தினமணி 2.11.2009
போடியில் உள்ளாட்சி தின விழா
போடி, நவ. 1: போடி நகராட்சி சார்பில் நடைபெற்ற உள்ளாட்சி தின விழாவில் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
போடி நகராட்சி சார்பில் உள்ளாட்சி தின விழா வர்த்தகர் சங்க திருமண மண்டபத்தில் போடி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர் பேசியதாவது:
உள்ளாட்சி அமைப்புகளின் சிறப்புகளை எடுத்துரைக்கும் விழாவாகவும், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த பணியாளர்களைக் கெüரவிக்கும் விழாவாகவும் இந்த விழா அனுசரிக்கப்படுகிறது.
போடி நகராட்சி சார்பில் பல்வேறு நலத் திட்டப் பணிகள் செயல்பட்டு வருகின்றன. அடுத்து வரும் நகராட்சி விழாக்களில் பணியாளர்கள், கவுன்சிலர்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும்.
பொதுமக்களுக்காக நகராட்சிப் பணியாளர்கள் கொண்டுவரும் திட்டங்களை செயல்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.
நகர்மன்றத் தலைவர் ரதியாபானு, துணைத் தலைவர் சங்கர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், நகராட்சி உதவிப் பொறியாளர் குணசேகரன் பொறியியல் பிரிவு திட்டங்கள் பற்றியும், சுகாதார ஆய்வாளர் சென்றாயன் சுகாதாரம் பேணப்படும் முறைகள் பற்றியும், சுய உதவிக் குழு சமூக அமைப்பாளர் தனிக்கொடி சுய உதவிக் குழுக்கள் செயல்பாடு பற்றியும், கட்டடப் பிரிவு அலுவலர் முருகானந்தம் கட்டடப் பிரிவு பணிகள் பற்றியும், வருவாய் ஆய்வாளர் ராமராஜ் வரிகள் வசூல் செய்வது பற்றியும் பேசினர்.
நகராட்சிப் பிரிவு அலுவலர் ஜலீல் தொகுத்து வழங்கினார்.
நகராட்சி மேலாளர் ராமநாதன் வரவேற்றார்.