மாலை மலர் 16.11.2009
7 ராட்சத மோட்டார் மூலம் வியாசர்பாடி பாலத்தில் மழை நீர் வெளியேற்றம்: போக்குவரத்து தொடங்கியது
சென்னை, நவவ. 16-
மழைக்காலம் வந்து விட்டால் போதும் வட சென்னை மக்களை மிரட்டுவது வியாசர்பாடி ரெயில்வே சுரங்க பாலம்தான். சிறிய மழை பெய்தாலே இந்த பாலத்தின் அடியில் தண்ணீர் தேங்கி விடுகிறது.
கடந்த சில நாட்களாக பெய்த மழையில் வழக்கம் போல் பாலத்தில் தண்ணீர் தேங்கியது. மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இருந்தாலும் வெளியே உறிஞ்சி தள்ளப்படும் தண்ணீர் இன்னொரு வழியாக மீண்டும் பாலத்தின் அடியில் வந்து விடும்.
நேற்று பெய்த மழையில் வெள்ளம் அதிக அளவு சூழ்ந்தது. இதனால் இரு சக்கர வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியவில்லை. கனரக வாகனங்களும் தண்ணீரில் சிக்கி தத்தளித்ததால் கடுமை யான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதையடுத்து போர்க்கால அடிப்படையில் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க மேயர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். 50 குதிரைத்திறன் கொண்ட 3 மோட்டார்கள், 35 குதிரை திறன் கொண்ட ஒரு மோட்டார். 13.5 குதிரைத்திறன் கொண்ட 4 மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
வெளியேற்றப்படும் தண்ணீரை குழாய்கள் வழியாக ஓட்டேரி நல்லா கால்வாயில் சேர்த்தனர். நள்ளிரவு 12 மணியளவில் தண்ணீர் முற்றிலும் வெளி யேற்றப்பட்டது. இன்று காலை முதல் போக்குவரத்து வழக்கம் போல் தொடங்கியது.
கடந்த 10 நாட்களில் 2 நாட்கள் மட்டுமே அந்த வழியாக போக்குவரத்து இருந்தது. நேற்று முழு அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்பியதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.