தமிழ் முரசு 16.06.2013
![tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper](http://www.tamilmurasu.org/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_6418573857.jpg)
திருச்சி:அனைத்து மலிவு விலை உணவகங்களிலும் மக்கள் தங்கள் கருத்துகளை எழுத பதிவேடு வைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் துவங்கப்பட்ட மலிவு விலை உணவகங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து கடந்த 2ம் தேதி முதல் அந்த திட்டம் திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இங்கு காலையில் இட்லி, மதியம் சாம்பார், தயிர் சாதம் வழங்கப்பட்டு வருகிறது.
திருச்சி மாநகராட்சியில் ஸ்ரீரங்கம், ஜங்சன், புத்தூர் உள்பட 10 இடங்களில் செயல்படும் மலிவு விலை உணவகங்களில் உணவு வகைகளின் சுவை, தரம் நாளுக்கு நாள் குறைய தொடங்கியது. இதுபற்றி குற்றச்சாட்டு எழுந்ததால் அனைத்து உணவகங்களிலும் தரமான, சுவையான உணவு வகை களை தயாரித்து வழங்குமாறு மகளிர் சுய உதவி குழுவினருக்கு மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி அறிவுறுத்தினார். மேயர் ஜெயா நேற்று உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இதற்கிடையே, மலிவு விலை உணவகத்தில் சாப்பிட வருவோர் அங்குள்ள நிறை, குறைகளை பதிவு செய்யும் வகையில் ஒவ்வொரு உணவகத்திலும் கருத்து பதிவேடு வைக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மலிவு விலை உணவகங்களில் தற்போது பதிவேடு வைக்கப்பட்டுள்ளது. அதில் பொது மக்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்யலாம். இந்த பதிவுகளை அப்படியே விட்டு விடாமல், அதில் குறிப்பிடப்பட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.