Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

10 இடங்களில் ‘அம்மா’ உணவகம் திறக்கப்பட்டது முதல் நாளில் இலவசமாக உணவு விநியோகம்

Print PDF
தினதந்தி       02.06.2013

10 இடங்களில் ‘அம்மா’ உணவகம் திறக்கப்பட்டது முதல் நாளில் இலவசமாக உணவு விநியோகம்

மதுரை மாநகராட்சி பகுதியில் 10 இடங்களில் ‘அம்மா’ உணவகம் திறக்கப்பட்டது. முதல்நாளான நேற்று அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கப்பட்டது.

‘அம்மா’ உணவகம்

ஏழைகள் பயன்பெறும் வகையில் சென்னையில் ‘அம்மா’ உணவகம் திறக்கப்பட்டது. மதுரை மாநகராட்சி உள்பட தமிழகத்தில் உள்ள 9 மாநகராட்சிகளிலும் ‘அம்மா’ உணவகம் நேற்று திறக்கப்பட்டது.

மதுரை நகரில் ஆரப்பாளையம், ஆனையூர், புதூர், காந்திபுரம், ராம்வர்மா நகர், ராமராயர் மண்டபம், சி.எம்.ஆர்.ரோடு, பெரியார் பஸ் நிலையம், திருப்பரங்குன்றம், பழங்காநந்தம் பஸ்நிலையம் ஆகிய 10 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த உணவகங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்து வீடியோ கான்பரசிங் மூலம் திறந்து வைத்தார்.

உணவகம் திறந்து வைக்கப்பட்டதும் உணவு வழங்கப்பட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாங்கி சாப்பிட்டனர். திறப்பு விழாவின் முதல்நாள் என்பதால் நேற்று அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கப்பட்டது.

முதல்–அமைச்சருக்கு நன்றி

பெரியார் பஸ் நிலையம் மேலவாசலில் அமைக்கப்பட்டு உள்ள ‘அம்மா’ உணவகத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு மேயர் ராஜன் செல்லப்பா முதல்–அமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

அவர் பேசும் போது, ’கோவில் நகரமான மதுரையை வன்முறையாளர்களிடம் இருந்து மீட்டெடுத்த முதல்–அமைச்சர், மதுரைக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தற்போது ஏழை, ஏளிய மக்களின் ஆகியோரின் பசியை போக்க ‘அம்மா’ உணவகங்களை திறந்து வைத்திருக்கிறார். இதற்காக மதுரை மக்களின் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்’ என்றார்.

பெண் உருக்கம்

அங்கு வந்திருந்த பயனாளி பாண்டியம்மாள் கூறுகையில், ‘‘பூ வியாபாரம் செய்து வருகிறேன். காலையில் சில நேரம் சமையல் செய்ய நேரம் இருக்காது. அப்போது எனது குழந்தைகள் பட்டினியாகத் தான் பள்ளிக்கு செல்வார்கள். தற்போது ‘அம்மா’ உணவகம் இங்கு திறக்கப்பட்டு உள்ளது. இங்கு ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி தருகிறார்கள். எனது குழந்தைகள் இங்கு சாப்பிட்டு விட்டு மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு செல்வார்கள். என்னை போல பல குடும்பங்கள் இந்த உணவகத்தின் மூலம் பயன்பெறும். எனவே முதல்–அமைச்சருக்கு நன்றி’’ என்றார்.

நன்றிக்கடன்

தொடர்ந்து அம்மா உணவகத்தில் பணியாற்றும் செல்வி என்ற பெண் பேசும் போது, ‘‘அம்மா உணவகத்தில் பணியாற்ற எங்களுக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி. ஒரு உணவகத்தில் 15 பெண்கள் பணியாற்றுகிறோம். மொத்தமுள்ள 10 உணவகத்தில் 150 பேர் பணியாற்றுகிறோம். இந்த 150 குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்றிய முதல்–அமைச்சரை உயிர் உள்ளவரை மறக்க மாட்டோம். என்றைக்கும் நன்றி கடன்பட்டிருக்கிறோம். இந்த திட்டம் சிறப்பாக நடைபெற எங்களை அர்ப்பணித்து பணியாற்றுவோம்’’ என்றார்.

திருப்பரங்குன்றம்

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அன்சுல்மிஸ்ரா, மாநகராட்சி கமிஷனர் நந்தகோபால், நகர் பொறியாளர் (பொறுப்பு) மதுரம், நகர் நல அலுவலர் யசோதாமணி, உதவி நகர்நல அலுவலர் பிரியாராஜ், உதவி கமிஷனர் தேவதாஸ், தே.மு.தி.க. எம்.எல்.ஏ. சுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம் அம்மா உணவகத்தில் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
 

ஒரு இட்லி ரூ. 1, தயிர் சாதம் ரூ.3, சாம்பார் சாதம் ரூ.5: கோவையில் 10 இடங்களில் அம்மா உணவகங்கள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

Print PDF
தினதந்தி       02.06.2013

ஒரு இட்லி ரூ. 1, தயிர் சாதம் ரூ.3, சாம்பார் சாதம் ரூ.5: கோவையில் 10 இடங்களில் அம்மா உணவகங்கள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்


கோவை மாகராட்சியில் 10 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அம்மா உணவகங்கள்


ஏழை எளிய மக்களுக்கு சுகாதார மற்றும் தரமான உணவு வகைகள் மலிவு விலையில் தினமும் கிடைக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் அம்மா உணவகங்களை 19.2.2013 அன்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இதை தொடர்ந்து கோவை, திருச்சி, மதுரை, திருப்பூர் நெல்லை, சேலம், வேலூர், தூத்துக்குடி, ஈரோடு ஆகிய 9 மாநகராட்சிகளில் புதிய அம்மா உணவகங்களை திறந்து வைத்தும் சென்னை மாநகராட்சியின் 200 அம்மா உணவகங்களில் கூடுதலாக பொங்கல் மற்றும் கறிவேப்பிலை, எலுமிச்சை சாதம் ஆகிய உணவு வகைகளின் விற்பனையை முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று மதியம் சென்னை தலைமை செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அதன்படி கோவை மாநகராட்சிக்குட்பட்ட பூ மார்க்கெட், சிங்காநல்லூர் பஸ் நிலையம், மணியகாரன்பாளையம், குறிச்சி மாநகராட்சி அலுவலகம், ராமநாதபுரம் 80 அடி ரோடு, திருமால் வீதி திருமண மண்டபம், புதிய பஸ் நிலையம், மசக்காளிப்பாளையம், சரவணம்பட்டி அம்மன் நகர், குனியமுத்தூர் ஆகிய 10 இடங்களில் அம்மா உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.

மேயர் பேச்சு

இவற்றின் திறப்பு விழா பூ மார்க்கெட் வளாகத்தில் நேற்று மதியம் நடந்தது. இதில் கோவை மேயர் செ.ம.வேலுச்சாமி, மாவட்ட கலெக்டர் எம்.கருணாகரன், எம்.எல்.ஏ.க்கள் ஆர்.சின்னசாமி, எஸ்.பி.வேலுமணி, தா.மலரவன், சேலஞ்சர்துரை, ஓ.கே.சின்னராஜ், ஆணையாளர் லதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் அம்மா உணவகங்களை பொத்தானை அழுத்தி திறந்து வைத்தார். பின்னர் கோவை மாநகராட்சி மேயர் செ.ம.வேலுச்சாமி முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து பேசியதாவது:–

கோவை மாநகராட்சியில் முதல்–அமைச்சரின் உத்தரவிற்கிணங்க பல்வேறு திட்டங்கள் மக்களின் நலனுக்காக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதன்படி கோவை மாநகராட்சியில் 10 இடங்களில் அம்மா உணவகங்கள் திறந்து வைத்த முதல்–அமைச்சருக்கு கோவை மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

பூ விற்கும் பெண்

பின்னர் ருக்மணி என்ற பயனாளி பேசியதாவது:–

நான் பூ மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்து வருகிறேன். காலை 7 மணிக்கு வியாபாரத்துக்கு வந்து விட்டால் காலை, மதியம் சாப்பாடு சாப்பிட முடியாது. டீ மட்டுமே குடித்து வியாபாரத்தை கவனிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் முதல்–அமைச்சரின் சீரிய முயற்சியினால் பூ மார்க்கெட்டிலேயே மலிவு விலை உணவகத்தை கொண்டு வந்துள்ளதால் நாங்கள் காலையிலேயே வியாபாரத்துக்கு வந்தாலும் காலை, மற்றும் மதிய உணவுகளை சாப்பிட்டு பசியாற வைத்த முதல்–அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு ருக்மணி பேசினார்.

சத்திய பிரியா என்ற பெண்மணி பேசியதாவது:–

நான் நிலா மகளிர் சுய உதவிக்குழுவில் பணியாற்றி வருகிறேன். கோவையில் 10 இடங்களில் அம்மா உணவங்களை ஏற்படுத்தியதின் மூலம் 120 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த முதல்–அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

10 இடங்களில் நடந்த அம்மா உணவக திறப்பு விழாவில் துணை மேயர் லீலாவதி, மண்டல தலைவர்கள் கணபதி ராஜ்குமார், கே.ஆர்.ஜெயராமன், கே.ஏ.ஆதிநாராயணன், எம்.பெருமாள்சாமி, கோவை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கே.பி.ராஜு, மற்றும் அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதே நேரத்தில் கோவையின் மற்ற 9 இடங்களில் அமைக்கப்பட்ட அம்மா உணவகங்களும் திறந்து வைக்கப்பட்டு பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. திறப்புவிழாவை தொடர்ந்து மேயர் செ.ம.வேலுச்சாமி அனைத்து அம்மா உணவகங்களுக்கும் சென்று உணவு தயாரிப்பது, உணவு வினியோகம் செய்வதை பார்வையிட்டார்.

மேயர் அறிவுரை

கோவை ராமநாதபுரம் அம்மா உணவகத்தை ஆய்வு செய்ய வந்த மேயர் செ.ம.வேலுச்சாமி பொது மக்களுக்கு தரமான, சுத்தமான உணவு தயாரித்து வழங்குமாறு மாநகராட்சி அதிகாரிகளையும், பணியாளர்களையும் அறிவுறுத்தினார். அப்போது கவுன்சிலர்கள் சக்திவேல்,மலர்விழி நாகரத்தினம்,கணேசன்,லலிதா மணி மற்றும் செல்வகுமார்,காட்டூர் செல்வராஜ்,தளபதி செந்தில்,வெள்ளலூர் பாலகிருஷ்ணன்,சி.சி.எம்.எஸ். ஹரிகிருஷ்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

அம்மா உணவகத்தில் ஒரு இட்லி 1 ரூபாய்க்கும், தயிர் சாதம் ரூ. 3–க்கும், சாம்பார் சாதம் ரூ. 5–க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரையிலும் அம்மா உணவகங்கள் செயல்படும். இந்த உணவகத்துக்கு ஆகும் செலவு கோவை மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும். தொடக்க விழாவான நேற்று அனைத்து அம்மா உணவகங்களிலும் கேசரி கூடுதலாக வழங்கப்பட்டன.

சூரிய ஒளி மின்சார வசதி

முதல் கட்டமாக சிங்காநல்லூர், பூ மார்க்கெட், குறிச்சி ஆகிய 3 இடங்களில் உள்ள அம்மா உணவகங்களில் சூரிய ஒளி மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு உணவகத்திலும் 2 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் திறனுள்ள சூரிய ஒளி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் 10 மின்சார விளக்குகள், 10 மின்சார விசிறிகள், ஒரு கம்ப்யூட்டர் செயல்படும். படிப்படியாக மற்ற உணவகங்களிலும் சூரிய ஒளி மின்சார வசதி செய்யப்பட உள்ளது.

ஒவ்வொரு அம்மா உணவகங்களிலும் டோக்கன் கொடுப்பதற்கு தனி இடமும், டோக்கனை கொடுத்து உணவு பெறுவதற்கு தனி இடமும், சமையலறைக்கு தனி அறையும், சாப்பிடுவதற்கு வசதியான இடமும், சாப்பிட்ட தட்டுகளை வைப்பதற்கு தனி இடமும், கைகழுவுவதற்கு தனி இடமும் விசாலமாக அமைக்கப்பட்டுள்ளன.
 

கோவையில் 10 இடங்களில் அம்மா உணவகங்கள் இன்று திறப்பு விழா

Print PDF
தினதந்தி       02.06.2013

கோவையில் 10 இடங்களில் அம்மா உணவகங்கள் இன்று திறப்பு விழா


கோவை மாநகராட்சி பகுதிகளில் மொத்தம் 10 இடங்களில் அம்மா உணவகங்கள் இன்று (ஞாயிற்றுக் கிழமை) மாலை 3.40 மணிக்கு திறக்கப்படுகிறது.
 
அவற்றை தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் முறையில் திறந்து வைக்கிறார். கோவை ஆர்.எஸ்.புரம் பூமார்க்கெட் பகுதியில் நடைபெறும் உணவக திறப்பு விழாவில் மேயர் செ.ம.வேலுசாமி, மாநகராட்சி கமிஷனர் லதா உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.மேட்டுப்பாளையம் ரோடு பஸ்நிலைய கட்டிடம், சிங்காநல்லூர் பஸ்நிலைய கட்டிடம், குறிச்சி மாநகராட்சி கட்டிடம், ராமநாதபுரம் 80 அடிரோடு மாநகராட்சி கட்டிடம், மசக்காளிபாளையம் பள்ளி வளாக கட்டிடம், சரவணம்பட்டி அம்மன்நகர், குனியமுத்தூர், மணியக்காரன்பாளையம், திருமால்வீதி திரு மண மண்டபம் ஆகிய பகுதிகளில் அம்மா உணவகம் திறக்கப்படுகிறது. இதில் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
 
திறப்பு விழா பணிகளை மேயர் செ.ம.வேலுசாமி, மாநகராட்சி கமிஷனர் லதா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது என்ஜினீயர் சுகுமாரன், மேற்கு மண்டல உதவி கமிஷனர் சுப்பிரமணியம், மக்கள் தொடர்புத்துறை உதவி இயக்குனர் கண்ணதாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
 


Page 176 of 841