தினமணி 2.11.2009
உதகை நகராட்சி சார்பில் உள்ளாட்சி தின விழா
உதகை, நவ. 1: உதகை நகராட்சியின் சார்பில் உள்ளாட்சி தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நகர்மன்ற அலுவலகம் வரை நடைபெற்ற பேரணியில் நகர்மன்ற அதிகாரிகளும், நகர்மன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
உதகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சி தின விழா பேரணியை நகர்மன்ற தலைவர் ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் நகர்மன்ற ஆணையர் கிரிஜா, பொறியாளர் ராமமூர்த்தி, நகர்நல அலுவலர் பூங்கொடி, நகரமைப்பு அலுவலர் சவுந்திரராஜன், துணைத்தலைவர் ஜே.ரவிக்குமார் ஆகியோருடன் இளங்கோவன், முஸ்தபா, இம்தியாஸ், கார்த்திக், ரமேஷ், ரவி, நாகராஜ் உள்ளிட்ட 36 வார்டுகளின் உறுப்பினர்களுமாக நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இப்பேரணியில் உதகை நகராட்சியின் செயல்பாடுகள் குறித்த விளக்க அட்டைகளை ஏந்தி ஏராளமான மகளிர் சுய உதவிக்குழுவினரும் பங்கேற்றனர்.
மத்திய பேருந்து நிலைய வளாகத்திலிருந்து தொடங்கிய இப்பேரணி நகரின் முக்கிய சாலைகள் வழியாக நகர்மன்ற அலுவலகத்தை வந்தடைந்தது.
இந்த பேரணி சென்ற பாதைகளில் அரசின் நலத்திட்ட உதவிகள், தனி நபர்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள், நகராட்சியால் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த விளம்பர பலகைகள் ஆங்காங்கே நிறுவப்பட்டு பொதுமக்களுக்கு நகராட்சியின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.