தினமணி 24.11.2009
தெற்குமாரட் வீதி சாலையோர சந்தையை இடமாற்றம் செய்ய மாநகராட்சி திட்டம்
மதுரை, நவ. 23: மதுரை தெற்குமாரட் வீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோரச் சந்தையை இடமாற்றம் செய்ய, மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் மற்றும் போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் மகுடபதி ஆகியோர், அங்கு ஆய்வை மேற்கொண்டனர்.
மதுரை நகரில் தெற்குவெளிவீதி மற்றும் தெற்குமாரட் வீதி ஆகியவை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், தெற்குவாசல் அருகே தெற்குமாரட் வீதியில் சாலையோரத்தில் காய்கறிகளை விற்போர் கடை அமைக்க, மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்னையாக உள்ளது. மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், தர்ஹா என பல முக்கிய இடங்கள் உள்ள நிலையில் தெற்குமாரட் வீதியில் சாலையோர காய்கறி கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை போக்குவரத்து போலீஸôர் சுட்டிக் காட்டியுள்ளனர்.
சாலையோர காய்கறி விற்பனை சந்தையை இடமாற்றம் செய்வதற்கு, வியாபாரிகள் சம்மதிக்கவில்லை. ஆனால், வியாபாரிகள் விரும்பும் 3 மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் ஓரிடத்தை மாநகராட்சிக் கூட்டத்தின் தீர்மானத்துக்குப் பிறகு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி வட்டாரம் கூறுகிறது.