தினமணி 5.11.2009
மன்னார்குடி நகராட்சியில் உள்ளாட்சி தின விழா
மன்னார்குடி, நவ. 4: மன்னார்குடி நகராட்சி சார்பில் திங்கள்கிழமை உள்ளாட்சி தினவிழா மற்றும் பேரணி நடைபெற்றது.
விழாவுக்கு நகர்மன்றத் தலைவர் த.கார்த்திகா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மின்வாரிய ஆலோசனைக்குழு உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன் கலந்து கொண்டு அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கும் காசோலைகள் வழங்கிப் பேசினார்.
இந்நிகழ்ச்சியையொட்டி, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், நகராட்சி அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்ட உள்ளாட்சி தின விழிப்புணர்வுப் பேரணி ராஜகோபால சுவாமி கோயிலிலிருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக நகராட்சி அலுவலகம் வந்தது. அங்கு மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நாகநாதசுவாமி கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் மீனாட்சி சூரிய பிரகாஷ், அரசுக் கல்லூரி என்.சி.சி. தலைவர் ஜி. இருளப்பன், நகர்மன்ற உறுப்பினர்கள் எம்.எஸ். வீரக்குமார், கே. ஜீவானந்தம், ஆர். பரிமளா ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, நகராட்சிப் பொறியாளர் ஏ. முருகானந்தம் வரவேற்றார். மேலாளர் (பொ) சி. ராமச்சந்திரன் நன்றி கூறினார்.