தினமணி 03.12.2009
அரக்கோணம் நகராட்சி ஊழியர் குடியிருப்புகள் பணிஓய்வு பெற்றவர்கள் வீட்டை காலி செய்ய இறுதிக்கெடு
அரக்கோணம், டிச 2: அரக்கோணம் நகராட்சி ஊழியர்களுக்கான குடியிருப்புகளில் பணி ஓய்வுபெற்றும் குடியிருப்புகளை காலி செய்யாமல் பல வருடங்களாக தங்கியிருப்போர் அந்த வீடுகளை காலி செய்ய இறுதி கெடு விதித்து அரக்கோணம் நகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
அரக்கோணம் நகராட்சியில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் நகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கென கடந்த 1965ஆம் ஆண்டு நகராட்சிக்குட்பட்ட விண்டர்பேட்டை மெயின்சாலையில் 20 வீடுகள் கட்டித்தரப்பட்டன. பணி ஒய்விற்கு பிறகு அவர்கள் அந்த வீடுகளை காலி செய்து தர வேண்டும் என ஆணையுடன் அந்த வீடுகள் தரப்பட்டன.
இந்த வீடுகளில் அப்போது குடியேறியோர், நகராட்சி பணிகளில் இருந்து பணி ஒய்வுபெற்று விட்ட நிலையிலும் வீடுகளை காலி செய்யாமல் அதிலேயே குடியிருந்து வருகின்றனர். இதில் பலர் இறந்துவிட்டநிலையிலும் அவர்களது வாரிசுகள் அக்குடியிருப்புகளில் குடியிருந்து வருவதாக தெரிகிறது. ஒரு சில வீடுகளை சிலர் வாடகைக்கு விட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த குடியிருப்புகளில் இருந்தவர்களை திடீர் என ஆய்வு செய்த நகராட்சி நிர்வாகம், இரண்டு குடியிருப்புகளில் மட்டும் தற்போதைய பணியாளர்கள் குடியிருப்பதாகவும் மீதி 18 குடியிருப்புகளில் குடியிருப்போர் வீடுகளை காலி செய்யவேண்டும் என அந்த வீடுகளில் குடியிருப்போர்களுக்கு 15 நாள் கெடு விதித்து நோட்டீஸ் அளித்திருந்தது.
இந்நிலையில் அந்த நோட்டீஸின் கெடு டிசம்பர் 1ந்தேதி முடிவடைந்தநிலையிலும் அவர்கள் வீடுகளை காலி செய்யவில்லை. எனவே இது குறித்து இறுதி கெடு விதித்து புதன்கிழமை நகராட்சி ஆணையர் விமலா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் தினமணி நிருபரிடம் தெரிவிக்கையில், இந்த இறுதி கெடுவிற்கு பிறகும் அவர்கள் அந்த வீடுகளை காலி செய்யவில்லை எனில் குடியிருப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், அந்த வீடுகளை சீல் வைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.