Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

கோவையில் 15 இடங்களில் மலிவு விலை உணவகங்கள்

Print PDF
தினமணி        09.04.2013

கோவையில் 15 இடங்களில் மலிவு விலை உணவகங்கள்

கோவை மாநகராட்சியில் 15 இடங்களில் மலிவு விலை உணவகங்களைத் திறக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

சென்னையில் மலிவு விலை உணவகங்களை அண்மையில் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த உணவகங்களின் வெற்றியை அடுத்துக் கோவை மாநகராட்சியிலும் திறக்க முயற்சிகள் நடைபெற்றன. கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலும் 15 உணவகங்களை திறக்கத் தீர்மானிக்கப்பட்டது. எந்தெந்த இடங்களில் திறக்கலாம் என்பது குறித்த திட்டங்களுடன் கோவை மாநகராட்சி ஆணையாளர் க.லதா, துணை ஆணையாளர் சு.சிவராசு, மாநகராட்சி நல அலுவலர் ஆர்.சுமதி, மாநகராட்சிப் பொறியாளர் (பொறுப்பு) கே.சுகுமார் ஆகியோர் இதற்கான அரசு அனுமதியைப் பெறுவதற்காக சென்னையில் திங்கள்கிழமை முகாமிட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பள்ளிக் கட்டடங்கள், குழந்தைகள் நல மையங்கள் உள்ளிட்ட இடங்களில் உணவகங்கள் அமைக்கப்பட உள்ளன. புலியகுளம் பகுதியில் அனைத்து உணவகங்களுக்குமான மைய சமையல் கூடம் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

புலியகுளம் பகுதியில் இருந்து அனைத்து உணவகங்களுக்கும் உணவுப் பொருள்களைச் சப்ளை செய்வதற்குப் பதிலாக, 5 மண்டலங்களிலும் தனித்தனியாக சமையல் கூடங்கள் அமைக்க அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் 5 மண்டலங்களிலும் சமையல் கூடங்கள் அமைக்கப்பட உள்ளன. உணவுப் பொருள்கள் முழுவதும் சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் இருந்தும், சிந்தாமணி கூட்டுறவு சங்கத்தில் இருந்தும், ஆவின் நிறுவனத்தில் இருந்து தயிரையும், தினசரி மார்க்கெட்டில் இருந்து காய்கறிகளையும் பெற்றுக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மாநகராட்சி ஆணையாளர் க.லதா கூறுகையில், மலிவு விலை உணவகங்கள் திறப்பது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்படுகிறது. விரைவில் உணவகங்களைத் துவக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

ஒவ்வொரு மலிவு விலை உணவகத்திலும் தினமும் 100 பேருக்கு உணவு தயாரிக்கப்பட உள்ளது. இந்த உணவு முழுவதும் விற்பனையாகிவிட்டால் நல்லது.

விற்பனை குறைவாக இருந்தால் என்ன செய்வது என்ற பிரச்னையும் மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் உள்ளது. மலிவு விலை உணவகங்களில் நஷ்டம் ஏற்பட்டால் அதை மாநகராட்சி வருமானத்தில் இருந்து சரி செய்யவும் அரசு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மலிவு விலை உணவகங்களை நடத்தும் பொறுப்பை மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் ஒப்படைக்கவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
 

அம்மா உணவகத்தில் கூட்டம் அலைமோதுகிறது ‘‘அரைவயிறு கஞ்சி குடித்த நான் இப்போது வயிறாற இட்லி சாப்பிடுகிறேன்’’ சின்னஞ் சிறு மழலைகள் மகிழ்ச்சி

Print PDF
தினத்தந்தி                  09.04.2013

அம்மா உணவகத்தில் கூட்டம் அலைமோதுகிறது ‘‘அரைவயிறு கஞ்சி குடித்த நான் இப்போது வயிறாற இட்லி சாப்பிடுகிறேன்’’ சின்னஞ் சிறு மழலைகள் மகிழ்ச்சி


சென்னையில் தினமும் கால்வயிறு கஞ்சி குடித்த ஏழை குழந்தைகள் பலர், அம்மா உணவகம் தொடங்கப்பட்டதிலிருந்து வயிறாற இட்லி சாப்பிடுவதாக தெரிவித்தனர்.

குழந்தைகளுக்கு கஞ்சி

பொருளாதாரத்தில் நலிவடைந்த பலர் தங்களுடைய வீட்டு குழந்தைகளுக்கு, காலையில் வேலைக்கு போகிற அவசரத்தில் காலை உணவு தயாரிக்க முடியாததால் முந்தைய நாள் சமைத்த சோற்றில் தண்ணீர் ஊற்றி கஞ்சியாக குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்கின்றனர்.இதனை குழந்தைகள் விரும்பி குடிக்காமல் பெயருக்கு கொஞ்சம் அரைவயிற்றுக்கு கஞ்சி குடித்துவிட்டு பள்ளிகளுக்கு சென்று வந்தனர். பல குடும்பங்களில் அது தான் நிலைமை. ஆனால் இப்போது 2 ரூபாய் அல்லது 3 ரூபாய் குழந்தைகளுக்கு கொடுத்தால், அருகில் உள்ள அம்மா உணவகத்திற்கு சென்று 2 இட்லி, சாம்பார் வாங்கி சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு செல்கின்றனர்.

சிறுவர்கள் கூட்டம்

இதனால் காலையில் பள்ளிக்கு செல்லும் சிறுவர், சிறுமியர் முதல் வீட்டில் இருக்கும் வயதான முதிர்ந்த தாத்தா, பாட்டிகளின் கூட்டமும் அம்மா உணவகத்தில் அலைமோதுகின்றன. பலநடுத்தர குடும்பத்தில் காலையில் கஞ்சி குடிப்பதற்கு பதிலாக 2 ரூபாய், 3 ரூபாய் கொடுத்தால் அம்மா உணவகங்களில் சாப்பிட்டு தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றனர். முதல்–அமைச்சர் ஜெயலலிதா முதன் முறையாக திறந்து வைத்த சாந்தோம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் நேற்று சிறுவர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு 3 ரூபாய் கொடுத்து சென்றதால், சிறுவர்கள் 3 இட்லி வாங்கி சாப்பிட்டனர். அப்போது ஒரு சிறுவன் அங்கிருந்த முதல்–அமைச்சர் படத்தை பார்த்து ‘‘இந்த அம்மா புண்ணியத்தில் தான் இட்லி வாங்கி சாப்பிடுகிறேன்,’’ என்று கூறியபடி ஜெயலலிதா படத்திற்கு முத்தம் கொடுத்தது நெஞ்சை தொடுவதாக இருந்தது. ஆங்காங்கே கூலிவேலை உட்பட பல்வேறு வேலைகளுக்கு சென்ற ஏழை பெண்கள் அம்மா உணவகத்தில் சாம்பார் சாதம், தயிர் சாதம் வாங்கி சாப்பிட்டுவிட்டு, ஒட்டுமொத்தமாக கூறியதாவது:–

‘‘சாம்பார் சாதம், தயிர் சாதம் நன்றாக ருசியாகவே உள்ளது, இருந்தாலும் மேலும் ஒரு ரூபாய் அதிகம் வாங்கி கொண்டு சாப்பாட்டுக்கு தொட்டுக்கொள்வதற்கு ஊறுகாய், துவையல், வத்தல், வடகம் போன்று எதாவது ஒன்று வழங்கினால் மேலும் சுவையாக சாப்பிடுவதற்கு வசதியாக இருக்கும்’’ என்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:–

அம்மா உணவகம்

கடந்த பிப்ரவரி 19–ந்தேதி முதல் கட்டமாக சென்னையில் 15 உணவகங்களை, முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். தொடர்ந்து ஒவ்வொரு பகுதிகளாக திறக்கப்பட்டு, தற்போது, 200 உணவகங்கள் இயங்குகின்றன. இவை அனைத்தும் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இயங்குகிறது. தினசரி காலை 7 மணி முதல் காலை 10 மணி வரையில் இட்லி, சாம்பாரும், பகல் 12 மணி முதல் மாலை 3 மணிவரை சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம் விற்பனை செய்யப்படுகிறது. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 1,000 விடுதிகளில் மீதி உள்ளவை 3 மாதங்கள் கழித்து, பல்வேறு கட்டங்களாக திறக்கப்படுவதாக கூறப்படுகிறது.

3 லட்சம் இட்லி

200 உணவகங்களிலும் சராசரியாக காலையில் 80 ஆயிரம் பேரும், மதியம் ஒரு லட்சம் பேரும் சாப்பிடுகின்றனர். இதில் காலையில் 3 லட்சம் இட்லிகளும், மதியம் 60 ஆயிரம் சாம்பார் சாதம், 40 ஆயிரம் தயிர் சாதம் விற்கப்படுகிறது. ஆக மொத்தம் 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் அம்மா உணவகங்களில் சாப்பிடுகின்றனர்.

சுயஉதவிக்குழு பெண்கள்


இனி புதிதாக அமைக்கப்படும் உணவகங்கள் தேவைப்பட்டால் இந்து சமய அறநிலையத்துறை, குடிசை மாற்று வாரியம், மெட்ரோ வாட்டர் இடங்களிலும் அமைக்கப்படும். உணவகங்களை மாநகராட்சியின் சுகாதாரத்துறை நிர்வாகம் செய்கிறது. உணவகங்களுக்கு சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் மகளிர் மேம்பாட்டு ஆணையம் மூலம் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு இரண்டு வகையாக பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. குறிப்பாக காலை 4 முதல் காலை 11 மணி வரையிலும், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் இரண்டு பிரிவுகளாக பிரித்து பணி ஒதுக்கப்படுகிறது.

உணவுகளின் தரம்


ஏப்ரல் 14–ந்தேதி தமிழ் புத்தாண்டையொட்டி புதிதாக அம்மா உணவகங்கள் திறக்கப்படவில்லை. அடுத்த 3 மாதங்களுக்கு பிறகு தான் அம்மா உணவகங்கள் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதத்திற்கு கூடுதலாக ஊறுகாய் மற்றும் துவையல் வழங்குவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சென்னை மாநகரில் சாந்தோம், டெய்லர்ஸ் ரோடு, புளியந்தோப்பு, அம்பத்தூர், பாடி உணவகங்களில் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். உணவகங்களுக்கு அரசு சார்பில் ரேஷன் அரிசி ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
 

கோவை மாநகராட்சியில் 15 இடங்களில் மலிவு விலை உணவகங்கள் அமைக்க திட்டம் இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம்

Print PDF
தினத்தந்தி        09.04.2013

கோவை மாநகராட்சியில் 15 இடங்களில் மலிவு விலை உணவகங்கள் அமைக்க திட்டம் இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம்


கோவை மாநகராட்சியில் 15 இடங்களில் மலிவு விலை உணவகங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக இடம் தேர்வு செய்யும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

மலிவுவிலை உணவகங்கள்

ஏழை எளிய மக்களின் நலனுக்காக சென்னையில் ஏற்கனவே 200 மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த உணவகங்கள் மூலம் இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.

இந்த மலிவு விலை உணவகங்கள் மற்ற மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும் என்று சட்டசபையில் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதைதொடர்ந்து கோவை மாநகராட்சி பகுதியில் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட உள்ளன.

சென்னையில் ஆலோசனை

இது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக கோவை மாநகராட்சி ஆணையாளர் லதா, துணை ஆணையாளர் சிவராசு மற்றும் அதிகாரிகள் சென்னை சென்று, உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

கோவையில் 15 இடங்களில் மலிவு விலை உணவகங்களை திறப்பது என்றும், எந்தெந்த பகுதிகளில் அமைப்பது, யாரை வைத்து நடத்துவது என்பது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:–

இடம் தேர்வு

ஏழை–எளிய மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்குவதற்காக கோவை மாநகராட்சி பகுதியில் மலிவு விலை உணவகங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த உணவகங்களை எந்தப்பகுதியில் திறப்பது தொடர்பாக இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள் எவை எல்லாம் காலியாக இருக்கிறது என்பது கணக்கிடப்பட்டு வருகிறது.

மேலும் காலியாக உள்ள கட்டிடத்தில் மலிவு விலை உணவகங்களை அமைக்கலாமா? அல்லது வேறு எங்காவது அமைக்கலாமா என்று ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் இந்த உணவகத்தை மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சுயஉதவிக்குழுக்கள்

இந்த திட்டத்தை மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்காக கோவை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் எவை என்பது கணக்கிடப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்படும் சுயஉதவிக்குழுக்கள் மூலம் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்.

தற்போது அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட 15 உணவகங்களில் முதற்கட்டமாக எத்தனை இடங்களில் உணவகங்களை அமைப்பது என்று ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த இடங்களில் உணவகங்களை அமைத்துவிட்டு மீதமுள்ள பகுதியில் பின்னர் அமைக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
 


Page 210 of 841