தினமணி 24.12.2009
செல்போன் டவர் அமைக்க அனுமதி மறுப்பு
திருப்பூர்,டிச.23: 15 வேலம்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உரிமம் இல்லாமல் செல்போன் டவர் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டது.
திருப்பூர் 15 வேலம்பாளையத்திற்கு உட்பட்ட கருப்பராயப்பன் கோவில் 2 வது தெருவில் தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்நிலையில் அங்கு செல்போன் கோபுரம் அமைக்க அப்பகுதிமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தனது நிலத்தில் செல்போன் கோபுரம் அமைப்பதை தடுப்பதாக கூறி அப்பகுதியை சேர்ந்த சிலர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீஸ் பாதுகாப்புடன் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடந்தது.
இதையடுத்து 15 வேலம்பாளையம் நகராட்சி உரிமம் பெறாமல் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி செல்போன் கோபுரம் அமைப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து அப்பகுதியை நகராட்சித் தலைவர் பி.எஸ்.மணி, செயல் அலுவலர் குற்றாலிங்கம் ஆகியோர் பார்வையிட்டனர். நகராட்சி உரிமம் இல்லாமல் டவர் அமைப்பதை கண்டித்தனர்.
மேலும் அந்த இடத்தில் டவர் அமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களை அப்புறப்படுத்துமாறு கேட்டுóக்கொண்டனர்.