Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

வேலூர் பகுதியில் அம்மா உணவகத்தில் கூட்டம் அலைமோதியது ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது

Print PDF
தினதந்தி               03.06.2013

வேலூர் பகுதியில் அம்மா உணவகத்தில் கூட்டம் அலைமோதியது ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது


வேலூர் மாநகராட்சி பகுதியில் திறக்கப்பட்ட 10 அம்மா உணவகங்களிலும் நேற்று கூட்டம் அலைமோதியது. காலை இட்லி ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது. பகலில் 2 மணி நேரத்தில் சாம்பார் சாதம், தயிர்சாதம் விற்று தீர்ந்தது.

அம்மா உணவகங்கள்

வேலூர் மாநகராட்சியில் வேலூர் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகிலும், கொசப்பேட்டை மார்க்கெட் பள்ளி அருகிலும், கஸ்பா நெடுந்தெரு, விருபாட்சிபுரம் பழைய வணிக வளாகம் பின்புறம், பாகாயம் பள்ளி அருகிலும், சத்துவாச்சாரி பீடி தொழிலாளர் குடியிருப்பு, கலெக்டர் அலுவலகம் எதிரில், அலமேலு மங்காபுரம், காந்திநகர், பாரதிநகர் என 10 இடங்களில் அம்மா உணவகங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று முன்தினம் மாலை வீடியோ கான்பிரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.அம்மா மலிவு விலை உணவகங்களில் காலை 7 மணி முதல் 10 மணிவரை ஒரு ரூபாய்க்கு இட்லியும் மதியம் 12 மணிமுதல் 3 மணிவரை ரூ.5க்கு சாம்பார் சாதம், ரூ.3க்கு தயிர் சாதம் விற்பனை செய்யப்படுகிறது.

அம்மா உணவங்களை முதல்– அமைச்சர் தொடங்கி வைத்த உடன் சாம்பார் சாதம் தயிர் சாதம் விற்பனை நேற்று முன்தினம் தொடங்கியது. மாநகராட்சியில் உள்ள 10 மையங்களிலும் கூட்டம் அலை மோதியது. நேற்று முன்தினம் மட்டும் சாம்பார் சாதம், தயிர் சாதத்துக்கு ரூ.16 ஆயிரத்து 221 வசூல் ஆனது.

கூட்டம் அலைமோதியது

நேற்று காலை அனைத்து அம்மா உணவகங்களிலும் தலா 30 கிலோ அரிசி மாவுடன் இட்லி தயார் செய்யப்பட்டு இருந்தது. 10 உணவகங்களிலும் நேற்று காலை 7 மணிக்கு டோக்கன் பெற கூட்டம் அலைமோதியது. டோக்கன் வழங்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் அனைத்து இட்லிகளும் விற்று தீர்ந்தன.எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே 40 நிமிடங்களில் இட்லி விற்று தீர்ந்தது. பொதுமக்கள் பலர் இட்லி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.அதேபோல் பகல் 12 மணிக்கு மதிய உணவுக்காக திறக்கப்பட்டதும், பொதுமக்கள் உள்ளே திமு, திமுவென புகுந்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அங்குள்ள தடுப்பு கம்பிகள் உடைந்தது. பின்னர் தெற்கு போலீசார் அங்கு சென்று கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.அங்கு ஒரு மணி நேரத்தில் சாம்பார் சாதம், தயிர் சாதம் விற்று தீர்த்தது. மற்ற இடங்களில் பகல் 2 மணிக்கு அனைத்தும் விற்று தீர்ந்தது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.இதுகுறித்து கமிஷனர் ஜானகி கூறுகையில், ‘ஒரு வாரம் விற்பனையாகும் அளவை பொறுத்து அதிக இட்லி, தயிர் சாதம், சாம்பார் சாதம் தயார் செய்யப்படும். ஒரு வாரத்துக்கு பின்னர் அம்மா உணவகங்களில் குறிப்பிட்ட நேரம் வரை உணவு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். பின்னர் பற்றாக்குறை இருக்காது‘ என்றார்.

பொதுமக்கள் மகிழ்ச்சி

வேலூரில் அம்மா உணவகங்கள் திறப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், அனைத்து உணவகங்களிலும் அமோக வரவேற்பு அளித்துள்ளனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘குறைந்த விலையில் இவ்வாறு தரமாக சுவையாக கிடைக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து அம்மா உணவகங்களை நடத்தவேண்டும். மலிவு உணவில் உணவு கிடைப்பதால் இனி வேலூரில் யாரும் பட்டினியோடு இருக்க மாட்டார்கள் ஏழை எளியவருக்கும் உணவு கிடைத்து விடும். இட்லி சுவையாகவும் தரமாகவும் உள்ளது. தொடர்ந்து இதே நிலையை கடைபிடிக்க வேண்டும். கூடுதலாக அம்மா உணவகங்களை திறக்க வேண்டும்‘ என்றனர்.அம்மா உணவகம் திறந்ததால் வேலூரில் சிறிய ஓட்டல்கள், தள்ளுவண்டிகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.
 

வேலூர் அம்மா உணவகங்களில் ஒரே நாளில் ரூ.38 ஆயிரம் வசூல்

Print PDF
தினதந்தி       03.06.2013

வேலூர் அம்மா உணவகங்களில் ஒரே நாளில் ரூ.38 ஆயிரம் வசூல்


வேலூர் மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள 10 அம்மா உணவகங்களில் விற்பனை மூலம் ஒரே நாளில் ரூ.38 ஆயிரம் வசூல் ஆனது.

அம்மா உணவகம்

வேலூர் மாநகராட்சி பகுதியில் 10 இடங்களில் அம்மா உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு இட்லி ரூ.1–க்கும், சாம்பார் சாதம் ரூ.5–க்கும், தயிர் சாதம் ரூ.3–க்கும் விற்பனை செய்யப்படுகிறது.ஒரு உணவகத்துக்கு இட்லிக்கு தலா 30 கிலோ அரிசியும், சாம்பார் சாதத்துக்கு 25 கிலோ அரிசியும், தயிர் சாதத்துக்கு 25 கிலோ அரிசியும் கற்பகம் கூட்டுறவு கடைகளில் பெறப்படுகிறது. தயிர் தலா 12½ லிட்டரும் வாங்கப்படுகிறது. மேலும் தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள் வெளியில் வாங்கப்படுகின்றன.மகளிர் சுயஉதவி குழுவினர் மூலம் இங்கு உணவுகள் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.38 ஆயிரம் வசூல்

வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 10 அம்மா உணவகங்களில் நேற்று அனைத்து உணவுகளும் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தன.10 உணவகங்களிலும் சேர்த்து நேற்று ஒரே நாளில் 14 ஆயிரத்து 850 இட்லியும், 3 ஆயிரத்து 525 சாம்பார் சாதமும், 2 ஆயிரத்து 7 தயிர் சாதமும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் இந்த 10 உணவகங்களிலும் விற்பனை மூலம் ரூ.38 ஆயிரத்து 496 வசூல் ஆனது.
 

சேலம் மாநகரில் 10 இடங்களில் உள்ள ‘அம்மா’ உணவகத்தில் இட்லி, சாம்பார்– தயிர் சாதம் ரூ.33,672–க்கு விற்பனை சாப்பாட்டிற்காக நீண்ட வரிசையில் ஆர்வமுடன் பொதுமக்கள் காத்திருப்பு

Print PDF
தினதந்தி       03.06.2013

சேலம் மாநகரில் 10 இடங்களில் உள்ள ‘அம்மா’ உணவகத்தில் இட்லி, சாம்பார்– தயிர் சாதம் ரூ.33,672–க்கு விற்பனை சாப்பாட்டிற்காக நீண்ட வரிசையில் ஆர்வமுடன் பொதுமக்கள் காத்திருப்பு


சேலம் மாநகரில் 10 இடங்களில் உள்ள அம்மா உணவகம் மூலம் இட்லி மற்றும் சாம்பார்–தயிர் சாதம் நேற்று ஒரே நாளில் ரூ.33,672–க்கு விற்கப்பட்டது.

‘அம்மா உணவகம்’


சேலம் மாநகராட்சியில் மலிவு விலையில் ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் அம்மா உணவகங்கள் திறந்திட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, சேலத்தில் ரூ.2 கோடியே 31 லட்சம் மதிப்பில் 10 இடங்களில் அம்மா உணவக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

சேலம் கொண்டலாம்பட்டி மண்டலத்தில் கருங்கல்பட்டி, மணியனூர் பகுதியிலும், சூரமங்கலம் மண்டலத்தில் பழைய சூரமங்கலம் சந்தைப்பேட்டை, சூரமங்கலம் உழவர் சந்தை பகுதியிலும், அஸ்தம்பட்டி மண்டலத்தில் மண்டல அலுவலகம் அருகில், குமாரசாமிபட்டி பகுதியிலும், அம்மாபேட்டை மண்டலத்தில் முதல்அக்ரஹாரம் காய்கறி மார்க்கெட், மேற்குதெரு ஜோதி திரையரங்கம் பகுதியிலும், மேலும், வெங்கடப்பா ரோடு, சத்திரம் மேம்பாலம் அருகில் என மொத்தம் 10 இடங்களில் அம்மா உணவகம் கட்டப்பட்டுள்ளது.

ஜெயலலிதா திறப்பு

சேலத்தில் புதிதாக கட்டுப்பட்டுள்ள ‘அம்மா உணவகம்’ திட்டத்தை நேற்று முன்தினம் மாலை தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்து, வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். இதற்கான விழா சேலம் அஸ்தம்பட்டி மண்டல அலுவலகம் அருகில் உள்ள அம்மா உணவகத்தில் நடந்தது. விழாவுக்கு மாநகராட்சி மேயர் சவுண்டப்பன் தலைமை தாங்கினார். ஆணையாளர் அசோகன் வரவேற்றார். தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவுகள் மற்றும் இனிப்பு வழங்கி தொடங்கி வைத்தார்.

நேற்று முதல் உணவு வழங்குவது முறைப்படுத்தப்பட்டது. அம்மா உணவகத்தில் காலை 7 மணி முதல் 10 மணிவரையிலும், மதியம் பகல் 12 மணி முதல் 3 மணிவரையிலும் என 2 வேளை உணவகம் திறக்கப்பட்டிருக்கும். காலையில் இட்லி மட்டும் சப்ளை செய்யப்பட்டது. ஒரு இட்லி விலை ரூ.1 மட்டுமே. இதுபோல மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம் வழங்கப்பட்டது. சாம்பார் சாதம் ரூ.5–க்கும், தயிர் சாதம் ரூ.3–க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நீண்ட வரிசை

சேலம் மாநகரில் ஓட்டல்களில் ஒரு இட்லி விலை குறைந்த பட்சம் ரூ.5 ஆகும். இதுபோல சாம்பார் சாதம், தயிர் சாதம் ரூ.20 முதல் 40 வரை விற்பனைச் செய்யப்படுகிறது. ஆனால், அம்மா உணவகத்தில் மலிவான விலையில் உணவு வழங்கப்படுவதால், நேற்று சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள 10 உணவகங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் உணவை வாங்கி சாப்பிட்டனர்.

நேற்று காலை 10 உணவகங்களிலும் இட்லி மட்டும் 11,976 எண்ணம் விற்கப்பட்டு ரூ.11,976 வசூல் ஆனது. சாம்பார் சாதம் 2,985 விற்பனை செய்யப்பட்டு ரூ.14 ஆயிரத்து 925 வசூல் ஆனது. இதுபோல தயிர் சாதம் 2,257 விற்பனை செய்யப்பட்டு ரூ.6,771 வசூல் ஆனது. ஆக மொத்தம் நேற்று ஒரே நாளில் ரூ.33,672–க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 


Page 172 of 841