தினகரன் 24.12.2009
செல்போன் டவர் அமைக்க முயற்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்
திருப்பூர்,:திருப்பூர் அடுத்துள்ள 15 வேலம்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு பெரியார் காலனி கருப்பராயன் கோயில் 2வது வீதியில் பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் தனியார் செல்போன் நிறுவனம் ஒன்று டவர் அமைக்க பழனிச்சாமி என்பவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தம் செய்து, அதற்கான பணிகளை துவக்கியது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் டவர் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இடத்தின் உரிமையாளர் அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் நேற்று டவர் அமைக்கும் பணிக்கு பாதுகாப்பு வழங்கினர். இதைத்தொடர்ந்து அப்பகுதியினர் நகராட்சித் தலைவர் எஸ்.பி. மணி, செயல் அலுவலர் குற்றாலிங்கம் ஆகியோரிடம் குடியிருப்பு மிகுந்த பகுதியில் டவர் அமைக்கக்கூடாது என வலியுறுத்தி புகார் செய்தனர். இதையடுத்து நகராட்சித் தலைவர், செயல் அலுவலர், பொறியாளர் மல்லிகை ஆகியோர் சம்பவ இடம் விரைந்தனர். அங்கு பணியில் ஈடுபட்ட தனியார் செல்போன் நிறுவன ஊழியர்களிடம் டவர் அமைப்பதற்கு நகராட்சி நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற்ற பின்பே செல்போன் டவர் அமைக்க வேண்டும். அனுமதி பெறாமல் டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டால் பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டி வரும் என எச்சரித்தனர். இதையடுத்து டவர் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.