தினமணி 18.09.2009
நகராட்சிக்கு சொந்தமான பழைய கட்டடம் இடிப்பு
திருவள்ளூர், செப். 17: திருவள்ளூர் அருகே பஸ் நிலையம் செல்லுவதற்கு இடையூறாக இருந்த பழைய நகராட்சிக் கட்டடத்தை ஊழியர்கள் இடித்து தரைமட்டமாக்கினர்.
திருவள்ளூரை அடுத்த பெரியகுப்பம் பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன் பஸ் நிலையம் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டது.
அந்த பஸ் நிலையத்துக்கு, ரயில் நிலையத்தில் இருந்து மக்கள் செல்வதற்கு போதிய அளவு வழி இல்லாமல் இருந்தது. மேலும் பஸ் நிலையம் இருப்பதே புதிதாக வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு தெரியாமல் இருந்தது. இதையடுத்து நகராட்சி சார்பில் பஸ் நிலையம் வழிக்காக ஆலோசித்து தீர்மானம் நிறைவேற்றினர்.
அதன்படி பஸ் நிலையம் அருகே பாழடைந்து கிடந்த கடைகளுடன் கூடிய பழைய கட்டடம் வியாழக்கிழமை காலை நகராட்சி ஆணையர் ஆறுமுகம், கட்டட ஆய்வாளர் குமாரவேல் உள்பட முக்கிய அதிகாரிகளின் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.