தினமணி 02.03.2013
விவாதமின்றி 35 தீர்மானங்கள் நிறைவேற்றம்
வால்பாறையில் நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் விவாதம் நடத்தப்படாமலேயே 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நகராட்சி உறுப்பினர்களின் மாதாந்திரக் கூட்டம் மன்ற அரங்கில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. தலைவர் சத்தியவாணிமுத்து தலைமை வகித்தார். ஆணையாளர் வெங்கடாசலம் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
கணேசன் (வி.சிறுத்தைகள்): வால்பாறை ஸ்டேட் வங்கியில் வார்டு உறுப்பினர்கள் சென்றால் அவமதிக்கின்றனர். எனவே வங்கிக் கணக்கை வேறு வங்கிக்கு மாற்ற வேண்டும்.
வீரமணி (வி.சிறுத்தைகள்): வால்பாறை ஸ்டேட் வங்கியில் நகராட்சியின் மொத்த இருப்புத் தொகை எவ்வளவு என்பதை அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.
சூரியபிரபா (திமுக): கூட்டுறவு காலனி ரேஷன் கடை முன் உள்ள தரைத் தளங்களை சீரமைக்க வேண்டும்.
செல்வம் (திமுக): முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பத்துடன் சென்றால், வட்டாட்சியர் அலுவலகத்தில் அதனைப் பெற மறுக்கின்றனர்.
சத்தியவாணிமுத்து (தலைவர்): அனைத்து வார்டு பகுதியைச் சேர்ந்தவர்களும் என்னிடம் கடிதம் அளித்தால் அதை பரிசீலனை செய்யப்படும்.
தனராஜ் (அதிமுக): கடந்த ஆட்சியில் நகராட்சி மூலமாக 2-ஆவது குடிநீர் திட்ட அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட ரூ. 2 கோடி 25 லட்சம் தொகைக்கு மேல், தற்போது மீண்டும் இந்த ஆட்சிக் காலத்தில் கூடுதல் தொகை இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
சுதாகர் (திமுக): நகர்மன்றக் கூட்டத்தில் ஆட்சியைப் பற்றி பேசக்கூடாது. இதையடுத்து திமுக, அதிமுக உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் கூட்டத்தில் முன் வைக்கப்பட்ட 35 தீர்மானங்களும் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டன.