Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

திருச்சியில் தயார் நிலையில் அம்மா உணவகங்கள் சோதனை அடிப்படையில் உணவு தயாரிக்கும் பணி தொடங்கியது

Print PDF
தினத்தந்தி       30.05.2013

திருச்சியில் தயார் நிலையில் அம்மா உணவகங்கள் சோதனை அடிப்படையில் உணவு தயாரிக்கும் பணி தொடங்கியது


திருச்சி மாநகராட்சியில் அம்மா உணவகங்களில் சோதனை அடிப்படையில் உணவு தயாரிக்கும் பணி தொடங்கியது.

முதல்–அமைச்சர் உத்தரவு

சென்னையில் மலிவு விலையில் அம்மா உணவகங்கள் மாநகராட்சி சார்பில் தொடங்கப்பட்டது. இந்த உணவகங்களை தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி வைத்தார். இந்த உணவகங்களில் இட்லி, தயிர் சாதம், சாம்பார் சாதம் ஆகியவை மலிவு விலையில் விற்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அம்மா உணவகம் அமோக வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாநகராட்சியில் தலா 10 இடங்களில் அம்மா உணவகங்களை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்பேரில், திருச்சி மாநகராட்சியில் 4 கோட்டங்களிலும் அம்மா உணவகங்கள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்றது.

அம்மா உணவகங்கள்

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் மாநகராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கீழ் தளத்திலும், கோ–அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்திலும், மரக்கடை ராமகிருஷ்ணா பாலம் அருகிலும், ஜங்ஷன் வழிவிடுவேல் முருகன்கோவில் அருகிலும் என மொத்தம் 10 இடங்களில் அம்மா உணவகங்கள் தயார் நிலையில் உள்ளன. அம்மா உணவகங்களை மாநகராட்சி மேயர் ஜெயா, கமிஷனர் தண்டபாணி ஆகியோர் பார்வையிட்டனர்.

ஸ்ரீரங்கம் கோட்டத்தில்...

இந்தநிலையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று(வியாழக்கிழமை) ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகிறார். இதனையொட்டி ஸ்ரீரங்கம் கோட்டத்தில் அம்மா உணவகம் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. பெரியவர்கள், குழந்தைகள் சாப்பிடும் வகையிலும், திண்டு அமைக்கப்பட்டு உள்ளது.

நேற்று பகல் சோதனை அடிப்படையில் உணவு தயாரிக்கும் பணி நடந்தது. இந்த பணிகளை ஸ்ரீரங்கம் கோட்ட உதவி கமிஷனர் ரெங்கராஜன், உதவி செயற்பொறியாளர் அமுதவள்ளி, உதவி வருவாய் அலுவலர் சண்முகம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
 

தெற்கு தில்லி மாநகராட்சி சிறப்பு குழுக்கள் இன்று தேர்வு

Print PDF
தினமணி         30.05.2013

தெற்கு தில்லி மாநகராட்சி சிறப்பு குழுக்கள் இன்று தேர்வு


தெற்கு தில்லி மாநகராட்சியின் சிறப்பு குழுக்களுக்கான தலைவர்கள், துணைத் தலைவர்கள் வியாழக்கிழமை தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இது குறித்து, மாநகராட்சி செய்தி தொடர்பாளர் முகேஷ் யாதவ் புதன்கிழமை கூறியதாவது: சிவிக் சென்டரில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற உள்ள மாநகராட்சி கூட்டத்தில் சிறப்பு குழுக்களுக்கான தலைவர், துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

ஒழுங்கு நடவடிக்கைக் குழு, பணிக்குழு, பொது சுகாதாரக் குழு,  சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் குழு, சட்டக் குழு, உயர்நிலை சொத்து வரி குழு, ஹிந்தி வளர்ச்சிக் குழு, விளையாட்டு மேம்பாட்டுக் குழு; மாநகராட்சி கணக்குகள் நிர்வாகக் குழு உள்ளிட்ட சிறப்பு குழுக்களுக்கு தலைவர், துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

உரிமம் அளிக்கும் குழு; சமூக நலத்துறை சேவைக் குழு, தாழ்த்தப்பட்டோர் நலக்குழு,  மகளிர் நலம் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுக் குழு, மலேரியா தடுப்புக் குழு, புகார் நடவடிக்கை குழு, வெள்ளத் தடுப்புக் குழு, தேசிய விழா மற்றும் கண்காட்சி அமைப்புக் குழு ஆகிய இடைக்காலக் குழுக்களுக்கான தலைவர், துணைத்தலைவர்கள் வெள்ளிக்கிழமை (மே 31) நடைபெறும் மாநகராட்சி கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவர் என்று முகேஷ் யாதவ் கூறினார்.
 

நெல்லையில் அம்மா உணவகத்தில் சோதனை முறையில் உணவு தயாரிப்பு: மக்களுக்கு இலவசமாக விநியோகம்

Print PDF
தினமணி         30.05.2013

நெல்லையில் அம்மா உணவகத்தில்  சோதனை முறையில் உணவு தயாரிப்பு:  மக்களுக்கு இலவசமாக விநியோகம்


மேலப்பாளையத்தில் அம்மா மலிவு விலை உணவகத்தில் புதன்கிழமை சோதனை முறையில் உணவு தயாரிக்கப்பட்டு, மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டது.

 திருநெல்வேலி மாநகராட்சியில் 10 இடங்களில் அம்மா மலிவு விலை உணவகங்கள் அமைக்கப்படுகின்றன. இதை முதல்வர்

 ஜெயலலிதா ஜூன் முதல் வாரத்தில் விடியோ கான்பரன்சிங் மூலம் திறந்துவைக்கிறார்.

 இதையொட்டி உணவகப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெறுகின்றன. உணவகங்கள் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. இதற்காக மகளிர் குழுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஓர் உணவகத்துக்கு 12 பேர் வீதம் 120 பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

 இதில் மேலப்பாளையம் மண்டல அலுவலக வளாகம், தச்சநல்லூர் அலகு அலுவலக வளாகம் ஆகிய 2 இடங்களிலும் உணவகப் பணிகள் முடிந்துள்ளன. இதையடுத்து இங்கு சோதனை முறையில் உணவு தயாரித்து மக்களுக்கு இலவசமாக வழங்க மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது.

 சோதனை முறை: மேலப்பாளையம் அம்மா உணவகத்தில் புதன்கிழமை உணவு தயாரிக்கப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்பட்டது.

 காலையில் 300 பேர் சாப்பிடும் வகையில் 1,200 இட்லிகளும், மதியம் 300 சாம்பார் சாதங்களும், 300 தயிர் சாதங்களும் தயாரிக்கப்பட்டன.

 மேயர் விஜிலா சத்தியானந்த், துணை மேயர் பூ. ஜெகநாதன், மண்டலத் தலைவர்கள் ஹைதர் அலி (மேலப்பாளையம்), மாதவன் (தச்சநல்லூர்), ஆணையர் த. மோகன், மாநகராட்சி அதிகாரிகள் உணவை ருசித்தனர்.
 உணவு நட்சத்திர ஹோட்டல் தரத்துடன் இருப்பதாக மக்கள் பாராட்டினர். சுவை, தரம் நீடிக்க வேண்டும் என அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

 தச்சநல்லூர் உணவகத்தில் வியாழக்கிழமை சோதனை முறையில் உணவு தயாரிக்கப்பட்டு இலவசமாக வழங்கப்படுகிறது.

 இதுகுறித்து மேயர் கூறியதாவது: மேலப்பாளையம், தச்சநல்லூரில் தலா ஓர் உணவகப் பணிகள் முடிந்துவிட்டன. வெள்ளிக்கிழமைக்குள் (மே 31) 6 உணவகங்கள் தயாராகிவிடும். 4 இடங்களில் மட்டும் தாற்காலிகமாக உணவகம் செயல்படும். அவையும் ஒரு மாதத்துக்குள் தயாராகிவிடும்.

 உணவகங்கள் காலை 7 முதல் மாலை 4 மணி வரை செயல்படும். இட்லி ரூ. ஒன்றுக்கும், சாம்பார் சாதம் ரூ. 5-க்கும், தயிர் சாதம் ரூ. 3-க்கும் விற்கப்படும்.

 உணவுகளை சரியான நேரத்தில் தயாரித்து, விநியோகிப்பது தொடர்பாக மேலப்பாளையத்தில் புதன்கிழமை சோதனை ஓட்டம் நடைபெற்றது. உணவகங்களை முதல்வர் ஜூன் முதல் வாரத்தில் திறந்துவைப்பார் என்றார் மேயர்.

 உணவகங்கள் அமையும் இடங்கள்

 1. மேலப்பாளையம் மண்டல அலுவலக வளாகம், 2. மேலப்பாளையம் பழைய அலகு அலுவலக வளாகம் (அரசு மருத்துவமனை எதிர்புறம்), 3. தச்சநல்லூர் அலகு அலுவலக வளாகம், 4. பேட்டை மாநகராட்சி மருத்துவமனை வளாகம், 5. நகரம் தொண்டர் சன்னதி அருகேயுள்ள மருத்துவமனை வளாகம், 6. நகரம் வையாபுரிநகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே, 7. சந்திப்பு கணேசபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளிக் கட்டட வளாகம், 8. பாளை. மனக்காவலம்பிள்ளை மாநகராட்சி மருத்துவமனை வளாகம், 9. பாளை. டாக்டர் அம்பேத்கர் காலனி (மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் அலுவலக புதிய கட்டடம் எதிர்புறம்), 10. பாளை. திம்மராஜபுரம் அலகு அலுவலகம் அருகே.
 


Page 179 of 841