தினமணி 19.12.2009
மாநகராட்சி வார்டு இட ஒதுக்கீடு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
பெங்களூர், டிச.18: பெங்களூர் மாநகராட்சி வார்டு இட ஒதுக்கீடு தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
மாநகராட்சி தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து தேர்தல் அட்டவணையை வெளியிட்டது. மாநகராட்சி தேர்தலில் எல்லா சமூகத்தினரும் போட்டியிட வசதியாக 198 வார்டுகளிலும் இட ஒதுக்கீடு செய்து அரசு அறிவித்தது.
இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சிலர் வழக்குத் தொடர்ந்தனர்.
அரசு அறிவித்துள்ள இட ஒதுக்கீடு சட்டப்பேரவை தொகுதி வாரியாக தாழ்த்தப்பட்டோரை கணக்கெடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தாழ்த்தப்பட்டோருக்கு வார்டு வாரி இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை. எனவே, அரசு அறிவித்துள்ள இட ஒதுக்கீட்டை ரத்து செய்து வார்டு வாரியாக இட ஒதுக்கீடு செய்யது அறிவிக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.
அதை விசாரித்த உயர்நீதிமன்றம் அரசு அறிவித்திருந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் வார்டு வாரி புதிதாக இட ஒதுக்கீடு செய்து டிசம்பர் 23-ம் தேதிக்குள் நீதிமன்றத்óதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நகர வளர்ச்சித்துறை அதிகாரிகள் புதிய வார்டு பட்டியலைத் தயாரிக்கும் பட்டியலை செய்து முடித்தனர்.
இந்தப் பட்டியலுக்கு சரிபார்த்து இறுதி வடிவம் கொடுக்கும் நிலையில் இருந்தனர். இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பெங்களூரைச் சேர்ந்த வசுந்தரா மற்றும் சிலர் உச்சநீதமன்றத்தில் மனு செய்தனர். சட்டப்பேரவை தொகுதி வாரியாக அரசு அறிவித்த இட ஒதுக்கீட்டாலேயே எல்லோருக்கும் சமூக நீதி கிடைக்கும்.
வார்டு வாரி இட ஒதுக்கீடு செய்து அறிவித்தால் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எல்லா சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பிரதிநிதித்துவம்
கிடைக்காமல் போய்விடும். மேலும் இட ஒதுக்கீடு பிரச்னையில் தலையிட நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை என்று கூறி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரினர்.
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் பி.சதாசிவம்,சுதர்சன் ரெட்டி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. வசுந்தரா மற்றும் மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சோலி சோரப்ஜி, நாகேஷ்வரராவ், ராகவேந்திரா, மற்றும் எஸ்.ஸ்ரீவத்சா ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
இருதரப்பு வாதங்களையுமó கேட்ட நீதிபதிகள் கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர். விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.