Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

முதலில் சீரான குடிநீர்;பிறகு கட்டணத்தை உயர்த்தலாம்!

Print PDF

தினமணி                   28.02.2013

முதலில் சீரான குடிநீர்;பிறகு  கட்டணத்தை உயர்த்தலாம்!


திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர்க் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்ட தீர்மானம், மாமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பால் ஒத்திவைக்கப்பட்டது. "முதலில் தண்ணீர் வழங்குவோம்; அதன்பிறகு கட்டணத்தை தீர்மானிக்கலாம்' என மாமன்றத்தில் பொதுவான கருத்து எழுந்தது.

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற மாநகராட்சி மாமன்றத்தின் அவசரக் கூட்டத்தில் வைக்கப்பட்ட பொருள் விவரம்:

திருச்சி மாநகரில் அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்கும் வகையில் ரூ. 221 கோடியில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டு, பணிகள் நிறைவடையவுள்ளன.

இத்திட்டத்தின் மாநகராட்சி பங்குத் தொகை ரூ. 43.74 கோடி. பெறப்பட்ட கடன் தொகை       ரூ. 111.25 கோடி கடனில் தவணைத் தொகை செலுத்த வேண்டும்.

மேலும், ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி நிதியிலிருந்து திட்டப் பணிகளுக்கு இறுதிப் பட்டியல் தொகை வழங்க வேண்டும்.

எனவே, கடந்த 2008-ல் மாமன்ற ஒப்புதலின்படி குடிநீர் இணைப்புக்கான கட்டணங்களை உயர்த்த வேண்டும். வீட்டு இணைப்புகளுக்கு மாதம் ரூ. 200, வைப்புத் தொகை ரூ. 5000, குடிநீர் அல்லாத பயன்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் மாதம் ரூ. 600, வைப்புத் தொகை     ரூ. 10,000.

தொழிற்சாலைகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் மாதம் ரூ. 1000, வைப்புத் தொகை ரூ. 10,000.

இந்தக் கட்டண உயர்வு தொடர்பாக நடைபெற்ற விவாதம்:

மு. வெங்கட்ராஜ் (சுயே.): விலைவாசி உயர்வு கடுமையாக இருக்கும் நிலையில் நாமும் குடிநீர்க் கட்டணத்தை உயர்த்தினால் மக்கள் மிகவும் சிரமப்படுவார்கள். குடிநீர் விநியோகம் சீராகவும் இல்லை; சுத்தமாகவும் இல்லை.

மு. அன்பழகன் (திமுக): இதே திட்டத்தைச் சொல்லி ஏற்கெனவே வீட்டு இணைப்புகளுக்கு   ரூ. 75-ல் இருந்து ரூ. 100 உயர்த்தியிருக்கிறோம். இரண்டாம் முறையாக உயர்த்தலாமா? மக்களுக்கு சேவை அளிக்க வேண்டும் என்றால் அரசிடமிருந்து தேவையான தொகையை கேட்டுப் பெறலாம். இத்திட்டப் பணிகளை முழுமையாக முடித்து மக்களுக்கு தண்ணீர் கொடுத்த பிறகு கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கலாம்.

ஜெ. சீனிவாசன் (அதிமுக): விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம். அதிமுக அரசு எந்த விதத்திலும் காரணம் இல்லை. அதேபோல, இந்தத் திட்டமும் கடன் வாங்கிச் செய்வது என்று முடிவு செய்தது திமுக அரசுதான். கடன் வாங்குவது அவர்கள்; பிறகு அதைக் கட்ட வேண்டும் என்ன நிலை வரும்போது அதிமுக ஆட்சியில் இருக்கிறது.

தி. ராமமூர்த்தி (மதிமுக): குடிநீர் முழுமையாக வழங்கியபிறகே கட்டணம் குறித்துப் பேச வேண்டும். எனவே இத்தீர்மானத்தை ஒத்திவைக்க வேண்டும்.

அ. ஜெயா (மேயர்): பணிகளை முடித்துவிட்டு கட்டணத்தை நிர்ணயம் செய்யலாம். அதுவரை வேறு வகையில் நிதி திரட்ட யோசிக்க வேண்டும்.

இதைத்தொடர்ந்து, குடிநீர்க் கட்டண உயர்வு தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல, குடிநீர் இணைப்புகளுக்கு அளவுமானி வைப்பது தொடர்பாக கொண்டு வரப்பட்ட அடுத்த தீர்மானமும் ஒத்திவைக்கப்பட்டது.

Last Updated on Friday, 01 March 2013 09:13
 

உதகை நகர்மன்றக் கூட்டத்தில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

Print PDF
தினமணி                   28.02.2013

உதகை நகர்மன்றக் கூட்டத்தில்  முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்


காவிரி நதி நீர் ஆணையத்தின் தீர்ப்பை அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுத்ததற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து, உதகை நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உதகை நகர்மன்ற மாதாந்திரக் கூட்டம் அதன் தலைவர் சத்தியபாமா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

ஆர்.மாதவன் (அ.தி.மு.க.): உதகை நகரில் பெரும்பாலான பகுதிகளில் அனுமதியின்றி நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது கவலைக்குரியது. நகராட்சியின் அனைத்துப் பகுதிகளுக்கும் நிலத்தடி நீர் விநியோகிப்பவர்கள் மூலமாக இலவசமாக தினமும் தலா 2 லோடு தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சம்பத் (அ.தி.மு.க.): உதகை நகரில் பல இடங்களில் கழிவு நீர்க் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஜே.ரவிக்குமார் (தி.மு.க.): குப்பை முறையாக அகற்றப்படாததால் நகரமே குப்பைக்கூளங்கள் நிறைந்ததாக மாறிவிட்டது. நகரில் தெருவிளக்குகள் எரியாததால் திருட்டுகளும் அதிகரித்துவிட்டன. குடிநீர்த் தட்டுப்பாடு உள்ளதால், மூன்றாவது குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க வேண்டும்.

ஆர்.சிவகுமார் (ஆணையர்): வனப்பகுதிகளையொட்டியுள்ள இடங்களில் மட்டும் குழாய் பதிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. வனத்துறை அனுமதி கிடைத்ததும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு விரைவில் முடிக்கப்படும்.

கோபாலகிருஷ்ணன் (துணைத் தலைவர்): உதகை காந்தி மைதானம் மிக மோசமான நிலையில் உள்ளது. இதை அரசு மேனிலைப் பள்ளி நிர்வாகத்திடமிருந்து திரும்பப் பெற்று நகராட்சியே பராமரிக்க வேண்டும்.

பாபு (தே.மு.தி.க.): நகரின் பல்வேறு இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆட்டோ ஸ்டேண்டுகளால் பொதுமக்கள் தங்களது வாகனத்தைக்கூட நிறுத்த முடியாத நிலை உள்ளது என்றார்.

இதற்கிடையே, 30-ஆவது வார்டு காங்கிரஸ் உறுப்பினர் வினோதா, தங்களது வார்டில் எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் நகர்மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு வந்த கவுன்சிலர் வினோதா, அந்தப் பகுதி தனது வார்டில் இல்லையென மறுத்ததால், அதற்கான ஆதாரங்களைக் காட்டிய அப்பகுதி மக்களை மற்ற உறுப்பினர்கள் சமாதானப்படுத்தி அனுப்பினர்.
Last Updated on Friday, 01 March 2013 08:53
 

கிருஷ்ணகிரி நகராட்சி அவசர கூட்டம்

Print PDF
தினமலர்           28.02.2013

கிருஷ்ணகிரி நகராட்சி அவசர கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சியில் நடந்த அவசர கூட்டத்தில், "காவிரி நடுவர் மன்ற தீர்ப்பினை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட முயற்சிகள் எடுத்த' தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றினர்.

கிருஷ்ணகிரி நகராட்சியின் அவசர கூட்டம் நகராட்சி கூட்டரங்கில் நடந்தது. நகராட்சி தலைவர் தங்கமுத்து தலைமை வகித்தார். கமிஷனர் (பொ) இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

"காவிரிநடுவர் மன்ற தீர்ப்பினை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட்டு தமிழக மக்களின் உரிமையை நிலை நாட்டி வருங்கால தமிழக மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்த்து, விவசாயிகளின் வாழ்வில் ஒளி ஏற்றி சாதனை படைத்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

தீர்மானம் குறித்து நகராட்சி துணை தலைவர் வெங்கடாசலம், கவுன்சிலர்கள் மாரியப்பன், சோபன்பாபு, சரஸ்வதி ஆகியோர் பேசினர். தொடர்ந்து, தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

Last Updated on Friday, 01 March 2013 07:56
 


Page 229 of 841