தினமணி 29.11.2013
தமிழக நகரங்களில் உலகத் தரத்தில் சாலைகள் அமைக்கத் திட்டமிட வேண்டும்'
தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் உலகத் தரத்திலான சாலைகள் அமைக்கத் திட்டமிட வேண்டும் என்று, தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை செயலர் க.பனீந்திர ரெட்டி தெரிவித்தார்.
கோவையில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கான இரண்டு நாள் கலந்தாய்வுக் கூட்டத்தை தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் க.பனீந்திரரெட்டி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியது:
மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுப்படி, மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதியில் உள்ள சாலை போக்குவரத்தை மேம்படுத்தவும், எதிர்கால போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காகவும் சாலை வடிவமைப்பைத் திருத்தியமைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும.
இதற்காக நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்ட போக்குவரத்து மற்றும் வளர்ச்சித் திட்ட நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி வளர்ந்துவரும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளிலுள்ள அனைத்து முக்கிய சாலைகளும் உலக தரத்தில் அமைக்கவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் போக்குவரத்து வசதிகளை ஊக்கப்படுத்தவும், உள்ளாட்சி அமைப்புகள் வருங்காலங்களில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
இதற்கான திட்டங்களைச் செயல்படுத்தும் போது பாதசாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஓவ்வொரு சாலையிலும் நடைபாதைகள் அமைக்கப்பட வேண்டும்.
குறிப்பாக நடைபாதைகளில் எவ்வித ஆக்கிரமிப்பும் இல்லாமல் இருக்க வேண்டும்.
நகரின் சுற்றுச்சூழல் காத்திட பொதுப் போக்குவரத்து வசதிக்கு அதிகமான அளவு திட்டமிட வேண்டும். தனியார் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு சாலையிலும் பாதசாரிகள் நடைபாதையைப் பயன்படுத்துவதற்கும், எரிபொருள் பயன்பாடு இல்லாத வாகனங்களைப் பயன்படுத்துவதற்கும் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.
சாலைகளில் வாகனப் போக்குவரத்து மற்றும் நடைபாதை வசதிகள் தேவையான அளவு செய்யப்பட்ட பிறகே வாகனம் நிறுத்துமிடங்களுக்கு இட ஓதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
இந்த வசதிகள் உலகத் தரத்தில் ஒவ்வொரு சாலையிலும் அமைந்திட தற்போதுள்ள சாலை வடிவமைப்புகளைத் திருத்தி அமைத்திட வேண்டும்.
இதற்கு போக்குவரத்து மற்றும் வளர்ச்சித் திட்ட நிறுவனம் தெரிவிக்கும் நடைமுறை வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி சாலைகளை மேம்படுத்திட இந்தக் கூட்டம் உதவும் என்றார்.
கலந்தாய்வுக் கூட்டத்தில் கொலம்பியா நாட்டின் போகோட்டோ மாநகர முன்னாள் மேயர் என்ரிக் பெனோல்சா கலந்துகொண்டார். இவர் மாநகர மேயராகப் பணியாற்றியபோது போக்குவரத்தை முதன்மையாகக் கொண்டு தனிக்கவனம் செலுத்தி சாலைப் போக்குவரத்தில் உலக அளவில் முதன்மை மாநகரமாக உருவாக்கிய திட்டங்கள் குறித்தும் விளக்கப்படங்கள் மூலம் விரிவுரையாற்றினார்.
நிதி மேலாண்மை நிறுவன முதுநிலை ஆலோசகர் கே.உஷாராவ், போக்குவரத்து மற்றும் வளர்ச்சித் திட்ட நிறுவனத்தின் ஆலோசகர்கள் ஷ்ரேயா, கிரிஷ், ஜமாய் மற்றும் நகராட்சிகள் நிர்வாக இயக்குனரகத்தின் இணை இயக்குநர் (நிர்வாகம்)
செபாஸ்டின் ஆகியோர் நகரப் பகுதிகளில் சாலை மற்றும் போக்குவரத்து மேம்பாட்டிற்கான திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து கருத்துரை வழங்கினர்.
கோவை மாநகராட்சி ஆணையர் க.லதா, மதுரை மாநகராட்சி ஆணையர் கிரண் குராலா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுமதி, கோவை மாநகராட்சி துணை ஆணையர் சு.சிவராசு மற்றும் 9 மாநகராட்சி, 125 நகராட்சிகளின் ஆணையர்களும், பொறியாளர்களும், அனைத்து நகராட்சிகள் நிர்வாக மண்டல இயக்குநர்களும் கலந்து கொண்டனர்.