Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

ரூ.1,200ல் மழை நீர் சேகரிப்பு தொட்டி பேரூராட்சி உதவி இயக்குனர் தகவல்

Print PDF

தினமலர்                12.08.2013

ரூ.1,200ல் மழை நீர் சேகரிப்பு தொட்டி பேரூராட்சி உதவி இயக்குனர் தகவல்

அன்னூர்:"ரூ. 1,200ல் மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்டலாம்,' என, அன்னூரில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் தெரிவித்தார்.

அன்னூர் பேரூராட்சியில் மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணி நடந்தது. அரசு மேல்நிலைப்பள்ளியில் எம்.எல்.ஏ., கருப்பசாமி பேரணியை துவக்கி வைத்தார்.

கோவை மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் திருஞானம் பேசுகையில்,""கோவை மாவட்டத்தில் அனைத்து பேரூராட்சிகளிலும் உள்ள வீடுகள், வணிக வளாகங்களில் மழை நீர் சேகரிப்பு அமைக்கும் பணி வேகப்படுத்தப்பட்டு உள்ளது.

""100 சதவீதம் வீடுகளில் மழை நீர் சேகரிப்பு அமைக்கும் பேரூராட்சிக்கு விருது வழங்கி அரசு கவுரவிக்க உள்ளது. எளிய முறையில் வீடுகளில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க 1,200 ரூபாய் மட்டுமே செலவாகும். மழை நீர் தொட்டி அமைக்கப்பட்ட இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது,'' என்றார்.

பேரணியில், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், சசூரி பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர், சுகாதார பணியாளர்கள் பங்கேற்றனர். மாதிரி வீடு தத்ரூபமாக, மழை நீர் சேகரிப்பு தொட்டியுடன் அமைக்கப்பட்டு ஊர்வலத்தில் கொண்டு வரப்பட்டது. கரகாட்ட குழு, பேண்டு வாத்தியம் ஆகியவையும் பங்கேற்றன.

""பேரூராட்சியில் உள்ள 7,200 வீடுகளில் 2,000 வீடுகளில் மழை நீர் சேகரிப்பு அமைக்கப்பட்டுள்ளது,'' என செயல் அலுவலர் கல்யாண சுந்தரம் தெரிவித்தார்.

ஒன்றிய சேர்மன் கண்ணம்மாள், பேரூராட்சி தலைவர் ராணி, மாவட்ட கவுன்சிலர் கந்தசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

 

துடியலூர், கவுண்டம்பாளைத்தில் மாநகராட்சியின் அம்மா திட்ட முகாம் மேயர் செ.ம.வேலுசாமி தொடங்கி வைத்தார்

Print PDF

தினத்தந்தி               09.08.2013

துடியலூர், கவுண்டம்பாளைத்தில் மாநகராட்சியின் அம்மா திட்ட முகாம் மேயர் செ.ம.வேலுசாமி தொடங்கி வைத்தார்

துடியலூர், கவுண்டம்பாளையத்தில் மாநகராட்சியின் அம்மா திட்ட முகாமை மேயர் செ.ம.வேலுசாமி தொடங்கி வைத்தார்.

மாநகராட்சியின் அம்மா திட்ட முகாம்

கோவையை அடுத்த துடியலூர், கவுண்டம்பாளையத்தில் கோவை மாநகராட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அம்மா திட்ட முகாமின் தொடக்க விழா வார்டு அலுவலகத்தில் நடந்தது. விழாவுக்கு மாநகராட்சி கவுன்சிலர் வக்கீல் ஆர்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் லதா திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார். முன்னதாக முகாமை தொடங்கி வைத்து மேயர் சே.ம.வேலுசாமி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

தமிழக முதல்–அமைச்சர் ஆணைக்கிணங்க இந்த திட்டம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்து. இந்த திட்டமானது நேரடியாக மக்களை சென்று அடைய கூடியது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களது குறைகளை அவர்களே நேரடியாக அதிகாரிகளிடம் தெரிவித்து அப்போதே அதற்கு தீர்வு காணமுடியும். அவ்வாறு தீர்வு காண முடியாத குறைகள் இருந்தால் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் இதுபற்றி பொதுமக்கள் கூறவேண்டும்.

4 நாட்கள் நடைபெறும்

இந்த முகாம் கவுண்டம்பாளையம், துடியலூர் பகுதிகளில் தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறும். மற்ற வார்டுகளிலும் மாநகராட்சியின் அம்மா திட்ட முகாம் தொடர்ச்சியாக நடைபெறும். பொதுமக்கள் இதனை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் சேலஞ்சர் துரை எம்.எல்.ஏ, துணை மேயர் லீலாவதி உண்ணி, மாநகராட்சி உறுப்பினர்கள் கே.எஸ்.மகேஸ்குமார், சின்னசாமி, மாரிமுத்து, சரஸ்வதி கவிச்சந்திரமோகன், வனிதாமணி, வத்சலா, அன்னபூரணி மற்றும் மாநகராட்சி துணை ஆணையர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினகரன்            08.08.2013

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

தாம்பரம், : சிட்லபாக்கம் பேரூராட்சி சார்பில் வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் மழைநீரை சேகரிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேரணியை சிட்லபாக்கம் பேரூராட்சி தலைவர் மோகன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரூராட்சி அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணி, அண்ணா தெரு, நேரு தெரு, காந்தி தெரு உள்ளிட்ட தெருக்களின் வழியாக சென்று மீண்டும் பேரூராட்சி அலுவலகம் வந்தடைந்தது.

சிட்லபாக்கம் உயர் நிலைப்பள்ளி மாணவர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர் கலந்து கொண்டு மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதகைகளை ஏந்தி சென்றனர்.  மழைநீரை சேமித்தால் நகரை பசுமையாக மாற்றாலம் என்பதை வலியுறுத்தும் வகையில் பச்சை வண்ண ஆடை அணிந்திருந்தனர்.

பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், துணை தலைவர் வீராசாமி, ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனத்தினர், கவுன்சிலர்கள் கலந்து கொண்டார்கள்.

 


Page 121 of 841