மாநகராட்சி குறைதீர் முகாமில் 17 மனுக்களுக்கு உடனடி தீர்வால் மகிழ்ச்சி
Thursday, 07 November 2013 06:39
administrator
நாளிதழ்௧ள் -
ந௧ரம் மற்றும் மாந௧ரம்
தினமலர் 07.11.2013 மாநகராட்சி குறைதீர் முகாமில் 17 மனுக்களுக்கு உடனடி தீர்வால் மகிழ்ச்சி
திருச்சி: மாநகராட்சி சார்பில் நடந்த குறைதீர் முகாமில், வெறும், 35 பேர் மட்டுமே பங்கேற்றது, அதிகாரிகளுக்கும், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகாமில், 17 பேரின் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள், மக்களை தேடிச் சென்று, அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி பல்வேறு மாநகராட்சி மேயர்கள், நகராட்சி தலைவர்கள், வார்டு வாரியாக குறைதீர் முகாம் நடத்தி, அதன்மூலம், மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் திருச்சி மாநகராட்சி சார்பில், மக்களை தேடிச் சென்று அடிப்படை தேவைகளையும், குறைகளையும் நிவர்த்தி செய்யும், குறைதீர் முகாம், நேற்று காலை, 10 மணி முதல், மதியம், 2 மணி வரை, நடந்தது.
ஸ்ரீரங்கம் தேவி திருமண மண்டபத்தில் நடந்த குறைதீர் முகாமில், மாநகராட்சியின், 1, 2, 3 ஆகிய வார்டு மக்கள் பங்கேற்று, தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று காலை, 10 மணிக்கு குறைதீர் முகாம் துவங்கியது.
திருச்சி மாநகராட்சி மேயர் ஜெயா தலைமையில் நடந்த குறைதீர் முகாமில், மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி, கோட்டத்தலைவர் லதா, ஸ்ரீரங்கம் கோட்ட உதவி கமிஷனர் ரங்கராஜன், கவுன்சிலர்கள் தமிழரசு, முத்துலட்சுமி, பச்சையம்மாள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அடிப்படை வசதி குறைபாடுகள் குறித்து நடந்த குறைதீர் முகாமில், காலை, 11.30 மணி வரை, சொற்ப எண்ணிக்கையிலேயே மக்கள் பங்கேற்றனர். இதனால் மேயரும், மாநகராட்சி அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
மொத்தத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில், 35 பேர் மட்டும் பங்கேற்று, தங்களின் குறைகளை தெரிவித்து, மேயர் ஜெயாவிடம் மனு அளித்தனர். முகாமில் பெறப்பட்ட, 35 மனுக்களில், 17 மனுவுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. இது மனு அளித்தவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
குறைதீர் முகாமில், பத்து பேருக்கு, புதிய சொத்து வரி விதிப்பு, மூவருக்கு, பிறப்பு சான்றிதழ், இருவருக்கு, இறப்பு சான்றிதழ், இருவருக்கு, சர்வே வரைபடம் வழங்குதல் என, 17 பேரின் மனுக்களுக்கு, உடனடி தீர்வு காணப்பட்டது. மீதியுள்ள, 18 மனுக்களை ஆய்வு செய்து, அவற்றின் மீது குறித்த காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
பசுமை திட்டம்
ஸ்ரீரங்கத்தில் நடந்த மாநகராட்சி குறைதீர் முகாமில் பங்கேற்ற மக்களில் சிலர், தங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்களுக்கு பசுமை திட்டத்தின் படி, மேயர் ஜெயா மரக்கன்றுகள் வழங்கினார். அவற்றை உரிய இடத்தில் நட்டு வைத்து, சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என்று, மரக்கன்று பெற்ற மக்களுக்கு மேயர் அறிவுறுத்தினர்.
மாநகராட்சி - கன்டோன்மென்ட் எல்லை கட்டமைப்பு : ஒருங்கிணைந்து பணிகள் மேற்கொள்ள கோரிக்கை
Wednesday, 06 November 2013 11:37
administrator
நாளிதழ்௧ள் -
ந௧ரம் மற்றும் மாந௧ரம்
தினமலர் 06.11.2013 மாநகராட்சி - கன்டோன்மென்ட் எல்லை கட்டமைப்பு : ஒருங்கிணைந்து பணிகள் மேற்கொள்ள கோரிக்கை
ஆலந்தூர் : மாநகராட்சி - கன்டோன்மென்ட் எல்லைப் பகுதியில் உள்ள கட்டமைப்பை மேம்படுத்த மற்றும் அதில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண, சேவைத் துறைகள் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.
எது கன்டோன்மென்ட்? பரங்கிமலை, கன்டோன்மென்ட் கழகம் பகுதி, 2800க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு கொண்டது. 7 வார்டுகள் கொண்ட அந்த பகுதியில், 300க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மக்கள் வசிக்கின்றனர்.
கன்டோன்மென்ட் பகுதியை சுற்றி, சென்னை மாநகராட்சி பகுதியான ஆலந்துார், பரங்கிமலை, பட்ரோடு, நந்தம்பாக்கம், மணப்பாக்கம், முகலிவாக்கம் மற்றும் பல்லாவரம் பகுதிகள் உள்ளன. இதில், ஜி.எஸ்.டி., சாலையில், கத்திப்பாரா மேம்பாலம் முதல் பல்லாவரம் வரை, மற்றும் பரங்கி மலை - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 2 கி.மீ., துாரம் வரை, கன்டோன் மென்ட் கைவசம் உள்ளது.குழப்பம் அங்கு, சாலை மேம்பாட்டு பணிகளை மாநில நெடுஞ்சாலை துறை செய்கிறது. மேலும், கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள குற்றம், சட்டம் - ஒழுங்கு மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணிகள் மாநில காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்த நிலையில், மாநகராட்சி மற்றும் கன்டோன்மென்ட் எல்லைப் பகுதியில் சாலை, கழிவுநீர், குடிநீர், மின்விளக்குகள் ஆகியவற்றை எந்த துறை அமைக்க வேண்டும் என்ற சிக்கல் நிலவுகிறது. இந்த குழப்பத்தால், சாலை பழுது, போக்குவரத்து பாதிப்பு, கழிவுநீர் அடைப்பு, சாலையில் மழைநீர் தேக்கம், சுகாதாரம் பாதிப்பு என, தீர்க்க முடியாத பிரச்னை களை, பகுதிவாசிகள் அடிக்கடி சந்தித்து வருகின்றனர். சேவைத் துறைகள் ஒருங்கிணைந்து எல்லைப் பகுதியில் உள்ள கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
கூட்டம் நடக்குமா? இதுகுறித்து, பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மாநகராட்சி, நகராட்சி, கன்டோன்மென்ட், நெடுஞ்சாலைத் துறை, மின்வாரியம், சட்டம் -ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் ஆகிய சேவைத் துறை அதிகாரிகள் மாதம் ஒருமுறை, தங்கள் பணி குறித்து ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். அப்போதுதான், எல்லைப் பகுதியில் உள்ள பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்,இவ்வாறு அவர்கள் கூறினர்.
|
|