தினமணி 24.08.2009
உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மரக்கன்றுகள் நடுவதை சட்டபூர்வமாக்க முயற்சி
திருப்பூர், ஆக.23: உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஆண்டுதோறும் குறிப் பிட்ட அளவு மரக்கன்றுகள் நட்டுவளர்ப்பதை சட்ட பூர்வமாக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று திருப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் சி.கோவிந்தசாமி தெரிவித்தார்.
திருப்பூர் மாநகர் முழுவதும் ஒரேநாளில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பசுமை திருப்பூர் இயக்க தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. விழாவுக்கு ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தலைமை தாங்கினார்.
திருப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் சி.கோவிந்தசாமி பேசியது:
தொழில்வளம் பெற்ற திருப்பூர் ஒருபுறம் பனியன் ஏற்றுமதி மூலம் நாட்டுக்கு அதிகளவில் பொருள் வளம் தேடிதருவதுடன், வெளி மாவட்ட, மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பையும் அளித்து வருகிறது.
ஆனால், அதற்கு மாறாக மற்றொரு புறம் சாயக்கழிவால் மாசுபட்ட நொய்யல் ஆற்றின் மூலம் திருப்பூரும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களும் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதை நிவர்த்தி செய்ய தொழில்துறையினர் பெரும் முயற்சிகள் மேற் கொண்டுள்ளனர். அதேபோல் திருப்பூரில் அளவுக்கு அதிகமான இயக்கப்படும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் காற்றும் மாசுப்பட்டு சுற்றுச் சூழலை பாதிக்கிறது.
இவ்விரு காரணங்களால் திருப்பூரில் மனித வளமும், மண்வளமும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பாதிப் பிலிருந்து திருப்பூரை பாதுகாக்க ஈஷா யோகா மையம் மேற்கொண்டுள்ள முயற்சி பாராட்டுக்குரியது.
மரக்களை வெட்டி காடுகளை அழிப்பதால் தட்பவெப்ப நிலை மாறி வறட்சி நிலையை உலகம் எதிர்கொண்டு ள்ளது. இதேநிலை நீடித்தால் குடிநீரும் பாதிக்கும் அபாயமுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதை தடுத்து பூமியின் தட்பவெப்பநிலையை சீராக்க மரங்கள் நடுவது அவசியம்.
ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு மரக்கன்றுகள் நடுவதை சட்டபூர்வமாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன் மூலம் தமிழகத்தை விரைவில் பசுமையாக்க முடியும் என்றார்.
பசுமைத்தூதராக பங்கேற்ற நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியது:
குட்டி ஜப்பான், தொழில் மாநகர், லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் பகுதி என்று பெருமையோடு திருப்பூர் குறிப்பிடப்படுகிறது. ஆனால், மறுபுறத்தில் ஆறுகள் வறண்டு நிலத்தடி நீர் கீழே சென்று கொண்டிருப்பது தெரிவதில்லை.
எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு ஒரு சிறிய விஷயமே. அதேபோல் திருப்பூருக்கு ஏற்பட்டுள்ள இப்பிரச்னைக்கு மரம் நடுவதே தீர்வு. அதன்படி பசுமை திருப்பூர் இயக் கம் மூலம் நடப்படும் இம் மரக்கன்றுகளை மக்கள் பாதுகாக்க வேண்டும் என்றார்.
நடிகை ஸ்ரேயா: எந்த ஒரு எதிர்பார்ப்புகளும் இல்லாமல் மனித வாழ்க்கைக்கு தேவையானவற்றை அளிப்பது மரங்கள் மட்டுமே. அவற்றை பெரிய அளவில் பாதுகாக்கவோ, பராமரிக்கவோ அவசியமில்லை. இருப்பினும் மனிதர்களுக்கு தேவையான ஆக்சிஜன், குளிர்ச்சியை மரங்கள் அளித்து வருகின்றன. அப்படிப்பட்ட மரங்களை பசுமை திருப்பூர் இயக்கம் மூலம் வளர்த்து பாதுகாக்க மக்கள் முன்வர வேண்டும்.