Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

தெற்கு தில்லி மாநகராட்சி வார்டு கமிட்டி தேர்வு

Print PDF
தினமணி        18.04.2013

தெற்கு தில்லி மாநகராட்சி வார்டு கமிட்டி தேர்வு


தெற்கு தில்லி மாநகராட்சி வார்டு கமிட்டிகளுக்கான தலைவர், துணை தலைவர் தேர்தல் புதன்கிழமை நடைபெற்றது.

 மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தலில், தெற்கு மண்டல வார்டு கமிட்டிக்கு பாஜகவின் கர்தார் சிங் (தலைவர்), ராஷ்ட்ரீய லோக் தளக் கட்சியின் அனிதா தியாகி (துணை தலைவர்), பாஜகவின் சத்யேந்தர் பிரகாஷ் (உறுப்பினர்) ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 மேற்கு மண்டல வார்டு கமிட்டிக்கு பாஜகவின் ஷ்யாம் சர்மா (தலைவர்), சுயேச்சை உறுப்பினர் நரேஷ் பலியான் (துணை தலைவர்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 நஜஃப்கர் மண்டல வார்டு கமிட்டிக்கு பாஜகவின் குல்தீப் சோலங்கி (தலைவர்), சுயேச்சை உறுப்பினர் பூனம் பரத்வாஜ் (துணை தலைவர்) போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 தலைவருக்கு போட்டியிட்ட இந்திய தேசிய லோக் தள கட்சியின் வேட்பாளர் நீலம், துணை தலைவருக்கு போட்டியிட்ட சுயேச்சை உறுப்பினர் பிரதீப் குமார் ஆகியோர் வேட்பு மனுவை திரும்பப் பெற்றனர்.
 குலுக்கல் முறையில் தேர்வு:

 தெற்கு தில்லி மாநகராட்சியின் மத்திய மண்டல வார்டு கமிட்டி தலைவருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சந்திர பிரகாஷும், காங்கிரஸ் கட்சியின் வீரேந்திர கஸôனாவும் போட்டியிட்டனர். இருவருக்கும் தலா 15 வாக்குகள் கிடைத்தால் குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்றது.

 அதில், வீரேந்தர் கஸôனா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். மத்திய மண்டல வார்டு கமிட்டி துணை தலைவராக தேசியவாத காங்கிரஸின் ஃபூல் கலி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 

ரூ.20-க்கு கிலோ அரிசி திட்டம் அறிமுகம்

Print PDF
தினமணி        18.04.2013

ரூ.20-க்கு கிலோ அரிசி திட்டம் அறிமுகம்


ஒரு கிலோ அரிசி ரூ.20-க்கு விற்பனை செய்யும் திட்டம் ஈரோட்டில் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் தொடக்க விழா ஈரோடு பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்காடியில் நடைபெற்றது. இத் திட்டத்தை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் பேசியது:

குறைந்த விலையில் தரமான அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக நடத்தப்படும் அமுதம் கூட்டுறவு அங்காடிகள், புதிதாகத் திறக்கப்படவுள்ள சிறப்புக் கடைகள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் மொத்த விற்பனை பண்டக சாலைகளால் நடத்தப்படும் சில்லறை அங்காடிகளில் விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இத் திட்டத்தில் புழுங்கல் அரிசி மற்றும் பச்சரிசி 5,10, 25 கிலோ பாக்கெட்டுகளில் கிடைக்கும் என்றார்.

மேயர் ப.மல்லிகா பரமசிவம், துணைமேயர் கே.சி.பழனிசாமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் சு.கணேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) இரா.சுகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் துர்கா மூர்த்தி, மாநகராட்சி மண்டலக் குழு தலைவர்கள் இரா.மனோகரன், பி.கேசவமூர்த்தி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் த.பிரபு உள்பட பலர் பங்கேற்றனர்.
 

அரவக்குறிச்சி, பள்ளபட்டி பேரூராட்சியில் அம்மா திட்டத்தில் ரூ. 5 கோடியே 50 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

Print PDF
தினமணி          15.04.2013

அரவக்குறிச்சி, பள்ளபட்டி பேரூராட்சியில் அம்மா திட்டத்தில் ரூ. 5 கோடியே 50 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

அரவக்குறிச்சி, பள்ளபட்டி பேரூராட்சியில் மக்களைத் தேடி வருவாய்துறை என்ற அம்மா திட்டத்தின் கீழ் ரூ. 5கோடியே 50 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மற்றும் மக்களவை உறுப்பினர் மு.தம்பிதுரை ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை வழங்கினர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் பள்ளபட்டி பேரூராட்சியில் அம்மா திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவி மற்றும் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மற்றும் மக்களவை உறுப்பினர் மு.தம்பிதுரை ஆகியோர் மொத்தம் 251 பயனாளிகளுக்கு ரூ. 5 கோடியே 50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

விழாவில் போக்குவரத்துதுறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசியது, மக்களை அரசு நிர்வாகம் சந்தித்து அவர்கள் தேவையை நிறைவேற்றும் வகையில் அம்மா தி்ட்டம் உருவாக்கப்பட்டது. திட்டம் என்பது மக்களுக்காக அல்ல என்பதை மாற்றி மக்களுக்காகத்தான் திட்டம் என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது அம்மா திட்டம்.

அந்த அடிப்படையில், இத்திட்டத்தில் அரவக்குறிச்சி பகுதியில் கடந்த வாரத்தில் மனுக்கள் பெறப்பட்டது. 7 நாட்களுக்குள் அந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு இன்று அவர்களுகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இந்த சம்பவம் வரலாற்றில் இல்லாத ஒன்றாகும். அரவக்குறிச்சி பேரூராட்சியில் மட்டும் 127 பேருக்கு முதியோர் உதவித்தொகைகளும், 20 ஆண்டுகளாக பட்டா கோரி போராடி வந்த ஜீவாநகர் மக்கள் 37 பேருக்கு வீட்டுமனை பட்டா, இதர சான்றுகள் என மொத்தம் 176 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 40 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

அதே போல பள்ளபட்டி பேரூராட்சியிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அரவக்குறிச்சி மற்றும் பள்ளபட்டி பேரூராட்சிகளில் மொத்த மதிப்பு 251 பயனாளிகளுக்கு ரூ. 5 கோடியே 50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுதும் முதியோர் உதவித் தொகை ரூ. 1000 மாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 23 லட்சம் பயனாளிகள் பயன்பெற்று வந்தனர். தற்போது 30 லட்சம் பயனாளிகள் இதன் மூலம் பயன் பெறுகின்றனர். இவை அம்மா திட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இப்பகுதி மக்கள் 2009 ல் நடைபெற்ற மக்களவை தேர்தல், 2011ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் அதிமுகவிற்கு மக்களாகிய நீங்கள் ஆதரவு அளித்தது போல தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எப்போதும் நல்ல ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் பி.குருசாமி, பரமத்தி ஒன்றிய செயலாளர் மார்க்கண்டேயன், அரவக்குறிச்சி பேரூராட்சிதலைவர் என்.மணிகண்டன், பள்ளபட்டி பேரூராட்சி தலைவர் சி.ஏ.சையதுஇப்ராஹீம், அரவக்குறிச்சி பேரூராட்சி துணைத்தலைவர் சிவசெல்வி, உறுப்பினர்கள் எம்ஜிஆர் மனோகரன், ஜோதி, அயூப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 


Page 203 of 841