Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

இன்று முதல் மதியம் சாப்பாட்டுடன் ஊறுகாய்: அம்மா உணவகங்களில் ஏற்பாடு

Print PDF
தினமணி        06.06.2013

இன்று முதல் மதியம் சாப்பாட்டுடன் ஊறுகாய்:  அம்மா உணவகங்களில் ஏற்பாடு


மதுரை மாநகராட்சி பகுதியில் செயல்படும் 10 அம்மா உணவகங்களிலும், இன்று முதல் பகலில் தயிர் சாதத்தை தாளித்து வழங்கவும், எலுமிச்சை, மாங்காய் ஊறுகாய்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, ஆணையர் ஆர். நந்தகோபால் தெரிவித்தார்.

 மதுரை மாநகராட்சியில் 10 இடங்களில் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. காலையில் ரூ.1க்கு சாம்பாருடன் இட்லியும், மதியம் ரூ.5-க்கு சாம்பார் சாதமும், ரூ.3-க்கு தயிர் சாதமும் வழங்கப்பட்டு வருகிறது.

 ஆரப்பாளையம், ஆனையூர், புதூர் ராமவர்மாநகர், காந்திபுரம், ராமராயர் மண்டபம், புது ராமநாதபுரம் சாலை, சிஎம்ஆர் சாலை, மேலவாசல், திருப்பரங்குன்றம், பழங்காநத்தம் அம்மா உணவகங்களில் ஆணையர் ஆர். நந்தகோபால் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். புதுராமநாதபுரம் சாலையிலுள்ள உணவகத்தில் சாம்பாருடன் இட்லியை சாப்பிட்டு பார்த்த அவர் கூறியது:

 அம்மா உணவகத்துக்கு மதுரை மக்களிடம் சிறப்பான வரவேற்பு உள்ளது.

 ஒவ்வொரு உணவகத்திலும் காலை, பகல் நேரங்களில் எத்தனை பேர் வந்து செல்கின்றனர்? மேலும் உணவு தேவைப்படுகிறதா? எந்தெந்த உணவகத்தில் கூடுதலாக எத்தனை நபர்களுக்கு உணவு தயாரிக்கலாம்? போன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

 இந்த ஆய்வைத் தொடர்ந்து, தேவைப்படும் உணவகங்களில் கூடுதல் எண்ணிக்கையில் உணவுகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

 உணவின் தரம் சற்றும் குறையாத வகையில், கண்காணிப்பு செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். பொதுமக்களிடம் விசாரித்ததில் பகலில் சாம்பார், தயிர் சாதத்துடன் ஊறுகாய் வழங்க வேண்டும் என ஒட்டுமொத்தமாக கருத்து தெரிவித்தனர். இதை ஏற்று, ஜூன் 6-ம் தேதி (இன்று) முதல் அனைத்து உணவகங்களிலும் சாதத்துடன் எலுமிச்சை, மாங்காய் ஊறுகாய்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 இதேபோன்று, தயிர் சாதத்தை தாளித்து வழங்கினால், சுவையாக இருக்கும் என பலரும் தெரிவித்தனர். இதன்படி, இன்று முதல் தயிர் சாதம் தாளித்து விற்பனை செய்யப்படும் என்றார்.
 

மதுரையில் அம்மா உணவகத்தில் ஒரே நாளில் 10 ஆயிரம் இட்லிகள் விற்பனை

Print PDF
தினமலர்         05.06.2013

மதுரையில் அம்மா உணவகத்தில் ஒரே நாளில் 10  ஆயிரம் இட்லிகள் விற்பனை

மதுரை:மதுரையில், அம்மா உணவகம் தொடங்கிய முதல் நாளே, ரூ.1க்கு விற்ற இட்லிகள், 10 ஆயிரமும் உடனே விற்றுத் தீர்ந்தன. 10 இடங்களிலும், காலை 7 மணிக்கு தொடங்கிய விற்பனை, அரை மணி நேரத்தில் முடிந்தது. அடுத்தடுத்து கூடிய மக்கள், ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். மதிய உணவான சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கும் அதே நிலையே. ஒவ்வொரு உணவகத்திற்கும், 12 பேர் கொண்ட மகளிர் குழு, சமையல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளது. மூன்று பேர், அவசர தேவைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். பாண்டியன் கூட்டுறவு பண்டக சாலை மூலம், அரிசி, மளிகை சாமான்கள், காஸ் உள்ளிட்டவை, 15 நாட்களுக்கு ஒரு முறையும், மார்க்கெட் கண்காணிப்பாளர்கள் மூலம், காய்கறிகள் தினமும் சப்ளை செய்யப்படும்.

ஒவ்வொரு உணவகத்திலும், இட்லிக்காக, 20 கிலோ அரிசி, 5 கிலோ உளுந்து பயன்படுத்தப்படும். அவற்றை தனித்தனியே அரைக்க, ஒவ்வொரு குழுவிற்கும், பிரத்யோக கிரைண்டர்கள் தரப்பட்டுள்ளன. சாம்பார் சாதத்திற்கு, 15கிலோ அரிசி, 8 கிலோ பருப்பும், தயிர் சாதத்திற்கு 12 கிலோ அரிசியும், 12 லிட்டர் தயிரும் பயன்படுத்தப்படுகிறது. தயிரை பாதுகாக்க, "பிரிட்ஜ்' வசதி செய்துள்ளனர். சாம்பார் சாதம் 350 கிராம், தயிர் சாதம் 350 கிராம், இட்லி 100 கிராம் வீதம், எடை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இட்லி தயாரிக்க, பாத்திரத்திற்கு பதில், உயர்ரக ஓட்டல்களில் பயன்படுத்தும், "டிரே' தரப்பட்டுள்ளது. சாம்பாருக்கு ரூ.850 மதிப்பில் காய்கறிகள், ஒவ்வொரு உணவகத்திற்கும், வினியோகிக்கப்படும். "டோக்கன்' முறையில், உணவுகள் வினியோகம் செய்யப்படுகிறது.
 
அதற்கான தனி "கவுன்டர்கள்' அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் வரும் வருவாயை, அந்தந்த பகுதியில் மார்க்கெட் கண்காணிப்பாளர்கள் வசூல் செய்து, மாநகராட்சி கருவூலத்தில் செலுத்துவர். "தொடக்கம் எப்படி இருக்குமோ' என்ற தயக்கத்தில், தொடங்கிய அம்மா உணவக விற்பனை, எதிர்பார்த்ததை விட, நல்ல வரவேற்பைபெற்றது. மேலவாசல் உணவக, சமையல் குழுத்தலைவி ஜெயலட்சுமி கூறியதாவது: காலையில் 7 மணிக்கு தொடங்கிய இட்லி விற்பனை, அரை மணி நேரத்தில் முடிந்துவிட்டது. மதிய உணவிற்கு, பல மணி நேரத்திற்கு முன்னே, மக்கள் காத்திருந்தனர். தலை உறை, கை உறை என சுகாதார முறையில், உணவு தயாரிப்பும், விற்பனையும் நடக்கிறது, என்றார்.

விடுமுறை கிடையாது: விடுமுறை இல்லாமல், "அம்மா' உணவகத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளனர். சமையல் பணியில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு, சென்னையில் ரூ.300, தின ஊதியமாக வழங்கப்படுகிறது. மதுரையில் ரூ.200 முதல் ரூ.250 வரை வழங்க முடிவு செய்துள்ளனர்.

விடுமுறை இல்லாமல் இயங்கும் முதியோர் இல்லத்திற்கு வாய்ப்பில்லை குறிப்பிட்ட அளவு உணவு விற்க, முன்பே இலக்கு நிர்ணயித்திருந்தாலும், விற்பனையை பொறுத்து, உணவு தயாரிக்கும் முறையை அமல்படுத்த முடிவு செய்திருந்தனர். தொடக்கத்தில் உணவுகள் மிஞ்சினால், அவற்றை முதியோர் இல்லத்திற்கும், ஆதரவற்றோர் இல்லத்திற்கும் வழங்க, வலியுறுத்தியிருந்தனர். ஆனால், நடந்ததோ வேறு. தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு வரவேற்பு இருப்பதால், உணவுகள் முதியோர் இல்லத்திற்கு செல்ல வாய்ப்பே இல்லை. தேவைக்கு ஏற்ப, உணவு தயாரிப்பை அதிகரிக்க, முடிவு செய்துள்ளனர். சமையலர்களுக்கு தடுப்பூசி சமையல் பணியில் ஈடுபடும் மகளிர் சுயஉதவிக்குழு பெண்களுக்கு, "ஆல்பண்டசோல்' மாத்திரை, "டைபாய்டு' தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது.
Last Updated on Wednesday, 05 June 2013 12:13
 

முதல்வருக்கு நன்றி தெரிவித்து நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

Print PDF
தினமலர்         04.06.2013

முதல்வருக்கு நன்றி தெரிவித்து நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்


விழுப்புரம்:தமிழக முதல்வர் ஜெ., விற்கு நன்றி தெரிவித்து நகராட்சிக் கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.விழுப்புரம் நகராட்சியின் அவசரக் கூட்டம் நடந்தது. சேர்மன் பாஸ்கரன் தலைமை தாங்கினார். நகராட்சிப் பகுதியில் பிற்படுத்தப்பட்ட மண்டலங்களுக்கான மான்ய நிதி (2013-2014) திட்டத்தின் கீழ் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைத்தல், புதிய தார் சாலைகள் அமைத்தல், அங்கன்வாடி மையம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளுதல் மற்றும் புதிய கழிவறைகள் கட்டுதல் உள்ளிட்ட 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அ.தி.மு.க., தலைமையிலான தமிழக அரசின் இரண்டாண்டு சாதனைகளுக்கு முதல்வர் ஜெ., விற்கு நன்றி தெரிவித்தும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சி கமிஷனர் ராஜேந்திரன், இன்ஜினியர் பார்த்தீபன், வருவாய் ஆய்வாளர் சாம்ராஜ் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
 


Page 166 of 841