்கு பூட்டு : மாநகராட்சி நடவடிக்கை

மதுரை : மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில், பல மாதங்களாக பல லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளை, நேற்று மாநகராட்சி அதிகாரிகள் பூட்டினர். இந்நடவடிக்கையால் ஒரே நாளில் 15 லட்சம் ரூபாய் வசூலானது.

இங்கு மொத்தம் 193 கடைகள் இருக்கின்றன. இவற்றில் பல கடைகள், பல மாதங்களாக வாடகை செலுத்தவில்லை. சில கடைகள், தலா 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாடகை பாக்கி வைத்துள்ளன. அனைத்து கடைகளும் சேர்த்து, ஒரு கோடி ரூபாய் வாடகை பாக்கி உள்ளன. அங்குள்ள ஒரு ஓட்டல் மட்டும் 10 லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளது.

இக்கடைகளுக்கு நேற்று காலை உதவி கமிஷனர் (வருவாய்) ஆர்.பாஸ்கரன், வடக்கு மண்டல உதவி கமிஷனர் ராஜகாந்தி மற்றும் அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர். பாக்கி செலுத்த தவறிய, கடைகளை பூட்டினர். சில கடைகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இந்நடவடிக்கையை அடுத்து நேற்று மட்டும் ஒரே நாளில் 15 லட்சம் ரூபாய் வசூலானது. பாக்கியை செலுத்திய கடைகள், மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டன. மற்ற கடைகள், ஒரு வாரத்தில் பாக்கியை செலுத்த வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாதத்திற்குள் அனைத்து வாடகை பாக்கியும் வசூலிக்கப்பட வேண்டும். இந்த ஆண்டு ஜனவரி மாதம் மட்டும் வசூலாக வேண்டிய வாடகையில், இதுவரை 45 சதவீதம் தான் வசூலாகி உள்ளது. எனவே "கெடுபிடி'யாக, வாடகை பாக்கியை வசூலிக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Last Updated on Thursday, 21 January 2010 07:33
 

அனுமதியின்றி 'பேனர்' வைத்தால் வழக்கு :ராணிப்பேட்டை நகராட்சி தலைவர் எச்சரிக்கை

Print PDF

தினமலர் 21.01.2010

அனுமதியின்றி 'பேனர்' வைத்தால் வழக்கு :ராணிப்பேட்டை நகராட்சி தலைவர் எச்சரிக்கை

ராணிப்பேட்டை:"நகராட்சி எல்லையில் அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைப்பவர்கள் மீது வழக்கு தொடரப்படும்' என்று ராணிப்பேட்டை நகராட்சி தலைவர் எச்சரித்துள்ளார். சமீபகாலமாக எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும், "டிஜிட்டல்' விளம்பர பேனர்கள் வைப்பது வழக்கமாகி விட்டது. ராணிப்பேட்டை நகராட்சியில் பல இடங்களில் நகராட்சி மற்றும் போலீசாரின் அனுமதியுடன் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்படுகின்றன.

சில சமயங்களில் அரசியல் கட்சியினர், திருவிழா நடத்துபவர்கள், திருமண வரவேற்பு, வாழ்த்து சொல்பவர்கள் உரிய அனுமதியின்றி டிஜிட்டல் பேனர்கள் வைக்கின்றனர். இப்படி வைக்கப்படும் பேனர்கள் பல நாட்கள் அப்படியே இருக்கும். எப்போதாவது நகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் இதுபோன்ற பேனர்களை அதிரடியாக அகற்றுவார்கள்.

இந்நிலையில், நகரில் நிலவும் நெரிசல் மற்றும் போக்குவரத்து இடையூறுகள் குறித்து ராணிப்பேட்டை நகராட்சி தலைவர் குட்டி()கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: இப்போதைய நகர்மன்றத்தின் ஆயுள் இன்னும் 20 மாதங்கள்தான். அதற்குள் செய்யவேண்டிய பணிகள் நிறைய உள்ளது. நகராட்சி எல்லையில் குறுகலான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். நகரெங்கும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்படும்.

இனி வரும் காலங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பவர்கள் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். பேனர் வைப்பவர்கள் நகராட்சி மற்றும் காவல்துறையிடம் உரிய அனுமதி பெறுவதுடன், நகராட்சியில் இற்கான கட்டணத்தை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். அப்படி அனுமதி பெறாமல் டிஜிட்டல் பேனர் வைத்தால் அவை அகற்றப்படுவதுடன் பேனர் வைத்தவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்கள் மீது வழக்கும் தொடரப்படும். அது யாராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்க மாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Last Updated on Thursday, 21 January 2010 07:27
 

தத்தனேரியிலும் நவீன எரிவாயு தகன மேடை : மாநகராட்சி கமிஷனர் தகவல்

Print PDF

தினமலர் 20.01.2010

தத்தனேரியிலும் நவீன எரிவாயு தகன மேடை : மாநகராட்சி கமிஷனர் தகவல்

மதுரை: ""மதுரை கீரைத்துறை மூலக்கரையை தொடர்ந்து, தத்தனேரி சுடுகாட்டிலும் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க, அரசு நிதி ஒதுக்கியுள்ளது,'' என, மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் தெரிவித்தார். கீரைத்துறை மூலக்கரையில், மாநகராட்சி சார்பில், 3.12 ஏக்கரில், ரூ.2.8 கோடி செலவில், "அஞ்சலி' என்ற பெயரில், நவீன எரிவாயு தகன மேடை அமைக் கப்பட்டுள்ளது. இதை பத்து ஆண்டுகளுக்கு பராமரிக்கும் பொறுப்பை மதுரை ரோட்டரி மிட்-டவுன் ஏற்றுள்ளது. இதன் துவக்க விழா நேற்று நடந்தது. திட்ட ஒருங்கிணைப் பாளர் நிக்கோலஸ் பிரான்சிஸ் வரவேற்றார். மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் பேசியதாவது :

உடலை எரிக்கும் புகையால் சுற்றுச்சூழல் பாதிக்காது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சான்று அளித்துள்ளது. சாம்பல் மீது தண்ணீர் தெளித்து, அதை தண்ணீருடன் கலந்து, மீண்டும் மறுசுழற்சி செய்து நீருற்றுக்கு பயன்படுத்தும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. இங்குள்ள இரு தகன மேடையில், தினமும் தலா 24 உடல் களை எரிக்கலாம். கூடுதலாக ஒரு தகன மேடை தயாராக உள்ளது. தத்தனேரி சுடுகாட்டிலும், இதுபோன்ற எரிவாயு தகன மேடை அமைக்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது, என்றார். நன்மாறன் எம்.எல்.., மேயர் தேன்மொழி, துணை மேயர் மன்னன், மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி தலைமை பொறியாளர் சக்திவேல், ரோட்டரி கவர்னர் புருஷோத்தமன், மிட்-டவுன் தலைவர் ராமபாரதி, செயலாளர் மதன் பங்கேற்றனர். என்னென்ன வசதிகள் கிடைக்கும்: .எஸ்.., தரச் சான்றிதழ் பெற்ற இந்த சுடுகாட்டில் தியான மண்டபம், அஞ்சலி மண்டபம், மொட்டை போட்டு இறுதிச்சடங்கு செய்ய மண்டபம், இருபாலருக்கும் தனித்தனி கழிப்பறை, குளியலறை, பார்க்கிங் வசதி உண்டு. ரம்மியமான இசையை கேட்கும் வசதியும் உண்டு. காஸில் 40 நிமிடத்தில் பிணத்தை எரித்து, அஸ்தி கொடுக்கப்படும். குடிபோதையில் இருப்பவர்கள், சிகரெட் புகைப்பவர்களுக்கு சுடுகாடு வளாகத்திற்குள் அனுமதியில்லை. மூன்று நாட்களுக்குள் இறப்புச் சான்றிதழ் கிடைக்க ஏற்பாடு செய்கின்றனர்.

காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நவீன மயானம் செயல்படும். இங்கு உடலை எரிக்க, 0452 - 209 0900ல் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்தால் வீடு தேடி ஆம்புலன்ஸ் வரும். "இயற்கை மரணம்' என்று டாக்டர் சான்று இருந்தால் மட்டுமே இங்கு உடலை எரிக்க முடியும். உடலை எடுத்து வருவது முதல் அஸ்தியை கொடுப்பது வரை கட்டணம் 1350 ரூபாய். மதுரை, மேலூர், நத்தம், காரியாபட்டி, திருமங்கலம், திருப்புவனம், செக்கானூரணி, உசிலம் பட்டி, வாடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வசிப்பவர்கள் இவ்வசதியை பெறலாம். பத்து கி.மீ., அப்பால் இருந்து, ஆம்புலன்சில் உடலை கொண்டு வர, கி.மீ.,க்கு 10 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இங்கு எட்டு வெப் கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. இதன் மூலம் வெளிநாட்டில் வசிக்கும் உறவினர்கள்,www.RotaryAnjali.com என்ற வெப்சைட்டில் இறுதி சடங்கை காணலாம்.

Last Updated on Wednesday, 20 January 2010 10:50
 


Page 699 of 841