தினமணி 10.09.2009
அரசு ஒதுக்கிய நிதியை பயன்படுத்தாத மாநகராட்சிகள்: முதல்வர் வேதனை
பெங்களூர், செப். 9: மாநகராட்சி வளர்ச்சிக்கு ரூ. 100 கோடி ஒதுக்க அரசு முன்வந்தும் கவுன்சிலர்களின் கருத்துவேறுபாட்டால் அந்த நிதியை பயன்படுத்திக் கொள்ள முன்வரவில்லை என்று முதல்வர் எடியூரப்பா வேதனை அடைந்தார்.
பேரவையில் புதன்கிழமை பேசிய அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த அவையில் உரையாற்றிய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சியே மக்களின் வளர்ச்சியாக அமையும் என்றார்.
அவரது கருத்து அடிப்படையில் மாநிலத்தில் உள்ள 7 மாநகராட்சிகளின் அடிப்படை வளர்ச்சிக்காக அரசு தலா ரூ. 100 கோடி ஒதுக்கியது. இந்த நிதியை பயன்படுத்த திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு அளிக்கும்படி எல்லா மாநகராட்சிகளையும் அரசு கேட்டுக் கொண்டது.
ஆனால் இதுவரை 2 மாநகராட்சிகள் மட்டுமே திட்ட அறிக்கையை தயாரித்து அளித்துள்ளது. மற்ற மாநகராட்சிகளால் திட்ட அறிக்கை தயாரிக்க முடியவில்லை. இதற்கு காரணம் அந்த மாநகராட்சிகளின் கவுன்சிலர்கள் இடையே ஒற்றுமை ஏற்படவில்லை.
தங்களது வார்டுகளிலேயே புதிய திட்டங்கள் துவங்கப்பட வேண்டும், தங்களது வார்டுகளுக்கே அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டதால் அந்த மாநகராட்சிகளால் திட்ட அறிக்கை தயாரிக்க முடியவில்லை. இது வேதனை அளிக்கிறது.
இதனால் இன்னும் அத்திட்டம் கிடப்பில் உள்ளது. இதபோன்ற நிலை மாற வேண்டும். ஒட்டுமொத்த மாநகராட்சியின் வளர்ச்சியையே கருத்தில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.