Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

விக்டோரியா ஹால் புதுப்பிக்கும் பணி 32 கடைகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ்; ஒரு வாரத்தில் காலி செய்ய உத்தரவு

Print PDF

மாலை மலர் 10.08.2009

விக்டோரியா ஹால் புதுப்பிக்கும் பணி 32 கடைகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ்; ஒரு வாரத்தில் காலி செய்ய உத்தரவு

சென்னை, ஆக. 8-

 

சென்னை நகரின் பாரம்பரிய அடையாள சின்னங்களில் ஒன்றாக திகழ்வது விக்டோரியா ஹால் 1888-ல் கட்டப்பட்ட இந்த ஹாலில் சுவாமி விவேகானந்தர், கோபாலகிருஷ்ணகோகலே, பாரதியார், சர்தார் வல்ல பாய்பட்டேல் உள்பட பல மூதறிஞர்கள் உரையாற்றி உள்ளனர்.
இந்த ஹால் பொது நல டிரஸ்டுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. 57 கிரவுண்ட் பரப்பளவுள்ள இந்த ஹால் வாடகை ரூ.28 என்பது குறிப்பிடத்தக்கது.
குத்தகை காலம் முடிந்ததும் விக்டோரியா ஹால் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. ரூ.3.23 கோடி செலவில் பழமை மாறாமல் விக்டோரியா ஹாலை புதுப்பிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக விக்டோரியா மண்டபத்திற்குள் செயல்படும் தென்னிந்திய அத்லெடிக்சங்கத்தை காலி செய்யும்படி ஏற்கனவே நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் காலி செய்யவில்லை.
இந்த நிலையில் மாநகராட்சி இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. விக்டோரியா ஹாலை சுற்றி இருக்கும் 32 கடைகள் மற்றும் தென் இந்திய அத்லெடிக் சங்கத்துக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இன்னும் ஒரு வாரத்துக்குள் கடைகளை காலி செய்ய வேண்டும் என்று அந்த நோட்டீசில் குறிப்பிட்டுள்ளனர்.

கெடு முடிவதற்குள் கடைகளை காலி செய்யாவிட்டால் இடித்து தள்ளப்படும் என்று மாநராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். கடைகளை அப்புறப்படுத்தியதும் விக்டோரியா ஹால் புதுப்பிக்கும் பணி தொடங்கும்.

 

மாநகராட்சிப் பகுதியில் காஸ் சிலிண்டருக்கு "டிப்ஸ்' தர வேண்டாம்: ஐஒசி முதுநிலை வட்டார மேலாளர்

Print PDF

தினமணி 10.08.2009

மாநகராட்சிப் பகுதியில் காஸ் சிலிண்டருக்கு "டிப்ஸ்' தர வேண்டாம்: ஐஒசி முதுநிலை வட்டார மேலாளர்

திருநெல்வேலி, ஆக. 9: மாநகராட்சி பகுதிக்குள், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களை எடுத்து வருபவர்களுக்கு வாடிக்கையாளர்கள் தனியாக பணம் கொடுக்க வேண்டாம் என, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் முதுநிலை வட்டார மேலாளர் டி. முரளி தெரிவித்தார்.

பாளையங்கோட்டை வண்ணார்பேட்டையில் "இன்டேன்' வாடிக்கையாளர் பாதுகாப்பு கருத்தரங்கு மற்றும் வாடிக்கையாளர்களுடன் நேருக்கு நேர் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களை கையாளும் முறை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதுநிலை வட்டார மேலாளர் முரளி பேசியதாவது: நிகழாண்டில் கடந்த 3 மாதங்களில் ஐஒசி ரூ. 330 கோடி லாபம் ஈட்டியுள்ளது. மொத்தம் 5 கோடி எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் மொத்த எடை 14.2 கிலோ. வாடிக்கையாளர்கள் சிலிண்டரை வாங்கும் போது எடையை சரிபார்த்து வாங்க வேண்டும். சிலிண்டர் எடுத்து வருபவர்களிடம் எடை அளவு இயந்திரங்கள் உள்ளன.

சிலிண்டருக்கு பணம் கொடுத்த ரசீதை கேட்டு வாங்க வேண்டும்.

கையெழுத்திட்டு வாங்கும்போது தேதியை குறிப்பிட வேண்டும். சிலிண்டர் எடுத்து வருபவர் அதனை உங்கள் முன்னாலே சோதனை செய்து பொருத்துவார். மாநகராட்சிப் பகுதிக்குள் இருந்தால், அவருக்கு நீங்கள் தனியாக பணம் கொடுக்க வேண்டாம்.

மாநகராட்சிக்கு வெளியே இருந்தால் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை மாவட்ட ஆட்சியர் முடிவு செய்ய வேண்டும்.

வீட்டு உபயோக சிலிண்டருக்கு அரசு மானியம் அளிக்கிறது. அதனால், வீட்டு உபயோக சிலிண்டர்களை வர்த்தக நிறுவனங்களிலோ, கார்களுக்கோ பயன்படுத்தக்கூடாது.

15 நாள்களுக்குள் புதிய இணைப்பு

புதிய இணைப்பு கேட்டு விண்ணப்பித்தால் 15 நாள்களுக்குள் இணைப்பு வழங்கப்படும். இரண்டு சிலிண்டர் கேட்டால் அதுவும் உடனடியாகத் தரப்படும். சிலிண்டர் தட்டுப்பாடு இப்போது இல்லை. சிலிண்டர் வாங்கும்போது அடுப்பு வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதில்லை. ஆனால், ஐஎஸ்ஐ முத்திரையிட்ட அடுப்பை நீங்கள் பயன்படுத்த வேண்டும். ஊழியர்கள் வீட்டுக்கு வந்து அடுப்பைச் சோதனையிடுவார்கள். அடுப்பு தரமானதாக இருந்தால் புதிய இணைப்பு வழங்கப்படும்.

எரிவாயு செல்லும் குழாய் தரமானதாக இருக்க வேண்டும். இப்போது ஸ்டீல் வயரால் பின்னப்பட்ட குழாய்கள் விற்பனைக்கு வந்துள்ளன. அதை பயன்படுத்தலாம். இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை குழாயை மாற்ற வேண்டும்.

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்தினால் சராசரி ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு 6 முதல் 8 சிலிண்டர்வரைதான் ஆகும். பெரிய கூட்டுக் குடும்பமாக இருந்தால் 12 சிலிண்டர்கள் வரை ஆகலாம் என்றார் அவர்.

தமிழ்நாடு, புதுவை நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவர் ஜி. வெங்கடாசலம், ஐஒசி திருநெல்வேலி உதவி மேலாளர் கே. பிரேமா, மதுரை ஐஒசி துணை மேலாளர் ஆரியன், திருநெல்வேலி சுந்தர் கேஸ் பங்குதாரர்கள் ஜி. நடராஜசுந்தரம், எஸ். நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

கோவை மாநகராட்சிக்கு வாங்கிய கம்ப்யூட்டர்கள் தரமானவை

Print PDF

தினமலர் 01.08.2009

 


Page 826 of 841