Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

புதிய கமிஷனர் பொறுப்பேற்கும் முன்பே சுறுசுறுப்பு: அலுவலகத்தில் ஒன்று திரண்ட அதிகாரிகள்

Print PDF

தினமலர்          19.11.2013

புதிய கமிஷனர் பொறுப்பேற்கும் முன்பே சுறுசுறுப்பு: அலுவலகத்தில் ஒன்று திரண்ட அதிகாரிகள்

மதுரை : மதுரை மாநகராட்சிக்கு இளம் ஐ.ஏ.எஸ், அதிகாரியை நியமித்த அறிவிப்பு வெளியான மறுநாளே, சுறுசுறுப்பான சூழலுக்கு அலுவலகம் மாறியது. அதிகாரிகள் அனைவரும் ஆஜரானதால், காற்றாடிய அறைகள் நேற்று நிரம்பி வழிந்தன. கமிஷனர் நந்தகோபால் மாறுதலுக்கு பின், ஒரு மாதமாக காலியாக இருந்த கமிஷனர் பணியிடத்தில், இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான கிரண் குராலாவை,35, நேற்று முன்தினம் அரசு நியமித்தது.

முன்னதாக, "நகராட்சிகளின் நிர்வாக பிரிவின் அதிகாரிகளில் ஒருவர் தான், கமிஷனராக பொறுப்பேற்பார்,' என்ற தகவல் உலா வந்ததால், அதிகாரிகள் பலரும் மகிழ்ச்சியில் இருந்தனர்.

எதிர்பாராதவிதமாக, 13 ஆண்டுகளுக்கு பின் நேரடி ஐ.ஏ.எஸ்., அதிகாரியை அரசு நியமித்தது, மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகுதிக்கு மீறிய கூடுதல் பொறுப்பு, வேண்டியவர்களுக்கு வேண்டிய இடத்தில் பணி நியமனம் உள்ளிட்ட நிர்வாக குளறுபடி நிறைய இருப்பதால், புதிய கமிஷனரின் செயல்பாடு குறித்து கவலை அடைந்துள்ளனர். சில மாதங்களாக வெறிச்சோடிய மாநகராட்சி அலுவலக வளாகம், அனைத்து அதிகாரிகளும் அலுவலகம் வந்ததால், நேற்று சுறுசுறுப்பாக காணப்பட்டது. மாநகராட்சிக்கு அதிகாரிகளுக்கு வழங்கிய வாகனத்தின் எண்ணிக்கையை, நேற்று தான் காணமுடிந்தது.

கமிஷனர் பொறுப்பேற்றதும், அவருக்கு அளிக்க வேண்டிய தகவல்களுக்கு தயாராக சிலரும், ஆவணங்களில் உள்ள குளறுபடிகளை கமிஷனர் பொறுப்பேற்கும் முன் சரிசெய்ய சிலரும், நேற்று அலுவலகம் வந்தனர். தற்போது கமிஷனர் பொறுப்பை கவனித்து வரும் துணை கமிஷனர் லீலாவிடம், சில ஆவணங்களுக்கு கையெழுத்து பெற சென்ற போது, ""புதிய கமிஷனர் நியமிக்கப்பட்ட பின், நான் கையெழுத்திடுவது முறையல்ல; அவர் வந்து, சரிபார்த்த கையெழுத்திடுவார்,'' என, அவர் மறுத்ததால், சிலர் பீதியடைந்துள்ளனர். முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரிகள் சிலர் ஒன்று கூடி, புதிய கமிஷனர் குறித்து கலந்துரையாடினார். பரபரப்பான இந்த சூழலில், கமிஷனர் கிரண் குராலா நாளை பொறுப்பேற்கிறார்.

 

"வானமே கூரை' மக்களை மீட்க திட்டம்! நவ., 24ல் கணக்கெடுப்பு துவக்கம்

Print PDF

தினமலர்          19.11.2013

"வானமே கூரை' மக்களை மீட்க திட்டம்! நவ., 24ல் கணக்கெடுப்பு துவக்கம்

கோவை:கோவை மாநகரத்தில், ரோட்டோர பிளாட்பாரங்களில் தங்குவோரை மீட்டு, மாநகராட்சி மூலம் காப்பகம் அமைத்து, பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணி, நவ., 24ல் துவங்குகிறது.

கோவை மாநகரத்தில், ஆதரவற்றோர், பிச்சை எடுப்பவர்கள், மனநலம் பாதித்தவர்கள் சாலையோர நடைபாதைகளை வாழிடமாக கொண்டுள்ளனர்.

அவர்கள் மீட்டு, காப்பகத்தில் பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. கோவை மாநகரத்தில் கணக்கெடுத்தபோது, 385 பேர் எவ்வித ஆதரவும் இல்லாமல், ரோட்டோரத்தில் வாழ்வது கண்டறியப்பட்டது. அதன்பின், இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், ரோட்டோர பிளாட்பாரங்களில் வசிக்கும் வீடற்றோர்களை கணக்கெடுத்து, புதிதாக காப்பகங்கள் கட்டி, அவர்களை பராமரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு மத்திய அரசு, 75 சதவீதம் நிதியும், மாநில அரசு 25 சதவீதம் நிதியும் வழங்குகிறது.

கோவையில், ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சி காப்பகத்தில் 100 பேர் பராமரிக்கப்படுகின்றனர். இதேபோன்று, பூசாரிபாளையம் சமுதாயக்கூடம், கணபதி மற்றும் ரங்கே கவுடர் வீதி அருகிலுள்ள பட்டுக்கார நூல்சந்து ஆகிய இடங்களில் உள்ள மாநகராட்சி கட்டடத்தில், காப்பகங்கள் அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

மாநகராட்சி சுகாதாரத்துறை மூலம், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை இணைத்து இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதற்காக, மாநகராட்சி நகர் நல அலுவலர் மற்றும் சமுதாய அமைப்பாளர்கள் சென்னையில் பயிற்சி பெற்றுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது.

இன்றும், நாளையும் ரோட்டோரத்தில் தங்கும் ஆதரவற்றோர்களை கணக்கெடுப்பது குறித்த களப்பயற்சி அளிக்கப்படுகிறது. அதன்பின், வரும் 24ம் தேதி முதல் டிச., 1ம் தேதி வரையிலும், வீடற்றோர் கணக்கெடுப்பு பணி துவங்கப்படுகிறது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "கணக்கெடுப்பு முடிந்ததும், கோவையில் எந்தெந்த நிலையில் எத்தனை பேர் இருக்கிறார்கள் (வயது வாரியாக) என்பதை அரசுக்கு தெரிவித்து, செயல்திட்டம் துவங்கப்படும். மாநகர எல்லைக்குள்ளும், மாநகர எல்லையில் இருந்து 3 கி.மீ..,க்குள்ளும் காப்பகம் அமைக்கலாம்' என்றனர்.

கணக்கெடுப்பு பணிக்கு, மொத்தம் 12 குழுக்கள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு குழுவிலும் இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரும், மாநகராட்சி சார்பில் சமுதாய அமைப்பாளர் ஒருவரும் இடம் பெறுகின்றனர்.

 

திருச்சி மாநகராட்சி குறைதீர் நாள் கூட்டம்

Print PDF

தினமலர்          19.11.2013

திருச்சி மாநகராட்சி குறைதீர் நாள் கூட்டம்

திருச்சி: திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெயா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று காலை நடந்தது. கமிஷனர் தண்டபாணி, நகர பொறியாளர் சந்திரன் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், 25 மனுக்கள் பெறப்பட்டது. இதில் தெரு விளக்கு சரி செய்தல், கழிப்பிடம் பராமரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வழங்கப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு, மேயர் உத்தரவிட்டார்.

 


Page 81 of 841